Thursday, August 25, 2016

அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்...


23 வயதில்... இன்டர்வியூ அழைப்புக்கடிதம், மார்க் ஷீட்டுக்கள் அடங்கிய கவரை கக்கத்தில் வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணி மெஸ்ஸில் டிபனை முடித்துக்கொண்டு, நந்தனம் பஸ் பிடித்து ஒரு கம்பெனி எம்.டி. முன் அசால்ட்டாக கவரை திறந்தால் கவர் காலி! 'சார்! இந்த பேப்பரெல்லாம் எங்கியோ விழுந்துடுச்சு போல..' சொல்லும்போதே அழுகை. ' கம்பெனியின் கணக்கு வழக்குகளை இந்த லக்ஷ்ணத்தில் தான் பாத்துப்பியா?' மாதிரியான எம்.டியின் பார்வை. திரும்ப பைக்ராஃப்ட்ஸ் ரோட்டுக்கு பஸ்ஸில் வந்திறங்கி பார்த்தால் சைடோஜி மெஸ் அருகே ரோட்டில் ஆங்காங்கே கிழிந்த காகிதங்கள், with reference to your application போன்ற அரைகுறை வாசகங்களோடு. இதுதான் என் முதல் இன்டர்வியூ.
ஹைதராபாத்தில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான ப்ராகா டூல்ஸ் கம்பெனி இன்டர்வியூ. சென்ட்ரல் ஸ்டேஷனில் பர்த் என்று சொல்லி எழுபது ரூபாயை வாங்கிக்கொண்டு ஒரு பெட்டியில் உட்காரவைத்துவிட்டு போர்ட்டர் மறைந்தான். பித்ரகுண்டாவில் TTE நள்ளிரவு 2 மணிக்கு இறக்கமே இல்லாமல் டிரெயினை விட்டு இறங்கச்சொல்ல, கெஞ்சி அழுது, தூங்கிக்கொண்டிருந்த இன்னொருவர் காலருகே சீட்டின் நுனியில் உட்கார்ந்து மீதி இரவைக் கழித்தேன். இரண்டே காலியிடங்களுக்கு நாங்கள் 80 பேர். கொலைப்பசி. மதியம் இரண்டரை வரை சாப்பாடு இல்லை. டிஃபென்ஸ் காண்டீனில் குருமா வாசனை. மூன்று மணி வாக்கில் பியூன் வந்து தேர்வான இரண்டு பேர் மட்டும் காண்டீனுக்கு போகலாம், மற்றவர்கள் காஷியரிடம் ரயில் கட்டணத்தை பெற்று திரும்பிச்செல்லலாமென அறிவித்தான்.
மத்தியப்பிரதேசம் இந்தோர் நகரிலிருந்து தேவாஸ் என்ற ஊருக்கு ஒரு மணி நேர பஸ் பிரயாணம். புழுதி படித்த செம்மண் சாலை தாண்டி H&R Johnson எனப்படும் பிரபல டைல்ஸ் கம்பெனியின் ஃபாக்டரி மானேஜரின் அறை. ICWA படித்திருந்த மலையாளி சேட்டன். பின் கழுத்து வரை தூக்கி படிய வாரிய முடி, கம்பளிப்பூச்சி மீசையின் ஊடே எட்டிப்பார்க்கும் பான்பராக் காவிப்பற்கள், டேபிள் முழுவதையும் பெருவாரியாக ஆக்கிரமித்திருந்தார். அத்தனை பெரிய சரீரத்தை துக்குனூன்டு சஃபாரி உடைக்குள் திணித்திருந்தார். 'இந்த இன்டர்வியூவுக்கு இன்று காலை எத்தனை மணி நேரம் படித்தாய்' என தன் சென்னித்தலா மூக்கை நீவியபடி கேட்டார். (இன்டர்வியூவுக்கா! படிக்கற காலத்திலேயே நாங்க புக்க தொடமாட்டோமேய்யா!) ஆறு மணி நேரம் படித்திருக்க வேண்டுமாம். சூடாக சாய் கொடுத்து நிறைய அறிவுரைகளோடு அனுப்பி வைத்தார்.
பம்பாய் நாரிமன் பாய்ன்ட் மித்தல் கோர்ட்.. சீயட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் கம்பெனி பெங்காலி மானேஜரின் எதிரே அமர்ந்தவுடன், 'உன் கழுத்தில் டை இல்லியே! You have come to meet senior officials.. don't you know?' என முகம் சுளித்தவர், யாரோ கூப்பிடுகிறார்களென எழுந்து அந்தப்பக்கம் போய், அடுத்த ஒரே நிமிடத்தில் வந்து அமர்ந்தவர் என்னைப்பார்த்ததும் கொஞ்சம் ஆடிப்போய் விட்டார். காரணம் அப்போது என் கழுத்தில் டை இருந்தது. மனுஷன் லேசாக குழம்பிப்போன மாதிரியிருந்தது. பாண்ட்டில் சுருட்டி வைத்திருந்த டை அது. அடுத்த அரை மணியில் அந்த கட்டிடத்தின் கீழே ரோட்டோர தள்ளு வண்டிக்கடையில் பாவ் பாஜி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்தில் பூரிபாஜியுடன் நின்று கொண்டிருந்த என்னை சட்டென பார்த்து அறண்டு போனார். காரணம் இப்போது என் கழுத்தில் டை இல்லை! அவரிடம் வேலை கிடைத்திருக்க சாத்தியமே இல்லை.
இந்தோரில் 60 வயது கம்பெனி செக்ரடரி, கன்னடம் பேசும் தமிழ்க்கார ஆனந்த ராவ் தனது க்ளையன்ட்டுக்காக என்னை அவர் வீட்டில் வைத்து இன்டர்வியூ செய்ய ஆரம்பித்தார். சிகரெட்டை வெளியே எடுத்து டப்பாவில் தட்டி உதடுகளில் சொறுகி பத்த வைத்து, பக்க வாட்டில் மேகக்கூட்டங்களாக புகையை அலட்சியமாக ஊதிக்கொண்டே அவர் என்னைப்பார்த்த அதே நேரத்தில், என் கண்கள் அந்தப்பக்கம் கமகம சிந்தால் சோப்பு வாசனையுடன் காபி கொண்டு வந்த அவரது மகள் மீது. துவைத்து பிழிந்து காயப்போட்டு அனுப்பினார் என்னை.
எத்தனை அவமானங்கள், ஏளனப்பேச்சுக்கள், பதில் சொல்ல முடியாத கேள்விகள்..! 'நீ எங்க கூட ரொம்ப நாள் இருப்பேன்னு என்ன நிச்சயம்?' ( நீ மொதல்ல இங்க ரொம்ப நாள் இருப்பியா என கேட்கத்தோனும்).
பம்பாயில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீசிங் கம்பெனி.. சாரங்கபாணி (60) என்கிற சீனியர் வைஸ் பிரெசிடென்ட் எதிரே நான்..
'என்ன மாதிரி வேலை செய்வாய்?'
'பத்ரிக்கு ஒத்தாசையா இருப்பன் சார்'
'அதாரு பத்ரி?'
'உங்களுக்கு கீழே இருக்கற அசிஸ்டன்ட் மானேஜர் சார்.. பயோடேட்டாவ அவர் மூலமாத்தானே கொடுத்தேன்!'.
அடுத்த வாரம் பத்ரியே வேலை தேடிக்கொண்டிருந்தான்.
பம்பாய் போன்ற நகரங்களில் நேர்முகத்தேர்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென திருச்சியிலிருந்து சென்ற எனக்கு யார் சொல்லித்தருவது? அந்த அரை மணி நேரத்தில் நமது திறமை, அறிவுத்திறன், நேர்மை, ஒழுங்கீனம் எல்லாவற்றையும் மதிப்பிட முடியுமா! அநேகமாக எல்லா இன்டர்வியூக்களிலும் என்னுடைய சொதப்பல்கள், திணறல்கள் மற்றும் இம்மச்சூரிட்டி அப்பட்டமாக தெரிந்திருக்கும் என்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. 24 வயது பையனிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்!
எட்டு வருடங்கள் சின்ன பதவிகளில் இருந்த எனக்கு அடுத்து உதவி மேலாளர், சீஃப் அக்கவுன்டன்ட் போன்ற பதவிக்கான இன்டர்வியூக்கள் மிகவும் கடினமாக இருந்தது உண்மை.
ஆனால் இந்த இன்டர்வியூ மிகவும் வித்தியாசமானது. பம்பாய் கொலாபா பகுதியில் தாஜ் ஹோட்டல். மேலே போய் ஒரு ஸுய்ட் (suite) கதவை தட்ட, அரபி உடையிலிருந்த பஹ்ரைன் கம்பெனி சேர்மன் கதவை திறந்தார். ஏழெட்டு நிமிடங்கள் கரிக்குலம் விட்டேயை பொறுமையாக படித்தார். 'ஆக்ச்சுவல்லி..86ல நா பாம்பேக்கு வந்தவுன்ன..' என ஆரம்பித்த என்னை தடுத்து, உன் அப்பா என்ன செய்கிறார்.. எத்தனை பெரிய குடும்பம் உங்களுடையது.. உன் சகோதரர்கள் என்ன செய்கிறார்கள்.. மாதாமாதம் அப்பாவிற்கு பணம் அனுப்புகிறாயா' போன்ற கேள்விகள் அவர் கேட்க.. 'ஓ..மாசம் அஞ்சாந்தேதி கன்ரா பாங்க்ல டிராஃப்ட் எடுத்து பக்கத்துலயே ஹெட் போஸ்டாபிஸ் போ..' மீண்டும் என்னை பேசவிடாமல் தடுத்து .. 'அதெல்லாம் இருக்கட்டும் .. எட்டு வருட அனுபவமும் சீ.ஏ. படிப்பும் எனக்கு பெரியதல்ல. 6 மாதத்தில் வேலை கற்றுக்கொள். பொய் பேசக்கூடாது, நேர்மை அவசியம். உன்னை ரெக்கமன்ட் செய்தவர் நல்ல மாதிரியாக சொல்லியிருக்கிறார்' என்றார். கொஞ்சம் பேச்சைக்குறைக்கனும் என சொல்லுவாரென எதிர்பார்த்தேன்.
'வந்து.. சார்! ஃபேமிலி விசா வேணும், பின்ன.. ஃபர்னிஷ்டு வீடு கொடுக்கனும்.. ஏன்னு கேட்டாக்க, வைஃப் தனியா ஒன்ற வயசுப்பையன வச்சுகிட்டு காரைக்குடி பக்கம்'...
மறுபடியும் கட் செய்தார் என்னை..(முகம் செவந்திடுச்சு) ...
'இந்தா..என் செக்ரட்டரி நாயரின் கார்டு. உனக்கு வேண்டியதை எல்லாம் அவரிடம் கேட்டுக்கொள். அப்ப கிளம்பறயா!' என முடித்துக்கொண்டார். அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் மாதிரி நான் பில்டப் கொடுக்க அவரும் தே.சீனிவாசன் மாதிரித்தான் இருந்தார்.
அடுத்த வாரம் பஹ்ரைனுக்கு ஃப்ளைட் டிக்கெட் அனுப்பினார்கள். அது தான் என் கடைசி இன்டர்வியூ. அப்புறம் இந்த 22 வருடத்தில் நான் வேறு வேலை தேடவில்லை.

No comments:

Post a Comment