Thursday, August 25, 2016

படத்துக்குக்கதை

முன்கதை சுறுக்கம்:
இசக்கியின் மீன்பாடி வண்டியை சுயம்புலிங்கத்தின் வீட்டுத்தோட்டத்தில் யாரோ பார்த்து விட்டதாகவும், போலீஸ் மறுபடியும் இந்த வழக்கை தூசி தட்டி எடுக்கலாமென சுயம்புலிங்கம் வந்து சொல்லவும் கலவரமடைந்தான் இசக்கி. போலீஸ் அடித்தாலும் ஒன்றும் தெரியாதென சொல்லச்சொன்னான் சுயம்புலிங்கம். ஆனால் தினம் பயந்து பயந்து தன்னால் மன உலைச்சலுடன் இருக்க முடியாதென்பதால், இசக்கி போலீசிடம் உண்மையை ஒப்புக்கொள்ள முடிவெடுத்தான். அதாவது சம்பவத்தன்று பையனின் பிணத்தை சுயம்புலிங்கம் வீட்டிலிருந்து அகற்றி அந்த இடத்தில் இறந்த கன்றுக்குட்டியை புதைத்து விட்டு , சுயம்புலிங்கத்தின் உதவியுடன் பையனின் உடலை தன் மீன்பாடி வண்டியில் கொண்டு போய், போலீஸ் ஸ்டேஷன் கட்டப்படும் கட்டிட அஸ்திவாரத்தினுள் புதைத்த உண்மையை இசக்கி ஒப்புக்கொள்ள, அடுத்த சில நாட்களில் அந்த புதிய காவல் நிலையத்தை புல்டோசர் இடிக்க ஆரம்பித்தது.
இனி கதை...
காவல் நிலையத்தைச்சுற்றி ஒரே பத்திரிக்கையாளர்கள், டி.வி நிருபர்கள். கட்டுக்கடங்காத பொது மக்கள் கூட்டம் வேறு. சமாளிக்க போலீஸ் தடியடி தேவைப்பட்டது. புல்டோசர்கள் மும்முரமாக இயங்கி மண்ணைத்தோண்ட சுற்றிலும் நின்று கொண்டு மக்கள் ஆவலுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு பக்கம் சுயம்புலிங்கம் தன் தோளில் சாய்ந்து அழுதபடி நின்ற ராணியை சமாதானப்படுத்தினான் 'ஏட்டி, பயப்படாதெங்கென்! நமக்கு இப்ப கெரகம் புடிச்சி நிக்கி.. பாப்பம்..எல்லாஞ்சரியாயிடும்'. உடனே வெடித்தாள் ராணி 'அடப்போய்யா! கண்ணுக்குட்டிய போலீஸ் தோண்டி எடுத்தப்பவே ஒத்துக்கிடுங்கன்னு சொன்னேன்ல!. இப்ப மூனு வருசங்கழிச்சு திரும்ப ஒன்னொன்னா நோண்டி எடுக்கான். அந்த ஏறப்பாளி நாயி பொணத்த இப்ப வெளிய எடுத்தா உனக்கு செயிலுதா. கேபிள் டீவில என்ன தான் பாக்குறீயளோ! இதுக்கு வழியேதும் காங்கல?'
அந்தப்பக்கம் அழுதபடி பெண் ஐ.ஜி, கணவனின் கைகளை கெட்டியாக பற்றியபடி நிற்க, 'இல்லே..வோணா..அள்வாதெ.. நம்போ பையனுக்கூ ஒன்னும் ஆகாதுன்னு வேண்டிக்கோ' என சௌகார்பேட் தமிழில் மனைவியை சமாதானப்படுத்துகிறார் போலீஸ் கணவர்.
'அதெப்பிடி பொணத்த அஸ்திவாரத்துல போட்டான், இஞ்சினீருக்கு தெரியாமெ!' போன்ற விதவிதமான பேச்சுக்கள்..
திடீரென துர்நாற்றம் வீச, போலீஸ்காரர்கள் மூக்கை பொத்திக்கொள்கிறார்கள். குழியில் இருந்து மண்ணை அகற்றி அந்த மூட்டை மெல்ல வெளியே எடுக்கப்படுகிறது. ராணி கலவரத்தைடன் சுயம்புலிங்கத்தை பார்க்க, அவன் வழக்கம்போல கண்களால் அவளை சமாதானம் செய்கிறான். காமெரா அப்படியே சுற்றி... (ச்சே... இது கதையாச்சே! சினிமா கெடையாதே! சாரி..மறந்துடுச்சு)
மூட்டை பிரிக்கப்பட, உள்ளே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட இன்னொரு மூட்டை... பெண் ஐ.ஜி கண்களை மூடியபடி சாமியை வேண்ட, ஜிப்பாக்கணவர் கண்ணாடியை கழற்றி வெற்றுப்பார்வையுடன் பார்க்க, டீவி காமிராக்கள் லென்சை ஜூம் பண்ண, கூட்டத்தை சமாளிக்கும் போலீஸ் கூட ஆவலுடன் எட்டிப்பார்க்க, மெல்ல அந்த மூட்டையை புரட்ட..
.
.
.
.
.
.
.
.
.
.
இறந்த 'கன்றுக்குட்டி' ஒன்று 'ச்சொத்'தென வெளியே வந்து விழுந்தது.
'அடப்போங்கைய்யா உங்களுக்கு வேற சோலியே இல்லையா! ஒரு வாரமா ஊர்ல ஒரு ரேப்பு இல்ல.. அறுவா வெட்டு இல்ல..கெரசீன் ஊத்திக்கொளுத்தல.. ஏர்போர்ட்ல வச்சு அறையல..இங்கியாவது ஏதாவது நியூஸ் கெடைக்கும்னு பாத்தா..' என ஊடக நிருபர்கள் சலிப்புடன் நகர்ந்தார்கள்.
பெண் ஐ.ஜி திகிலடைந்தாலும் தன் பையனின் பிணம் இல்லையென்ற திருப்தி முகத்தில். ராணி ஆச்சரியத்துடன் சுயம்புலிங்கத்தை பார்க்க அவன் யாருக்கும் தெரியாமல் அவளைப்பார்த்து புன்னகைத்தான். இசக்கி நம்பமுடியாமல் சுயம்புவை பார்த்தான். பத்திரிக்கைகள் போலீசை கிழிகிழியென கிழித்து விமரிசித்தன.
'பேசாமெ, அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியா தொந்திரவு கொடுத்ததே அந்த கண்ணுக்குட்டிதான்னு சொல்லி கேசை முடிக்கலாம்லா!' என யாரோ ஒரு அரசியல் ஞானி டீ.வி 'நேர்படப்பேசு' வில் சொல்லி செமத்தியாக தமிழிசையிடமும் விஜயதாரிணியிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டார்.
'ஏட்டி ராணி! நாஞ்சொல்லுதேன்! நமக்கு ஒன்னும் பயமில்ல .. இனி குறுக்க சாஞ்சு கெடக்காம்.. '
'அப்ப அந்த இசக்கிப்பய வாக்குமூலம் என்னாச்சு? என்னய்யா செஞ்தீரு அந்த பையனோட பொணத்த?'
'அத விடு புள்ள! பொறவு இசக்கி வாய தொறக்கான்னு நெனைச்சேன். அதான் ரெண்டாந்தடவையும் கண்ணுக்குட்டிய பொதச்சோம்ல!' சுயம்புலிங்கம் சாரத்தை அவிழ்த்து கட்டிக்கொண்டான்.
'பொதைக்கறதுக்கு இன்னும் எத்தினி கண்ணுக்குட்டி வச்சிருக்கீய? போவட்டு...பேசாமெ மாட்டுப்பண்ணை ஒன்னு தொறந்துடும்வே'..
பெண் ஐ.ஜியை அரசு கண்டித்து நீண்டகால விடுப்பில் போக உத்தரவிட அவர் அமெரிக்கா கிளம்பினார். கூடவே சௌகார்பேட்டும்...
ஊருக்கு வெளியே மலைப்பகுதி.... பெண் ஐ.ஜி தன் கணவருடன் சுயம்புலிங்கத்தை மறுபடியும் தனியாக சந்திக்க வந்திருந்தார். கணவர் 'பெத்தெ புள்ளேயெ நாங்க சர்யா வள்க்கலே! உங்களெ ரொம்போவே கொட்மெ பட்த்தீட்டோம். இப்போ அம்ரீக்கா போறோம்' என்று சொல்ல, தொண்டையை கனைத்துக்கொண்டு...எச்சிலை விழுங்கி...மூக்கை கர்சீப்பால் துடைத்து...கண்களை கசக்கி...ஒருவழியாக சுயம்புலிங்கம் பேச ஆரம்பித்தான்..
'அய்யா.. நா.. (மறுபடியும் மூக்கை சிந்தி) அய்யா..நா..சின்ன ஆளு கேட்டியளா? .. எவ்ளவோ எடுத்து சொன்னோம். அவன் சின்ன வயசு பாத்தீயளா!'
'கொஞ்சம் சுறுக்கமா சொல்லுப்பா.. போன தபா ஃப்ளைட்டையே மிஸ் பண்ணிட்டோம்'
'இல்ல..சார்வாள்! நா என்ன சொல்லுதேன்னா..'
'இருக்கட்டும்பா.. நீ சொல்லப்போறது எல்லாம் டப்ஸ்மாஷ்ல வந்துடும்.. அத அமெரிக்காவுல பாத்துக்குவோம்'.
ஒரு வழியாக மறுபடியும் கேசை மூடி சுயம்புலிங்கத்தையும் இசக்கியையும் சந்தேகத்தின் பலன் கொடுத்து நிரபராதி என விடுவித்தார்கள்.
சுயம்புலிங்கம் வீட்டிற்கு இசக்கியும் அவன் மனைவியும் வருகிறார்கள். ராணி 'அந்த கேபிள் டீவி தொழிலை விட்ரும்யா.. வேற எதும் சோலி செய்யலாம்ல?' என கேட்க, சுயம்புலிங்கம் 'எலே இசக்கி! அந்த மீன்பாடி வண்டிய வித்துடு. புதுசா நமக்கு யார்லெ வேல குடுப்பா? நாம ரெண்டு பேருஞ்சேந்து என்ன செய்யலாம்.. சொல்லுலே!' என கேட்டான்.
இசக்கியின் மனைவி கணவனிடம் 'வயித்து பொளப்புக்கு எதாவது செய்யனுங்கேன். நீர் தான் உம்ம ஃப்ரெண்ட தலைல தூக்கி வச்சி ஆடுதீரே.. சொல்லும்! ' என்றதும், பொறி தட்டிய மாதிரி இசக்கி பிரகாசமானான். 'என்ன சொல்லுதே புள்ள! தலைல தூக்கி வச்சின்னா சொன்னே! ஆஹா.. ஐடியா கெடச்சி!' என குதித்து உடனே சுயம்புலிங்கம் காதில் ஏதோ சொல்ல, சுயம்பு அவனை இறுக்க கட்டிப்பிடித்துக்கொள்கிறான், ராணியே பொறாமைப்படும் அளவிற்கு.
மறுநாள் நெல்லை நகரின் மையப்பகுதியில் ஒரே கூட்டம். 'யாரோ ரெண்டு சாமியாரு பயளுவலாம். ஒரு சாமி செந்தில் மாதிரியும் இன்னொரு சாமி 'குணா' கமல் மாதிரியும் இருக்காவளாம். செந்தில் சாமி குணா சாமிய ஒத்த கட்டையால, ஒரே கையில ஒசத்திப் புடிக்கானாம். நம்மூருக்கு அதிசயமாவும் புதுசாவும் இருக்கே' என பரவலான பேச்சு. தட்டில் நிறைய நூறு ரூபா நோட்டுக்கள்.
இரவு.. படுக்கையறையில் சென்ட் அடித்த பனியனுடன், மீசையை நீவியபடி சுயம்புலிங்கம் ராணியை ஆசையுடன் நெறுங்க, அவள் ' யோவ்.. மீன்பாடி வண்டியையே ஒழுங்கா இழுக்க முடியாத கோட்டிப்பய இசக்கி, அதெப்பிடி ஒத்த கட்டையால உன்ன ஒசரத்துல தாங்கி புடிக்கான்? இதென்ன இடும்பு புடிச்ச சோலி... சொல்லும்'
'ஏட்டி..அதொன்னுமில்ல.. நாங்க ரெண்டு இரும்பு தட்டுல ஒக்காந்திடுதோம். நடுவில அந்த கட்டைக்குள்ள இரும்பு கம்பி. நம்ம ஶ்ரீதர் டிராஃப்கோ இத்தாலி போயிருந்தப்ப 'வாடிகன்'ற ஊர்ல இத பாத்தாவளாம். பஹ்ரைன் வுட்டு இந்தியா திரும்பி வந்தாக்க அவுகளும் இந்த தொழில் தான் செய்யனுங்காக.. காசு நெறைய கெடைக்கும்ல!' என்றான்.
'அடச்சீ.. இது தொழிலா.. பிச்சைய்யா!.. அது இருக்கட்டு.. பாரம் தாங்காமெ ரெண்டு பேரும் கீழ விழ மாட்டீயளா?'
'இல்லடி மூதி! கீழ உள்ள இரும்புத்தட்டுக்கு நாலு காலு இருக்கு. அத தரைல குழிய தோண்டி பொதைச்சிடுதோம்ல!'
'தரைல குழிய தோண்டறதுக்கும், பொதைக்கறதுக்கும் சொல்லியா தரனும் உனக்கு! அந்த குழியிலயும் கண்ணுக்குட்டி எதாச்சும் கெடக்கா?' என்றவளை மேலும் பேச விடாமல் லைட்டை(யும்) அனைத்தான் சுயம்புலிங்கம்.

No comments:

Post a Comment