Monday, March 16, 2020

Image may contain: 1 person, smiling, drawingசுமார் 20 வருடங்களுக்கு முன் பஹ்ரைனில் ஒரு நாள் ஆருயிர் நண்பன் கணபதி Ganapathi Subramanian ஒரு இளைஞனை எனக்கு அறிமுகப்படுத்தினான். ‘ஸ்ரீதரா! இவன்தான் மணிகண்டன். பாம்பேல எங்க முலுண்டு அத்திம்பேர் வைத்தியநாதன் இருக்காரில்லியோ!அவரோட நெய்வேலி பிரதரோட பையன். துடிப்புமிக்க இளைஞனாக தெரிந்தான் மணி. ICWA முடித்து சில வருடங்களில் கணபதியின் கீழ் வேலைக்கு சேர்ந்தவன். முகத்தில் எந்நேரமும் புன்னகை, அளவான மற்றும் அடக்கமான பேச்சு.
அடுத்த சில நாட்களில் அவனது அசாத்திய திறமை, உழைப்பு என மணியை கணபதி வானளாவ புகழ, மணி எனக்கும் நெருக்கமானான். கணபதி கிட்ட பாராட்டு வாங்குவதென்பது மன்மோகன் சிங்கையும் நரசிம்ம ராவையும் சிரிக்க வெச்சு குத்தாட்டம் போட வைப்பது மாதிரி. அவன் கார் காம்பௌண்டுக்குள் நுழையும்போதே நம்மூர் மஜீத், மைக்கேல் போன்ற வாட்ச்மேன்கள் காரை நோக்கி ஓடுவார்கள். அவ்வளவு பயம். மன்சூர் அல் ஆலி கம்பௌண்டு கணபதியின் கம்பெனிக்கு சொந்தமானது. சுமார் 70,75 ஃப்ளாட்டுகள் கொண்ட அங்கே அமித் ஷா போல வலம் வருவான் கணபதி. கணபதி வீட்டு ஃப்ரிட்ஜில் லபான் (தயிர்) இல்லையென்றால் லேபர் குவார்ட்டர்ஸில் பாதி சிக்கன் பிரியாணியை விட்டுவிட்டு மஜீத், மைக்கேல் கோல்டு ஸ்டோர் (கடை) பக்கம் ஓடுவார்கள். பண்டிகை மற்றும் வெக்கேஷனுக்கு ஊருக்கு கிளம்புவது போன்ற விசேட நாட்களில் கணபதி முன் தலையை சொறிந்து கொண்டு நின்றால் அந்த மோட்டா மணி பர்ஸிலிருந்நு செம்மையாக தேரும் என்பது அவர்களுக்கு தெரியும். அதையும் எதிர்பார்க்காமல் உண்மையான ஊழியம் செய்பவர்கள்.
வெள்ளிக்கிழமை மதியம், எதாவது பண்டிகை, குழந்தைகள் பிறந்தநாள் என எல்லா விசேஷ தினங்களிலிலும் கணபதி வீட்டில் டைனிங் டேபிள் ஈயச்சட்டியிலிருந்து ரசம் விட்டுக்கொள்ளும் மணியை நான் தவறாமல் பார்ப்பதுண்டு. நண்பர் Mohan Gopal Krishnan அவர்களின் மகள் Shyamala Ram ன் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு பத்திரிக்கை அடிக்க வேண்டி இருந்தது. விடுவானா கணபதி? ‘எதுக்கு செலவெல்லாம் செஞ்சுகிட்டு! நம்ப மணி கம்ப்யூட்டர்ல பண்ணி குடுப்பான் பாருங்க!’ என (மணியை கேட்காமலே) அறிவிக்க, அடுத்த நிமிடம் மணிக்கு போன் பறக்கும். எல்லா வேலையையும் அப்படியே போட்டு விட்டு தபதபவென ஓடி வந்து காரியத்தில் இறங்குவான் மணி. பவர் பாயின்ட், போட்டோ ஷாப் என எதுவும் பிரபலமாகாத நேரம் அது. மணி அற்புதமாக இரண்டு மூன்று டிசைனில் பத்திரிக்கை அடிப்பான். ஒத்தாசைக்கு நான், மனைவி Usharani Sridhar மற்றும் Durga Ganapathi . எல்லா கூத்தும் கணபதி வீட்டில் தான். அந்தப்பக்கம் டைனிங் டேபிள் சாப்பாடு, கூட்டு பொறியல், ஈயச்சட்டி ரசம் இத்யாதி...
‘அதுசரி.. உனக்கு வீடு, வாசல் ஆபிசெல்லாம் கிடையாதா! பொழுதன்னிக்கும் கணபதி வீடு தானா’ என கேட்பவர்கள் இரவு பதினோரு மணிக்கு மேல் ஹூரா பகுதியில் எங்கள் வீட்டுக்கு வந்தால் என்னை பார்க்கலாம். இரவு 9 மணிக்கு எனக்கு போன் போட்டு ‘வற்ரியாடா?’ எனக்கேட்டு போனை வைத்துவிட்டு திரும்பினால் எதிரே நிற்பேன். இந்த நாடே சென்னையில் பாதி சைஸ் தானே!
2002இல் பஹ்ரைனை விட்டு கணபதி கிளம்பியதும் ஓவென அழுது புரண்டவர்களில் மணியும் ஒருவன். அவனும் துபாய், அபுதாபி பக்கம் மற்றொரு ஜோலியில் செட்டிலானான். நண்பர் Saravanan Natarajan தணிக்கையாளராக இருந்த கல்வி நிறுவனமொன்றில் மணிகண்டன் சேர்ந்தான். ICWA க்கு பிறகு அதற்கு இணையான லண்டன் CIMA படிப்பையும் முடித்து அபுதாபியில் ஒரு சுகாதாரண நிறுவனத்தின் தலைமை நிதி மேலாளராக இருக்கும் மணியை நான் அங்கு போதெல்லாம் சந்திப்பதுண்டு. பெரிய பதவி, வில்லா, லாரி போன்ற நாலுசக்கர வண்டி (4WD) போன்ற வசதி வாய்ப்புகள் எதுவும் தலைக்குள் ஏறாமல், அடக்கத்துடன் எளிமையாகவே இருக்கும் மணியின் சுபாவம் அவனது அப்பாவிடமிருந்து பெற்றது. அப்பா Venkataraman Balasubramanian எனக்கு அண்ணா மாதிரி. என்னிடம் மிகுந்த பாசமும் உரிமையும் வைத்திருப்பவர். மணியை விட தோஸ்த் எனக்கு. மகனுடன் அபுதாபியில் நான் தங்கியிருக்கும் இடத்திற்கே வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச்செல்வார். அவசரமாக வேறு வேலை எனக்கு இருந்தும், சடாரென அவர்கள் வீட்டில் சாப்பிட முடிவு செய்து, அடுத்த அரை மணிக்குள் பூரிக்கு மாவு பிசைந்து ஸ்வீட்டுடன் விதவிதமான வகை இரவு உணவு தயாரிப்பார் மணியின் மனைவி லலிதா.
மணியின் குழந்தைகள் இரண்டும் படிப்பில் மட்டுமல்லாது ஓவியம், பேச்சுப்போட்டி, அறிவியல் ஆய்வு என மற்ற துறைகளிலும் பரிசு வாங்குபவர்கள்.
மூத்தவன் சாய் வருடம் தவறாமல் Pride of Abu Dhabi யின் Young Achiever விருது, Hidden Eco Hero விருது, ரேடியோ FM நேர்க்காணல் போன்று சாதனைகளை குவிக்கிறான். கடல் நீரிலிருக்கும் கழிவுப்பொருட்களை அகற்றி, நீரை சுத்திகரிக்கும் Marine Robot Cleaner எனும் கருவியை கண்டுபிடித்து அரசாங்கத்திடம் பாராட்டு பெற்று கலீஜ் டைம்ஸ் நாளிதழின் முதல் பக்கத்தில் இடம் பெற்றவன் சிறுவன் சாய். கணவன் மற்றும் குழந்தைகள் வெற்றிக்கு பின்னால், சொல்லவே வேண்டியதில்லை, லலிதா தான். தவிர குழந்தைகளை ஊக்குவித்து தாத்தா பாட்டியும் தார்மிக ஆதரவு கொடுக்கிறார்கள். அண்ணாவிற்கு உலகமே ஒரே மகன் மணி தான்.
நமக்கு நண்பர்கள் தான் வாழ்க்கையே!

No comments:

Post a Comment