Thursday, August 25, 2016

பெரியப்பா

1970... ஏற்காட்டில் 5வது வகுப்பு படித்துக்கொண்டிருந்த என்னை காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்த
பெரியப்பா 'என்னடா! எங்க வீட்ல இருந்து படிக்கிறியா?' என கேட்க உடனே அப்பாவிடம் கெஞ்சி பெரியப்பாவுடன் கிளம்பி காஞ்சிபுரம் புனித அந்திரசனில் (St' Anderson) ஆறாப்பு சேர்ந்தேன்.
பெரியப்பா ஜாலியானவர். நம் மீது ரொம்ப அக் கரையுடையவர். ஆனால் கண்டிப்பு அதிகம். சுள்ளென கோபம் வரும். தாலுகா ஆபிஸில் ஜோலி. நேர்மையானவர். லஞ்சம் வாங்க மாட்டார். கஞ்சிவரம் வந்தவுடன் தான் அவரது கண்டிப்பு தெரியவந்தது. வகுப்பில் மூன்றாம் ராங்க் வாங்கினாலும் 'பளார்' தான். மாலை ஒரு மணி நேரம் விளையாட்டு, கைகால் அலம்பி படிக்க உட்கார வேண்டும் என எல்லாமே டயத்துக்கு நடக்க வேண்டும். ஏதோ விளையாட்டுக்காக தலையை ஆட்டப்போய் என்னை நிஜமாகவே கஞ்சிவரம் அனுப்பிய அம்மா அப்பாவை பிறகு திட்டினேன்.
ரசம் சாதம் துவையல் அல்லது தேங்கா சட்னி என தினமும் இரவு வெரைட்டியாக இருக்க வேண்டும் பெரியப்பாவுக்கு. துவையலில் உப்பு கூட இருந்தாலும் குறைவாக இருந்தாலும் ரகளை தான். இட்லி இன்னும் கொஞ்சம் வேகனும், உப்புமா அடிபுடிச்சிருச்சு, தோசை தீஞ்சுடுச்சு, மோர் புளிக்குதே, கடுகு பத்தாது.. ம்ஹும் இதி நாக்கு ஒத்து..இப்படி அடுக்கடுக்காக குற்றங்களை சுமத்தி தட்டை சர்ரரென தள்ளி விடுவார் பெரியம்மா பக்கம். 'இப்புடு ஏமி பாவா செப்பேவு! யப்பா தேவுடா!' என பெரியம்மாவும் பதிலுக்கு சவுண்டு விட, கொஞ்சம் அறண்டு விடுவார். உடனே கோபம் ஜிவ்வென தலைக்கு ஏற, அடுத்த சில மணி நேரங்கள் சாப்பாடு, காபி எதுவும் வேண்டாம் என ஸ்ட்ரைக் செய்து, பெரியம்மா அவரிடம் கெஞ்சி, அழுது இரவு சாப்பிட வைப்பதற்குள் ஒரே சத்தம்.. ஆர்ப்பாட்டம்..ரெண்டு தடவை பாத்ரூம் போய் வந்துவிடுவேன்.
சின்ன பையனான என்னை தனம் பெரியம்மா அடிக்கடி சினிமா கூட்டிப்போவார்கள். வியட்நாம் வீடு, நவக்கிரகம், சங்கமம், பத்தாம் பசலி, என் அண்ணன், காவியத்தலைவி, எங்கள் தங்கம், கண்மலர் என எக்கச்சக்கமான படங்கள் பார்த்தேன். 10 வயதில் பார்த்த படங்கள். எம்.ஜி.ஆர் கட்டம் போட்ட கைதி உடையில் சிறையில் கல் உடைப்பது, சௌகார் ஜானகி வக்கீல் உடையில் வருவது, 'அனங்கன் அங்கதன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா' என சிவகுமாரும் குமாரி பத்மினியும் தக்காபுக்காவென ஆடும் காட்சிகள் எல்லாம் இப்போதும் மனதில் ஓடுகிறது.
அடுத்த வருடம் லீவுக்கு வந்தவுடன் ஏற்காடு புனித சூசையப்பரில் ஏழாம் வகுப்பு சேர்ந்து பெரியப்பாவிடமிருந்து தப்பித்தேன். பிறகு அவரை வருடமொரு முறை பார்ப்பதோடு சரி.
80களில் திருச்சிக்கு ஒரு முறை வந்திருந்தார் பெரியப்பா. தினமும் நான் Ganapathi Subramanianனுடன் சி.ஏ. பரிட்சைக்கு பொன்மலை ரெயில்வே ஒர்க்‌ஷாப்பில் படிப்பதுண்டு. காலை 11 மணிக்கு ரெயில்வே கேண்டினில் ரவா தோசை, உப்புமா, கேசரி, மைசூர் பாக் என எல்லா ஐட்டங்களும் இருபது பைசா தான். 'பெரியப்பா! ரெயில்வே கேண்டின் வற்ரீங்களா? அட்டகாசமா இருக்கும்' என சொன்னதும் கிளம்பி விட்டார். சைக்கிள் காரியரில் அவரை உட்காரவைத்து டோல்கேட் வழியாக இருபது நிமிடம் லொங்கு லொங்கென சைக்கிளை மிதித்து கிச்சடி, மைசூர் பாக், மிக்சர், காபி வாங்கிக்கொடுத்தேன். அன்று பார்த்து பலகாரங்கள் எல்லாமே இரட்டிப்பு ருசி. 'ரொம்ப நல்லா இருக்கு' என சொல்வாரென அவர் முகத்தை பார்த்தேன். எல்லாம் சாப்பிட்ட பின்.. 'ம்ஹூம்! ஒக்கட்டி கூட பாக லேதுரா' என என்னை வெறுப்பேற்றி, தட்டில் மீதியிருந்த மிக்சர் தூளை வாயில் போட்டுக்கொண்டு, உதட்டோரத்தில் ஒட்டியிருந்த சேமியாவை நாவால் இழுத்துக்கொண்டார்.
அன்னூரில் நடந்த என் மாமா பையன் பன்னீர் Pannirselvam Veeraகல்யாணத்தில், முதல் நாள் இரவே சமையல் கொட்டகையில் புகுந்த அவர், தட்டில் சூடாக ஜாங்கிரியுடன் ஜீராவை நக்கி சாப்பிட்ட படி 'ஹூம்.. கல்பதம் வரலையே ஜீராவுக்கு.....இதென்ன ஜாங்கிரி!' என சமையல்கார்ருக்கு டோஸ் விட்டார். எந்த பண்டமும் வாய்க்கு ருசியாக இருக்க வேண்டும். வெரைட்டி அவசியம் அவருக்கு.
பணியில் நேர்மையுடனும் கறாராகவும் இருந்ததால் தாசில்தார் வரை தான் வந்து ரிடையர் ஆனார். ஃப்ளெக்சிபிளாக இருந்திருந்தால் கடைசி வருடம் டெபுடி கலெக்டராகியிருப்பார். பையன் மற்றும் பேரனுடன் ஆவடியில் செட்டிலானார். நேரத்திற்கு சாப்பாடு, ருசியில் குறைவில்லாத சமையல் என அவரது ராஜாங்கம் தொடர்ந்தது.
சில வருடங்கள் முன் மனைவி (தனம் பெரியம்மா) மற்றும் பையன் (50) இருவரும் அடுத்தடுத்து திடீரென காலமாகி விட, பேரன் ரவிபாலா (34) தான் தன் மனைவி மற்றும் அவனது அம்மாவுடன் தாத்தாவை பார்த்துக்கொண்டான். அதே கெத்துடன் பெரியப்பா இருந்தார். மூத்தவரான இவருக்கு கூட பிறந்த தம்பிகள் மூன்று பேர். என் அப்பா தான் கடைசி தம்பி.
தலை மயிரை நடு வகிடெடுத்து தூக்கி வாரி சீவி, நெற்றியில் பெரிய நாமம். ட்ரிம் செய்யப்பட்ட மீசை. அந்தக்கால சிவாஜி, எம்.ஜி.ஆர் மாதிரி நெஞ்சு வரை பாண்ட், சட்டையை இன் செய்து முழங்கை வரை மடித்து, தேவ் ஆனந்த் ஸ்டைலில் கழுத்து வரை பட்டன் போட்டு, சிவந்த மேனியுடன் பந்தாவாக வலம் வருவார்.
அவரது தம்பிகள் மூவரும் 80 தாண்டியவுடன் ஒவ்வொருவராக இறந்து விட்டார்கள். 5 வருடங்கள் முன் என் அப்பா 83 வயதில் இறந்தபோது சென்னையிலிருந்து மாருதி கார் முன்னிருக்கையில் அமர்ந்தவன்னம் திருச்சி வந்து காரியங்களில் கலந்துகொண்டார்.
சென்ற வருடம் என் சகோதரியின் மகள் திருமணத்திற்கு திருச்சி வந்திருந்தவர் (95) ஜம்மென்று மணமேடைக்கு வந்து வாழ்த்தினார். கையோடு கீழ்த்தளம் போய் சாப்பாடு ஃபுல் கட்டு கட்டி போட்டோ எடுத்துக்கொண்டார். நல்ல வேளை சாப்பாட்டை குறை சொல்லவில்லை. அடுத்த அரை மணியில் வழக்கம்போல கார் முன் இருக்கையிலிருந்து டாட்டா காட்டியபடி சென்னை கிளம்பினார். போற வழியில் வண்டியை அங்கங்கே நிறுத்தி டீ, காபி, பிஸ்கட், டிபன் என ஆசையாக வாங்கி சாப்பிட்டார். இந்த வயதிலும் அவரை அருமையாக கவனித்துக்கொள்ளும் பேரன் ரவிபாலாவை நாங்கள் பாராட்டினோம்.
சென்ற மாதக்கடைசியில் லேசாக மக்கர் பண்ண ஆரம்பித்தார். வாயை கட்ட முடியாமல் ஒரே கலாட்டா. பொறுமைசாலியான பேரன் ரவிபாலாவிற்கே டென்ஷன் அதிகமாகி acidity வந்துவிட்டது. மனநோய் மருத்துவர், தூக்க மருந்து என அவரை கட்டுப்படுத்த முயன்ற ரவிபாலா கடைசியில் 96 வயதான அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தான். அடுத்த சில நாட்களில் அங்கேயும் ஸ்ட்ரைக். சாப்பாடு பிடிக்கவில்லையாம். 'தம்பி ரவி பாலா! உனக்கு புண்ணியமாப்போகும். அவர் டேஸ்ட்டுக்கு எங்களால் சமைக்க முடியாது. உடனே பெரியவரை அழைச்சிட்டுப்போப்பா!' என அவர்கள் கெஞ்ச, கபாலி பாண்டிச்சேரியை விட்டு திரும்பவும் மலேஷியா வந்து சேர்ந்த மாதிரி வெற்றிகரமாக வீடு வந்து சேர்ந்தார்.
எனக்கு சாப்பிட அது வேண்டும்.. இது வேண்டுமென மறுபடியும் கட்டளைகள் பறக்க, ரவிபாலா கடைக்கு ஓடினான். பெரியப்பாவின் 'டோனி லீ' டான் ஆட்சி தொடர்ந்தது. இந்த வயதில் அவருக்கு வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளுமாவென பயம் அவனுக்கு. பாவம் இன்னும் மூன்று வருடம் அவர் பத்திரமாக இருந்து நூறாண்டு காலம் வாழ்ந்து விடவேண்டும் என அவன் விரும்பியது நடக்கவில்லை.
தன் 34 வயதில் தந்தையை இழந்து அடுத்த 10 வருடங்கள் தாத்தாவை பார்த்துக்கொண்ட Ravibaala Haribabu ரவிபாலா! பாராட்டுக்கள் உனக்கு! இனி சகல சௌபாக்கியங்களுடன் உனது IT துறையில் நீ மேன்மையடைய வேண்டும்.
சென்ற வாரம் நாலைந்து நாட்கள் பெரியப்பாவுக்கு சரியாக சாப்பாடு இறங்கவில்லை. படுத்தே இருந்தார். காபி மட்டும் ஒரு வாய் சாப்பிட்டார். தினமும் அரை மணி நேரம் காலாற நடப்பது நின்று விட, பேச்சு குறைந்து, நாடியும் மெல்ல இறங்க, கோவிந்த ராஜுலு என்கிற என் பெரியப்பா 97ஐ எட்ட இன்னும் 3 மாதங்கள் பாக்கி இருக்க, அதிக அவஸ்தைப்படாமல் கண்ணை மூடினார்.
பெரிய்ய்ய்யப்பாடா...

No comments:

Post a Comment