Thursday, August 25, 2016

அய்யம்பிள்ளை

கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் திருச்சியில் நான்,Ganapathi Subramanian மற்றும் இந்த நண்பன் மூவரும் ஒரே பார்ட்னர்ஷிப் firm இல் ஆர்டிகிள்ஸ் செய்தோம். கணபதி தான் இவனை எனக்கு அப்போது அறிமுகப்படுத்தியவன்.
மாநிறம்.. ஆறடி உயரம்.. பெரிய்ய்ய்யய பெல்பாட்டம் பாண்ட், ஒருதலை ராகம் சங்கர் மாதிரி ஸ்டெப் கட்..சதா ஜோக்கடித்துக்கொண்டும் அரட்டையடித்துக்கொண்டும் வேலை செய்பவன்.
கரூர், சேத்தியாதோப்பு, புதுக்கோட்டை, காரைக்குடி என பல இடங்களில் இவனுடன் ஆடிட் போகும்போதெல்லாம் ஆடிட், வயிறார சாப்பாடு, நைட் ஷோ சினிமா என இவனுடன் இனிமையாக கழித்த பொழுதுகள் பல.
நிறைய சுவாரசியமான சம்பவங்களை பாங்க்
ஆடிட்டில் நாங்கள் கண்டதுண்டு. ஒருவர் அக்ரிகல்ச்சர் லோன் அப்ளை செய்வார். அவருக்கு மூன்று பேர் கியாரண்டி கொடுப்பார்கள். அடுத்த அப்ளிகேஷனை பார்த்தால் கியாரண்டி கொடுத்தவர் லோன் கேட்க, மீதி மூன்று நண்பர்கள் கியாரண்டி. இப்படி ஒரே குடும்பத்தவர்கள் லோன் வாங்குவது தெரிய வந்தது. சில வியாபாரங்களின் முதலீடுகளுக்கு பார்ட்னர்கள் தங்கள் source காண்பிப்பதற்காக சுமார் 25 உறவினர்களிடமிருந்து தலா பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக லோன் வாங்கியதாக கணக்கு காண்பிப்பதை பார்ப்போம். SIDCO லோனுக்கு இல்லாத கம்பெனிக்கு, வாங்காத மெஷினுக்கு டெப்ரிசியேஷன் ஸ்டேட்மென்ட் பார்த்து மலைத்துப்போவோம்.
சேலம் அருகே ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் இவன். விவசாய குடும்பம். அப்பா ஏதோ உடையார். ஆனால் நிச்சயம் முயற்சி உடையார். அதனால் தான் பையனை சி.ஏ.ஆக்கினார். திருச்சி முருகன் தியேட்டர் அருகே ஒரு மேன்ஷனில் தங்கிக்கொண்டு சி. ஏ. படித்துக்கொண்டிருந்த இவன் படிப்பில் சூரன். குறிப்பாக Accountancy மற்றும் taxation சப்ஜெக்ட்டிகளில் fundamental இல் இவனை அடிச்சுக்க முடியாது. நிறைய எனக்கு சொல்லித்தந்திருக்கிறான். பின்னர் ஆண்டார் தெருவுக்கு ஜாகையை மாற்றிக்கொண்டவுடன் அங்கே அவனுடைய அறையில் கம்பைன்ட் ஸ்டடீஸ் சில மாதங்கள் செய்தோம்.
திருச்சியில் பிஷப் ஹீபர் ஸ்கூலில் சி.ஏ. பரிட்சை நடக்கும். திருச்சி, சென்னை போன்ற சென்டர்களில் எழுதினால் பாஸ் செய்வது கஷ்டம் என்று ஆராய்ச்சி செய்து சேலம், பெங்களூர் போன்ற சென்டர்களில் எழுதினால் பாஸ் செய்வது சுலபம் என முடிவெடுத்து நிறைய நண்பர்கள் பரிட்சை சமயத்தில் திருச்சியை விட்டு கிளம்பிவிடுவார்கள். இவனும் சேலம் போனான் என நினைக்கிறேன்.
நான் ஆற அமர சி.ஏ பாஸ் செய்ய முடிவெடுத்தபோது (மெய்யாலுமே 😃) இவன் சட்டு புட்டென கணபதியுடன் பாஸ் செய்தவன். கையோடு சேலத்தில் உடனே பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தான்.
கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக அபுதாபியில் தனது சொந்த ஆடிட் firm நடத்திக் கொண்டிருக்கும் இவனை வேலை நிமித்தம் நான் அபுதாபி போகும்போதெல்லாம் பார்ப்பதுண்டு. தனக்குக்கீழ் சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நல்ல சம்பளமும் கொடுத்துக்கொண்டு வெற்றிகரமாக இயங்குகிறான்.
சென்ற வருடம் நான் இரண்டு நாட்கள் அபுதாபி போயிருந்தபோது இவனிடமிருந்து போன் 'வீட்டுக்கு வற்ரியா மாப்ள!' என. 'இல்லப்பா! ஒரே ஜலதோஷம்..ஹோட்டல்லயே தால் ரைஸ் சாப்ட்டுக்கறேன்' என்று சொன்ன என்னை இடைமறித்து, 'வீட்டுக்கு போய்ட்டிருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்துல ரெடியா இரு.. உன் ஜலதோஷத்தை சரி பண்றேன்' என்று சொல்லிவிட்டான். மனைவி ஊருக்கு போயிருந்ததால் வீட்டில் தனது அசிஸ்டென்ட்களுடன் தங்கியிருந்தான்.
அபுதாபி நகருக்கு வெளியே 'யஷ் தீவு' என்ற இடத்தில் நான் தங்கியிருந்தேன். காரில் என்னை ஏற்றிக்கொண்டவுடன் வீட்டிற்கு போன் செய்து 'ஹலோ! சேகர்.. குக்கர்ல ரைஸ் வச்சிட்டு புளிய கறைங்க!' என்றான். . நல்ல டிராஃபிக். அடுத்த அரை மணியில் போன் வந்தது.
'சார் புளி ஊறிடுச்சு'.
'சின்ன சைனீஸ் பூண்டு தோலோட நசுக்குங்க, பின்ன அதை புளித்தண்ணில போட்டு கேஸை பத்த வைங்க'
'ஆச்சு சார்'
'மிளகு பத்து பதினைஞ்சு, சீரகம் ஒரு ஸ்பூன் நல்லா தட்டி போடுங்க'
அபுதாபி நகரில் நுழைந்தோம். போன்..
'சார் புளி கொதிக்குது'
'மல்லி கட்டு ஃப்ரிட்ஜில இருக்கு.. அதுல காவாசிய தண்ணில கழுவிட்டு பொடியா நறுக்கி போடுங்க.. அப்பறம் 'மேளம்' ரசப்பொடி ஒரு ஸ்பூன், 'ஈஸ்ட்மேன்' மொளகாப்பொடி அரை ஸ்பூன், அரை ஸ்பூன் மஞ்சத்தூள், நாலு வர மிளகாய் எல்லாம் போடுங்க'
'சார்! மொளகாப்பொடி போட்டதுக்கப்பறம் கூட வர மொளகாயா'
'ஆமா'
'பத்தி பதினைஞ்சு மிளகு வேற போடச்சொல்லியிருக்கீங்களே!
'சொல்றத செய்ங்க'
'ஆச்சு சார்'
'கருவேப்பிலை குச்சியோட மூனு செடி அப்பிடியே போடுங்க'
'அது உள்ளாற போகாமெ நிக்குமே'
'நிக்கட்டும்.. காரை பார்க் பண்ணிட்டிருக்கேன்.. அரை ஸ்பூன் எண்ணையில கடுகு, உ. பருப்பு தாளிச்சு போடுங்க. மேல திரும்பவும் பெருங்காயம் போடுங்க. உப்பு நான் வந்து போட்டுக்கறேன்'
'இன்னும் எவ்ளோ நேரம் கொதிக்கனும் சார்'
'நா வற்ர வரைக்கும்'
அவன் வீட்டில் நுழையும்போது எனக்கு ஜலதோஷம் மூக்கிலும் கண்ணிலும் ஜலமாக கொட்டியது. பெரிய தட்டில் சூடான சாதத்தை போட்டு வைத்திருந்த அசிஸ்டென்ட் மண்டயிட்டவாறே ரசத்தை மண்டியோடு தட்டில் கொட்டினான்.
அடுத்த பதினைந்து நிமிடம் மிளகு கார மணத்துடன் சுடச்சுட ரச சாதத்தை ஏதோ ஒரு தொவையலுடன், எதிரே பாண்டியராஜன் படம் பார்த்துக்கொண்டே நண்பனுடன் சாப்பிட்டு முடித்தேன்.. அதுவும் இரண்டு ரவுண்டு ரசஞ்சாதம்.
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஹோட்டலில் இறக்கி விட்ட நண்பனை கட்டி பிடித்து 'ரசஞ்சாதம் செம்ம மாப்ள!' என விடை பெற்றுக்கொண்டேன்.
மறுநாள் காலை எழும்போது ஜலதோஷம் இருந்த இடம் தெரியவில்லை..
என் வயது தான் இவனுக்கு. தாத்தாவாகி ஒரு வருடத்திற்கு மேலாகிறது.
அய்யம்பிள்ளை! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்ளே!

No comments:

Post a Comment