Friday, June 20, 2025

QFR-320 சந்தோஷ சுப்ரமணியன்

 QFR-320

Subhasree Thanikachalam அவர்கள் வழங்கும் QFR தொடர்நிகழ்ச்சியில் 320ஆவது பாகம் ஒரு மைல்கல் எனலாம். ஒரு இசை நிகழ்ச்சியின் தரநிலையை நிர்ணயிக்கும் அளவைக்குறியை (benchmark) இந்நிகழ்ச்சியில் காணலாம்.
சந்தோஷ் சுப்ரமணியனுக்கு மகுடம்
சூட்டும் பாடல் இது. 70,80களை விட 50,60களில் TMS அவர்கள் உச்ச ஸ்தாயியில் பாடும்போது கொஞ்சம் nasal வாய்ஸில் பாடுவார் (நினைந்து நினைந்து நெஞ்சம்…. ஏரிக்கரையின் மேலே..). சந்தோஷுக்கும் nasal வாய்ஸ். ஆனால் TMSஐ imitate செய்யாமல் தனித்துவமான தன் ஸ்டைலில் பாடுகிறார். இப்பாடலின் ஒவ்வொரு வரியிலும் அவரது அதீத உழைப்பும் மற்ற எல்லா கலைஞர்களின் மெனக்கிடலும் தெரிகிறது. பாடலுக்கு வருவோம்.
தொடர்ந்து கீழே வாசிக்கும் முன் இப்பதிவின் முதல் கமென்ட்டில் இப்பாடல் லிங்க்கை இணைத்திருக்கிறேன். திரையிசையில் நாட்டமிருப்பவர்கள் மறுபடியும் இந்த QFR-320 பாடலை ஹெட்ஃபோனுடன் கேட்ட பின் எனது பதிவை படிக்கும்போது இசையின் ஆழத்தையும் விசாலத்தையும் ரசிப்பீர்கள்.
பாடல் முதலில் ஆக்ரோஷமான வயலின்கள் மற்றும் ஆர்கன் இசையுடன் ஆரம்பமாகிறது. பின் எழுப்பப்படும் சூராவளி காற்று ஒலி! மை காட்! நம்பவே முடியவில்லை. அடுத்து பெண்களின் ஹார்மனியும் கூடவே ரங்கப்ரியாவின் செல்லோ மற்றும் வயலின் இசையுடன் திரையில் தோன்றும் சிவாஜி.. சாரி! சந்தோஷ்! இந்த இடத்தில் சிவாவுக்கு சபாஷ் சொல்ல வேண்டும். அற்புதமான ஒளிக்கோர்வை மற்றும் பின்புல ஒலியுடன் சந்தோஷை அறிமுகப்படுத்தும் வீடியோ எடிட்டிங் பிரமாதம்.
இந்த 6 நிமிட பாடலில் ஆரம்ப பல்லவி & அனுபல்லவி முடியவே 2 நிமிடங்கள். ‘எங்கே நிம்மதி’ எனும் பல்லவியை முதல் முறை வசனமாக சொல்லி, இரண்டாம் முறை வாத்தியங்களுடன் சத்தோஷ் ஆரம்பிக்கும்போது கூர்ந்து கவனியுங்கள்! முதல் ‘எங்கே நிம்மதி’க்கு பின்னால் இசை கிடையாது. இரண்டாம் ‘எங்கே’யில் சரியாக ‘எ’யில் (7:01) டெரிக்கும் வெங்கட்டும் தாள வாத்தியங்களுடன் சேர்வார்கள், ஒரு மணித்துளி கூட முன்னே பின்னே இல்லாமல்.. என்ன துல்லியம்! மறுபடியும் மூன்றாம் முறை பல்லவி பாடும் முன் சுத்தரேசன் சார் (மேன்டலின்) மற்றும் லலித், செல்வா (குழலோசை) சேர்த்துகொள்ள அத்தனை இசைக்கலைஞர்களும் பாடலை துவங்க எல்லா கலைஞர்களையும் திரையில் சிவா காட்ட, நமக்கு மயிர்க்கூச்செறியும்! உங்க ப்ரில்லியன்ஸுக்கு அளவே இல்லியா சுபஶ்ரீ! அநியாயம்!
ஹார்மனி பெண்களின் அற்புத ஹம்மிங்கை அடுத்து அனு பல்லவிக்கு போவோம். அந்த ‘எங்கே மனிதர் யாரும் இல்லையோ’வில் ‘எங்கு’ என்பதன் ஏகார இடைச்சொல்லான ‘எங்கே’யை TMS அவர்களுக்கிணையாக சந்தோஷ் அதே உறுதி மற்றும் அழுத்தத்துடன் ‘எங்கேஏஏஏ’ என நீட்டி பாடுவது எல்லாம் உண்மையில் வேற லெவல்! பொதுவாக ஏகார இடைச்சொல்லின் அவசியமே அவ்விடத்தில் பொருளை மேலும் வலியுறுத்துவதற்காக. (உதாரணம்: வள்ளுவர் ‘ஆதிபகவன் ‘முதற்றே’ உலகு’ என்று அழுத்தி சொல்லி தன் convictionஐ உணர்த்தினார்). QFR இல் இது போன்ற சிறிய நுணுக்கங்களை(nuances) கூட கவனித்து அதி சிரத்தையாக பாடியிருக்கிறார் சந்தோஷ். வாழ்த்துக்கள் சகோ!
முதல் இன்டர்ல்யூட் sumptuous feast என சொல்லும்படியான ஒரு விருந்து. கீர்த்தனா ட்ரம்பெட், சாக்ஸபோனுடன் பல அவதாரங்களுடன் விஸ்வரூபம் எடுக்கிறார். கூடவே வயலின்கள், ஆர்கன், செல்லோ க்ரீச்சிட பாம், பாம் என டெரிக் ட்ரம்ம, படிப்படியாக க்ளைமாக்ஸ் இசை போல மேலே உயர உயர போய்……. சட்டென மழை பெய்து ஓய்ந்த மாதிரி அமைதி.. நிசப்தம்.. மறுபடியும் மேன்டலின், கிடார், ட்ரம், பாங்கோஷ் நால்வரும் துவங்க, குழலோசைகள் மெதுவாக சேர்ந்து ‘எனது கைகள் தீண்டும்போது’ எனும் முதல் சரணம்.
இப்போது கண்ணதாசனின் வரிகளை கவனியுங்கள். இந்த முதல் சரணம் முழுக்க இயலாமை, வெறுப்பு, அழுகை, கோபத்தை வெளிப்படுத்தும் ‘அழுகின்றது, சுடுகின்றது, இறைவன் கொடியவனே’ போன்ற விரக்தியான வரிகள். அதனால் தான் முதல் இன்டர்ல்யூட் இசையும் கொஞ்சம் ஆக்ரோஷமாக உள்ளது. சந்தோஷ் பாடும்போது ‘வீணை அழுகின்றது’, ‘மலரும் சுடுகின்றது’ வரிகளில் அதே உணர்ச்சிகளை காட்டி புருவச்சுறுக்கங்களுடன் பாட, அந்த இடத்தில் அது சிவாஜியா அல்லது சந்தோஷா என நினைக்கும் மனநிலையில் நாம் இல்லை. காரணம் பாடலோடு நாமும் ஒன்றி விடுகிறோம்.
அடுத்த இன்டர்லயூட் நம்மை சாந்தப்படுத்துகிறது. மனதிற்கு ஆறுதல் அளிக்கும் ஹார்மனி, அதை தொடர்ந்து குழலோசைகளின் அமைதியான இசை. காரணம் இரண்டாவது சரணத்தில் (பழைய பறவை போல ஒன்று….) தெளிந்த நிலை, நம்பிக்கை, ஆறுதல் , கெஞ்சுதல் போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடுடன் ‘வணங்குவேன் தாயே, உறங்குவேன் தாயே’ போன்ற வரிகள்.. சந்தோஷ் கை கூப்பி வணங்கும்போது பெரிய பாரத்தை இறக்கி வைத்த மாதிரி நம் மனம் இலேசாகிறது.
முதல் ஆக்ரோஷ இன்ரடர்ல்யூட் முழுக்க கீர்த்தனாவின் ஆளுமை என்றால் இரண்டாவது அமைதியான இன்டர்ல்யூட் சு.ரேசன் சார், செல்வா & லலித்தின் ஆளுமை. இரண்டு சரணங்கள் மற்றும் இன்டர்ல்யூட் இசையை கேட்கும்போதும் இசையின் இழைகள் மற்றும் நேர்த்தியான இசைக் கோர்ப்பு, பாடல் வரிகளின் தாக்கம் எல்லாவற்றுடன் நாமும் அந்த உணர்ச்சிக்குவியலில் கலந்து விடுகிறோம். QFRஇன் வெற்றியே இது தான்.
நடுவே வரும் நீண்ட ஹார்மனியில் 17 பாடகர்கள், 10க்கும் மேற்பட்ட ஃப்ரான்சிஸ் சேவியர் குழு, ஸ்ட்ரிங்ஸ் மற்றும் தாள வாத்திய கலைஞர்கள், பிரதான பாடகர் என எல்லா கலைஞர்களையும் கலந்து திரையில் காட்டுவது சிவாவின் ராஜபாட்டை! எப்பிடி சிவா மிக்ஸ் பண்ணி மேனேஜ் பண்றீங்க? எப்பவாவது ஒருநாள் மனைவிக்கு உதவும் போது எங்களுக்கு ஒரு புளியோதரையை கூட சரியா மிக்ஸ் பண்ண வரதில்லையே!
இந்த பாடல் காட்சிக்கு 200 கலைஞர்களை வைத்து மெல்லிசை மன்னர்கள் இசையமைத்திருந்தாலும் திரைப்படத்தில் நாம் காண்பது சிவாஜியின் நடிப்பை மட்டும் தான். பின்புல இசையை காதால் மட்டுமே கேட்டு ரசிக்கிறோம். ஆனால் QFRஇல் வெறும் 20 கலைஞர்களைக்கொண்டு அந்த 200 பேர்களின் படைப்பை மீண்டும் நாம் காதால் கேட்டு மட்டுமல்ல, இசைக்கலைஞர்களின் உழைப்பை கண்களாலும் பார்த்து வியக்கிறோம்.
நவீன தொழில் நுட்பம் கலந்து, ஒரிஜினல் பாடலின் தரத்துடன், பன்மடங்கு சுவையுடன் சந்தேகமில்லாமல் அற்புதமாக உருவாக்கப்பட்ட கானம் இது.
Santhosh Subramanian எனது co-professional (சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட் ) என்பதாலும், எனது முகநூல் நண்பர் என்பதாலும் அவரது ஓவியத்தையும் வரைந்து இங்கு பகிர்வதில் பெருமை எனக்கு.
Kudos to the entire team. Way to go! வாழ்த்துக்கள் சுபஶ்ரீ 🙏🙏🙏

ஹசீன் தில்ருபா (Hindi)..(அழகான காதலி)

 மைனஸ் 30 அல்லது 40 டிகிரி குளிர் சாதன அறையில் வைக்கப்பட்டிருக்கும் மிருதுவான உணவுப்பண்டங்கள் உறைந்த நிலையில் பாறாங்கல் போல இருக்கும். பார்த்திருக்கிறீர்களா? அதிருக்கட்டும்…கதைக்கு வருவோம்.

ஹரித்வார் மாவட்டத்தில் ஜ்வாலாபூர் என்ற சிறிய ஊர். சலசலக்கும் கங்கையை ஒட்டிய வீட்டில் அப்பா, அம்மா மற்றும் எஞ்சினீயர் பையன். அருமையாக சமைக்கும் மருமகளை எதிர்பார்த்த அம்மாவுக்கு கிடைத்ததென்னவோ மாடர்ன் பெண் ராணி (தாப்ஸி). பையன் ரிஷிக்கு (விக்ராந்த்) பிடித்திருந்ததால் திருமணம் செய்துகொண்டான். ஆனால் பயம் காரணமாக படுக்கையறையில் தள்ளியே இருந்தான். ராணிக்கு வருத்தம். இந்த மாதிரி சமயத்தில் ஹிந்தி சினிமாக்காரர்கள் என்ன செய்வார்கள்! உடனே பையனின் கசின் ஒருவனை கதைக்குள் கொண்டு வருவார்கள். அவனும் சடையுடன் அஜானுபாகுவான உருவம், ஜிம் பாடி. வந்தானே இந்த கதையிலும்! பெயர் நீல். லீவுக்கு அவர்கள் வீட்டிற்கு வந்தான். அடுத்து உங்கள் ஊகம் சரி.. ராணி மெதுவாக அவனை விரும்ப ஆரம்பித்தாள். சமையல் தெரியவில்லையெனினும் நீலுக்கு பிடித்த டீ போட்டுக்கொடுத்தாள். கணவன் ரிஷிக்கு இதெல்லாம் தெரியாது. நீலை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக ஒருநாள் அவள் சொல்ல, பயந்து மறுநாள் அவன் யாரிடமும் சொல்லாமல் ஊருக்கு ஓடிவிட்டான்.
அவள் நீலை விரும்புவது ரிஷிக்கு தெரிய வர, சரியான கோபம். பல முறை ராணி மன்னிப்பு கேட்டும் அவனது கோபம் அடங்கவில்லை. சின்ன சின்ன காயங்கள் அவளுக்கு ஏற்படும்போதெல்லலாம் பழி தீர்த்துக்கொண்டது போல அவன் உணர, ஒருநாள் கணவனிடம் ராணி உட்கார்ந்து நீண்ட நேரம் பேசி, தன் குற்றத்திற்கு பரிகாரமாக தான் இறக்கவும் தயாரென சொல்ல, அவனும் மனம் மாறி, அவளை மன்னித்து ஏற்றுக்கொள்கிறான். அவள் மேலுள்ள அதீத காதலால் தான் அவனால் அவளது தவறை மன்னிக்க முடியவில்லை என்கிறான். பிறகு பழையவற்றை மறந்து வாழ்க்கை சந்தோஷமாக ஆரம்பமாகிறது.
படம் அத்தோடு முடியவில்லை.
போலிஸ் ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் எதிரே ராணி. ‘உன் கணவனின் இறப்புக்கு நீ தான் காரணம். உன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து நீ தான் சதி செய்து கேஸ் சிலண்டரை வெடிக்கச்செய்து ரிஷியை கொன்றாய்’ என்ற இன்ஸ்பெக்டரின் குற்றச்சாட்டுக்கு கொஞ்சமும் பயமில்லாமல் ராணி, தான் எப்போதே திருந்தி விட்டதாகவும், நீலிடம் தற்போது தொடர்பிலும் இல்லையென சொல்லியும் இன்ஸ்பெக்டர் விடுவதாக இல்லை. ராணியை அடித்து சித்ரவதை செய்தும் அவள் திடமாக மறுத்தாள். கணவன் இறந்த சற்று நேரத்தில் நீல் அந்த வீட்டிலிருந்து தப்பி, பக்கத்தில் ஆற்றில் குதித்து நீந்திச்சென்றதை காவலர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனாலும் ராணி மேல் சுமத்திய குற்றத்திற்கு ஆதாரம் கிடைக்காமல் போலிஸ் திணறுகிறது.
சுரேந்திர மோகன் பாடக் எனும் க்ரைம் எழுத்தாளரின் நாவல்கள் வட இந்தியாவில் பிரபலம். எல்லா ரயில் நிலையங்களிலும் பரபரப்புடன் அதிக விற்பனையாகும் நாவல்கள். இப்படத்தில் அதை தினேஷ் பண்டிட்டின் நாவல்கள் என காட்டியிருப்பார்கள். போலீஸ் விசாரணையின் போது அடிக்கடி அந்த நாவல்களிலிருந்து ராணி மேற்கோள் காட்டுவார். கொலைக்கான ஆதாரம் கிடைக்காமல் அந்த நாவல்களைப்பற்றி ராணி குறிப்பிடும்போதெல்லாம் ஆத்திரம் கொள்கிறார் இன்ஸ்பெக்டர்.
கடைசி 10 நிமிடங்கள் சீட்டின் நுனிக்கு வந்து விடுகிறோம். மர்ம முடிச்சுக்கள் அவிழ அவிழ இயக்குநரின் வெற்றி பளச்சென தெரிகிறது. தாப்ஸி அற்புதமாக நடித்திருக்கிறார். திரைக்கதை நகரும் வேகம், போலீஸ் விசாரணை, சட்டென மாறும் காட்சிகள் எல்லாமே நம்மை பிரமிக்க வைக்கின்றன. அதிலும் அந்த இன்ஸ்பெக்டர் கடைசி கட்சியில் கையில் தினேஷ் பண்டிட்டின் நாவலுடன் கொலை எப்படி நடந்தருக்கும் என ஊகிப்பது, அதைத்தொடர்ந்து திரையில் தோன்றும் முடிவு காட்சி… ப்பா! ப்ரமாதம்.
ஹீரோ விக்ராந்த் என்னவொரு அழகு. அற்புத நடிப்பு. தாப்ஸி எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுமளவிற்கு அருமையான நடிப்பு.
அது சரி. முதல் பாராவில்.. உறைந்த நிலை.. பண்டம்.. பாறாங்கல்.. இதெல்லாம் எதற்கு? படத்தை முதல்ல பாருங்க! புரியும்.

பாயசம்..

மனசு சொல்லிற்று. “சீதாவுக்கு மச்சுனனா? சுப்பராயா, எப்படிடா இப்படி ஏழு பெண்ணைப் பெத்தே! ஒரோரு குட்டிக்குமா கலியாணம்னு ரயில் ரயிலா சம்பந்திகளையும் மாப்பிள்ளைகளையும் மச்சுனன்களையும் கொண்டு இறக்கறே. காவேரியிலே கால் தட்றதுக்குள்ளே இன்னும் எத்தனை மச்சுனன்களைப் பாக்கப் போறேனோ!” (தி.ஜா)
உள்ளுக்குள் குமைந்து போகிறார் சாமநாது.
அண்ணா பையன், மேற்படி ஆசாமி சுப்பராயன் வீட்டுக்கல்யாணம். அந்தப்பக்கம் மண்டபத்தில் நாதஸ்வரம் தவில் சத்தம் கேட்டது.
“பத்தரை மணிக்கு மேல்தான் முகூர்த்தம். மணி எட்டுக்கூட ஆகவில்லை. சும்மா தட்டுகிறான்கள். அவனுக்குப் பொழுது போக வேண்டும். சுப்பராயனும் பொழுது போகாமல்தானே ஏழு பெண்களையும் நாலுபிள்ளைகளையும் பெற்றான்” (தி.ஜா)
முன் நின்று நடத்த வேண்டிய சித்தப்பா இவரோ சாமியை சேவிக்க கோவில் பக்கம் வந்து விடுகிறார். ஏதோ சாக்கு வேணுமே!
“வலது பக்கம் – பின்னால் – வேளாளத் தெருவில் – புகை – வெல்லம் காய்ச்சுகிற புகை. புகை பூத்தாற்போல, அந்ததண்டை கருப்பங் கொல்லை கருப்பம் பூக்கள் – காலை வெயில் பட்டு பாதிப் பூக்கள் சிப்பிப் பூக்களாகியிருக்கின்றன – கூர்ந்து பார்த்தால் சுப்பராயன் மாதிரி இருக்கிறது… சுப்பராயன் தான் கரும்புப் பயிரைக் கொண்டு வந்தான் ஊருக்கு – எதிரே அக்கரையில் நாலு இடத்தில் புகை, வெல்ல ஆலைப் புகை – எல்லாம் சுப்பராயன்” (தி.ஜா)
சுப்பராயன்.. சுப்பராயன்… சுப்பராயன்…
மேலே குறிப்பிட்டுள்ள தி.ஜா அவர்களின் வரிகளை படிக்கும்போதே சாமநாதுவின் கொதிக்கும் மனநிலையை உணரலாம். சுப்பராயன் மேல் உள்ள பொறாமை, வன்மம், தன்னால் முடியவில்லையே என்ற ஆற்றாமை எல்லாவற்றையும் சிறுகதையை படிக்கும்போது அந்த சில வரிகளில் காண முடிகிறது. ஆனால் அந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அதே மனநிலையை நடிப்பில் காட்ட வைத்து டெல்லி கணேஷ் அவர்களை சாமநாதுவாக நம் எதிரே கொண்டு வந்த இயக்குநர் வசந்த் பாராட்டுக்குறியவர்.
“தானாகவே படித்து, கடை வைத்து சம்பாதித்து சொத்துக்கள் சேர்த்து, தன் ஏழு பெண்களுக்கும் கலியாணம் முடித்து வைத்து விட்டானே சுப்பராயன்! நமக்கும் தான் நிலமெல்லாம் பிரித்து கொடுத்தான். ஆமா! அதுவும் ஊருக்கு சற்று எட்டாக்கையில் தானே விழுந்தது!“
சுப்பராயன் மீது தான் இவருக்கு அவ்வளவு எதிர்வினை ஆற்றத்தூண்டும் சினம்.
சரீரத்தைப் பெற்ற உயிர்களை ‘சரீரி’ என்போம். தேவதைகளுக்கு உருவம் இருந்தாலும் அவற்றை காணும் சக்தி நமக்குக் கிடையாது. ஆனாலும் சப்த வடிவில் அசரீரியாக நம்மோடு தொடர்பு கொள்வதாக சாஸ்திரம் கூறுகிறது. திஜா அவர்கள் சாமநாதுவின் இறந்து போன மனைவி வாலாம்பாளை தேவதை வடிவில் சரீரியாக கதைக்குள் ஒரு சின்ன பாத்திரமாக கொண்டு வருகிறார்.
வாலாம்பாள்(ரோகிணி) அவ்வப்போது அவரருகே தேவதையாக வந்தமர்ந்து, நெருப்புக்கங்குகளாக தெறிக்கும் அவரது வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் தட்டிக்கேட்கிறார். செல்லமாக கோபிக்கிறார். ஒப்புக்கொள்வாரா சாமநாது! சில நிமிடங்களே வந்தாலும் அந்த பாத்திரத்தை கச்சிதமாக செய்திருப்பார் ரோகிணி.
அப்புறம் வேண்டா வெறுப்பாக கலியாண மண்டபம் நோக்கி நடந்து போய், கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு உம்மென்ற முகத்துடன் அட்சதையை தூவி, உள்ளுக்குள் ஜுவாலை எரிய மணமக்களை ஆசிர்வதித்து, மண்டபத்திலிருந்து வெளியேறி…. நேராக… வேண்டாம்! படத்தை முதலில் பாருங்கள்.
‘பாயசம்’ கதையை ஏற்கனவே படிக்காதவர்கள் இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப்பார்த்து ‘அட.. ராமா!’ என திகைப்பது நிச்சயம். டெல்லி கணேஷ் அவர்கள் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். தி.ஜா அவர்கள் குறிப்பிட்ட அந்த ‘குஞ்சு குளுவான்கள்’ கூட என்னமாய் நடித்திருக்கிறார்கள்! சாமநாதுவின் புள்ளை மற்றும் விதவை மகள் (அதிதி பாலன்), சமையல் காரர், சுப்பராயன் என எல்லோரும் அற்புதமாக தத்தம் பாத்திரத்திற்கு மெருகூட்டியிருப்பார்கள்.
இயக்குநர் வசந்த் மற்றும் டெல்லி சார் (Ganesan Mahadevan Delhi Ganesh ) இருவருக்கும் வாழ்த்துக்கள்.
நண்பர் ராஜு ( Swaminathan Ramasubramanian ) அவர்கள் மூலம் டெல்லி கணேஷ் அவர்கள் முகநூலில் எழுதிய சுயசரிதைக்கு கார்ட்டூன்கள் வரைந்த அனுபவம் மறக்க முடியாதது. அந்த ஆறு மாதங்கள் அவருடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.
இரண்டு நாட்கள் முன்பு நவரசா (பாயசம்) பார்த்த கையோடு அவருக்கு தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து, எனக்கு தெரிந்த வரையில் விமரிசனமும் எழுதுவதாக சொல்லியிருந்தேன்.

'காப்பி' in Guru's Coffee House..

 சிறுவயதில் காலை எழுந்தவுடன் கோபால்/பயோரியா பற்பொடியில் பல் தேய்த்த கையோடு காப்பி குடித்தாக வேண்டும் எங்கள் வீட்டில். 60, 70 களில் எங்கள் அம்மா அகன்ற பாத்திரத்தில் காப்பி பொடி, வெந்நீர் கலந்து தெளிய வைத்தெடுத்த டிகாக்‌ஷனில் கலந்து கொடுக்கும் காப்பி அமிர்தமாக இருக்கும், கொஞ்சம் கூடுதல் சர்க்கரையுடன்.

பிறகு கல்லூரி மற்றும் சீஏ பருவத்தில் காபி சமாச்சாரமெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் மேலோங்க ஸ்டைலாக டீ குடிக்கும் வழக்கம் ஆரம்பமானது. நந்தி கோயில் தெரு ஐயங்கார் பேக்கரி அல்லது பக்கத்தில் நேசே காபி பாரில் டீ குடிப்பது வழக்கம். நண்பர்களுடன் மடித்துக் கட்டிய லுங்கியுடன் திருச்சி மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் காலனியிலிருந்து காலார நடந்து TVS டோல்கேட் பகுதியில் ‘நேத்து ராத்திரி யம்மா!’ பாடல் ஒலிக்க டீ க்ளாஸை சுழற்றி சுழற்றி் குடிக்கும் சுகமே அலாதி.
பின்னாளில் பம்பாய் செம்பூரில் பிரம்மச்சரிய வாழ்க்கை துவங்கியதும் பில்டர் காபி குடிக்கும் ஆவல் அதிகரிக்க காரணம் சக ரூம் நண்பர்கள் தான். எல்லோருமே ஶ்ரீரங்கத்தான்கள். ஆனால் அப்போது பில்டர் வாங்கும் அளவிற்கு பெரிய சம்பாத்தியம் இல்லாததால் அண்ணாச்சி கடையில் வாங்கிய சின்ன அலுமினிய சொம்பை திருப்பிப்போட்டு ஆணியால் சிறு சிறு துளைகள் போட்டு அதை ஃபில்டராக்கி எவர்சில்வர் தம்ளர் மேல் வைத்து இறக்கிய டிகாஷன் காப்பி அற்புதம். ஆனால் நண்பர்கள் ரங்கு, Balasubramaniam Chandrasekaran (சந்துரு), Murali Soundararajan (முரளி), ஶ்ரீராம் எல்லோரும் ப்ரூ காபி குடிப்பவர்கள் என்பதால் நானும் ப்ரூவுக்கு மாறினேன்.
94இல் பஹ்ரைன் வந்ததும் லிப்டன் டிப் ச்சாய் அல்லது ஹஸ்முக்ராய் மசாலா சாய் குடிக்க ஆரம்பிக்க, ஃபில்டர் காப்பி ஹோட்டலில் மட்டுமே குடித்தோம். அதிலும் நிறைய சங்கடங்கள். ‘என்னங்க! பால் ஜாஸ்தியா இருக்கு, கொஞ்சம் டிகாக்‌ஷன் விடுங்க’ என சொல்லிய மறு நிமிடம் படக்கென டிகாகஷனை மேலே கொட்டி அந்த காப்பியை படு கசப்பாக்கிய சரவணபவனை அடுத்த சில வருடங்களில் மூடி விட்டார்கள். மனாமா விருந்தாவன் ஹோட்டலில் மினி டிபனுக்கப்புறம் அவர்கள் கொடுக்கும் காப்பி அருமையாக இருந்தது. கூர்க் காபியாம். ஆனா சூடு பத்தாது.
கடந்த பத்து வருடங்களாக வார இறுதிகளில் மட்டும் ரிலாக்ஸ்டாக வீட்டில் காப்பி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி, சிலசமயம் வாரத்துக்கு இரண்டு நாட்களும் காபி குடிக்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். உம்மல்ஹாசம் பகுதி அல்-ஆதில் சூப்பர் மார்க்கெட் பையன் நான் கடையில் நுழையும்போதே ‘நரசுஸ் காபி பௌடர் கதம் ஹோகயா’ என சொல்வான்.
உயர்தர ஃபில்டர் காப்பி எப்படி செய்வது என நிறைய படித்திருந்தாலும், என்னைப்பொருத்த வரை சற்று கூடுதல் சிரத்தையுடன் செய்தால் அருமையான ஃபில்டர் காப்பி கிடைக்கும் என்பது என் மேலான கருத்து.
புத்தகங்களில் போட்டிருப்பது போல் இரண்டு மூன்று ஸ்பூன் காபி பொடியை போட்டு, கட்டை விரலால் மேலே அமுக்கி, அதற்கும் மேல் ஜல்லி கரண்டி போன்ற ஏதோ ஒன்றை வைத்து அழுத்தி வெந்நீர் ஊற்றினால் டிகாக்‌ஷன் திக்காக வரும் என்பதெல்லாம் கறிக்கு உதவாது. பத்து நிமிடம் கழித்து பார்த்தால் ஒரு சொட்டு கூட கீழே இறங்கவில்லையென்றால் எங்கிருந்து வரும் கள்ளிச்சொட்டு!
யாரோ சொல்லி ஃபில்டர் மண்டையை அதன் மூடியால் நங்..நங் என தட்டினால் ஒரே நிமிடத்தில் இறங்கியது. ஆனால் அரபிக் காபி போல அடிமண்டியுடன் கிடைத்தது. சொன்னவர்கள் பெயரை இங்கு குறிப்பிட்டு முகநூலில் அன்ஃப்ரெண்டாகி விட எனக்கு விருப்பமில்லை.
பில்டர் போடும் முன் அதை காஸ் அடுப்பு சூட்டில் காண்பித்தால் துளைகள் பெரிதாகி நல்ல காப்பி கிடைக்கும் என்று சொன்னவரை இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்காத வரை அவருக்கு நல்லது.
நண்பர் கணேஷின் மனைவி ரமா அவர்களது ஐடியாவிற்கு நன்றி. கொஞ்சம் கொறகொற வென இருந்த காப்பி பொடியை மிக்ஸியில் போட்டு ஒரே அடி (கவனிக்க! ஒரே அடி தான். அதற்கு மேல் அடித்தால் மைதா போல் பொடியாகி விட சாத்தியங்கள் அதிகம்). நல்ல டிகாக்‌ஷன் கிடைத்தது. ஆனால் என்ன வில்லங்கமென்றால், அடுத்த முறை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் ‘ஏம்ப்பா காப்பி பொடி கொஞ்சம் கொறகொறன்னு கிடைக்குமா?’ என கேட்ட என்னை எதோ விஷ ஜந்துவைப்போல் பார்த்தான் மலையாளி சேட்டன்.
லெவிஸ்டா, கல்மனே போன்ற பெரிய பிராண்டுகளை தேடிப்போவோர் வெகு சீக்கிரம் உதயம் நரசூஸ்க்கு திரும்பி வருவது உத்தமம். அருமையான ஃபில்டர் காப்பி கிடைக்க முக்கியமான ஒன்று நமக்கு அருமையான ஃபில்டர் காபி போட தெரிந்திருக்க வேண்டும். கொஞ்சம் மய்யமாக யோசிப்பது போல இருக்கிறதல்லவா!
ஆம். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் உதயம் நரசுஸ் காப்பி பொடியை ஃபில்டரில் போட்டு ரொம்ப கொதிக்கும் நிலைக்கு வருமுன் இறக்கிய வெந்நீரை ஊற்றி ஒரு ஐந்தாறு நிமிடம் பொறுமையாக இருத்தல் அவசியம். கீழே இறங்கிய டிகாக்‌ஷனை எடுத்து மறுபடியும் உள்ளே கொட்டுவது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தாலும் தக்க பலன் கிட்டும். டிகாக்‌ஷன் இறங்கிக் கொண்டிருக்கும்போதே சிம் அடுப்பில் தயாராக பால் கொதித்தல் அவசியம். மறக்காமல் கொதிக்கும் பாலில் உள்ள ஆடையை தயவு தாட்சண்யம் இல்லாமல் ஸ்பூனால் எடுத்து சிங்க்கில் கொட்டுதல் உசிதம். காப்பி குடிக்கும் போது நடுவே பாலாடை நம் நாக்கில் தட்டுப்பட்டால் நீங்கள் ஃபெயில். அரியர்ஸ் அனுமதி கூட கிடையாது. பெங்களூரில் எல்லா சாகர் ஓட்டல்களிலும் அந்த மங்களூர் பையன்கள் கொதிக்கும் பாலிலிருந்து பாலாடையை வடிகட்டி, பிடி கெட்டில் பாத்திரத்தால் மொண்டு மொண்டு அதன் மேலேயே ஊற்றி, காப்பி மேல் நுரையை தூக்கி வைப்பான்கள்.
டிகாக்‌ஷனை தம்ளரில் கொட்டி கொதிக்கும் பாலை மொண்டு ஒரே டேக்கில் கொட்டி சரியான ‘போலீஸ் காக்கி’ நிறத்தில் காப்பியின் தன்மையை கொண்டு வருபவர்கள் உண்மையிலேயே மகான்கள். கொஞ்சம் கூடுதல் டிகாக்‌ஷன் விட்டாலும் அது ‘மிலிட்டரி காக்கி’யாகி விடக்கூடிய அபாயமுண்டு.
சில வீடுகளில் கொடுக்கப்படும் காப்பியை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி விடலாம் அது ‘காலையில போட்ட டிகாக்‌ஷன்’ அல்லது புதிய பால் அல்ல என. சில பெண்கள், நாம் கேட்காமலேயே கிச்சனிலிருந்து வரும்போதே நமக்காக காப்பியை டபராவில் ஆற்றிக்கொண்டே வரும்போது ‘நான் கேட்டேனா!’ என கதறத்தோன்றும். சூடு இல்லாத காபி கொடுக்கும் பெண்களை ஜகம் மன்னிக்காது.
பெஸ்ட் காப்பி என நான் கருதுவது என் சகோதரி Hemalatha Manohar, நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar வீட்டில் அவரது மனைவி Kalpana Sankar மற்றும் பஹ்ரைனில் ரமா கணேஷ், Sudha Hariharan, Hema Kasinath போன்றவர்கள் வீடுகளில் போடும் காபி தான். (கொலை மிரட்டல்கள் வரத்துவங்குவதால் இந்த பட்டியல் மேலும் நீளும்)
விஷயத்திற்கு வருகிறேன். இரண்டு நாள் முன்பு ஆதம்பாக்கத்தில் நண்பர் Gurumoorthy Subramanian அவர்கள் துவங்கியிருக்கும் 'குரூஸ் காபி ஹவுசு'க்கு என் மூத்த சகோதரர் Suresh Babu வுடன் விஜயம் செய்தேன். காபி கோப்பையில் ‘க்ளக்’ என டிகாக்‌ஷன் விட்டு ஒரேமுறை பாலை விட்டு முக்கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அவர் கலந்த காப்பி திவ்யமாக இருந்தது, என்னை நேராக சொர்க்கத்திற்கே கொண்டு சென்றது. மனுஷன் கில்லாடி. காபி,டீ, சமோசா, பிஸ்கெட், கோலி சோடா, ரோஸ்மில்க் என வியாபாரம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அவரது உழைப்பும் அபரிதமாக தெரிகிறது. வாழ்த்துக்கள் குரு!
காபியை குடித்த கையோடு பலேனோவை ஸ்டார்ட் செய்து அடுத்த முக்கா மணி நேரத்தில் பெங்களூர் நெடுஞ்சாலையை பிடித்து ஓட்டும்போதும் காபியின் சுவை நாவில் இருந்தது. குரு ‘ஆத்தா நா பாஸ் ஆயிட்டேன்!’ என கத்தலாம். சிறிய முதலீட்டில் நீங்கள் துவக்கிய இந்த வியாபாரம் வளர்ந்து வாழ்க்கையில் மேலும் உங்களை உயர்த்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

டாகடர் மாலா

 குவெய்த் அவென்யூவிலிருந்து உம்மல்ஹாசம் பகுதி நுழைந்தவுடன் இரண்டாவது குறுக்கு ரோட்டில் திரும்பினால் இவர் வசிக்கும் பில்டிங். மிகப்பெரிய ஹாலின் ஒரு பக்கம் விளக்கேற்றி வைத்து பாபா படம். வாப்பா ஶ்ரீதர்! என வரவேற்பார்.

‘ஶ்ரீதர்! அது செஸ்ட் பெயின் கெடையாது.. அசிடிட்டி தான். படுக்கறதுக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடி சாப்ட்டுடு..2 தலகாணி வச்சு சரிவா படு.. ரிஃப்ளெக்ஸ் வராது..
‘மோகன்! காலைல வெறும் வயத்துல நெக்ஸியம் போட்டுக்கோங்க.. சரியாயிடும். ரெண்டு நாள்ல நிறுத்தாமெ பத்து நாளைக்கி மாத்திரை சாப்பிடுங்க’
‘எதுக்கும் தைராய்டு செக் பண்ணிடு இவளே! காய்ட்டர் இருக்கான்னும் பாத்துடலாம். கழுத்து லேசா வீங்கியிருக்கே! எல்ட்ராக்ஸின் எவ்ளோ எடுத்துக்கறே?’
‘நீ பாபாவை வேண்டிக்கோ.. எல்லாம் சரியாயிடும்’
நேரில் பார்க்கும்போதோ போனிலோ மேற்சொன்ன அட்வைஸ் கொடுக்கும் இவரிடம் பேசினாலே பயம் போய் வலியும் பறந்து போகும்.
‘ப்ளட் டெஸ்ட் மத்த டெஸ்ட் எல்லாம் செஞ்சிடலாம்.. நீ நாளைக்கி ஆஸ்பிடல் வந்துடேன்’ என இவர் சொன்னதும் மறுநாள் 20 கிமீ தொலைவில் ஹமாத் டவுன் அல்லது மால்கியா ஹெல்த் சென்டருக்கு நானும் Mohan Gopal Krishnan னும் காரில் விரைவோம். கூட்டம் அம்மும். உள்ளூர்க்கார பஹ்ரைனிகள். மோகன் பெயரை கூப்பிட்டவுடன் நாங்கள் உள்ளே நுழைந்தால் பேஷன்ட்டிடம் சரளமான அரபியில் பேசிக்கொண்டிருப்பார். சட்டென ஈசிஜி, கார்டியக் என்சைம் என டெஸ்ட்கள் செய்து, எல்லாமே நார்மலா இருக்குப்பா என இவர் சொல்லி பான்ட்டாப்ரசால் மாத்திரையோடு வெளியே வரும்போது ‘அப்பாடா’ என இருக்கும். அந்த அளவிற்கு இவரிடம்
பாசிடிவ் எனர்ஜி..அங்கேயே காண்டினில் சாய் குடித்துவிட்டு நிம்மதியாக கிளம்புவோம்.
அவ்வப்போது எங்கள் கெட்டுகெதரில் ‘வா வாத்யாரே ஊட்டான்டே’ பாடலை கணீர் குரலில் பாடுவார். ‘திருமால் பெருமைக்கு நிகரேது’ பாடல் வரிக்கு வரி மனப்பாடம். கல்யாண வீட்டில் மெஹந்தி, சங்கீத் என காக்ரா உடையில் முன்னாடி நிற்பார்.
மாதந்தோறும் எங்கள் வீட்டில் நடக்கும் கிரியா பாபா சத்சங்கத்தில் இவர் கலந்துகொண்டாலே சத்சங் களை கட்டும்.
இவர் விமரிசையாக நடத்தும் பூஜைகளுக்கு தயக்கமேதுமின்றி பிரசாதம் ஸ்பான்சர் செய்வது சங்கீதா ரெஸ்டுரன்ட் பாபு.
30 வருடங்களுக்கு மேல் பஹ்ரைனில் வசிக்கிறார். தீவிர மஹா அவதார் பாபா பக்தை. 94இல் நான் பஹ்ரைன் வந்தறங்கியதும் இவரிடம் என்னை அறிமுகப்படுத்தியது.. வேற யாரு! நம்ம Ganapathi Subramanian தான்.
எனக்கும் கணபதிக்கும் உடன் பிறவா சகோதரி... Mala Muralitharan!

கணபதி சுந்தரம்

 படுத்துக்கொண்டே தேர்தலில் ஜெயித்தவர்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் படுத்துக்கொண்டே படித்து சிஏ பரிட்சையில் பாஸ் செய்தவர் இவர் மட்டுமே இருக்க முடியும். இவர் Ganapathi Avsr


இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது? வேற யாரு! நம்ம Ganapathi Subramanian தான். இருவரும் திருச்சியில் ஒரே ஆபிஸில் சிஏ ஆர்டிகிள்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் பெயர் கணபதி. இவர் செட்டியார் சமூகத்தைச்சேர்ந்தவர். பக்கா திமுக கட்சிக்காரர். கடவுள் நம்பிக்கை? கடவுளா? கடவுள்னு ஒருத்தர் இருந்தாத்தானே கடவுள் நம்பிக்கையே என்பார். நம்ப கணபதி எப்பவும் நெற்றி, கையெல்லாம் விபூதி மணக்க, ‘மணிகண்டா மணிகண்டா! மாமலை வாசா மணிகண்டா’ என முனுமுனுத்தபடி உலவும் பக்கா ‘அய்யிரு’. Poles apart என சொல்லும்படியாக இருவருக்கும் அரசியல், ஆன்மிகம் என எதிலும் கருத்தொற்றுமை இல்லாவிடினும் மிக நெருங்கிய நண்பர்கள். பாதி நேரம் ஆபிஸில் அரசியல் & ஆன்மிகம் தொடர்பாக பெருத்த ஆர்கியூமென்ட்களுக்கு நடுவே நந்தி கோயில் தெரு ரமணாசில் டீ குடிப்பவர்கள். 

முசிறி கல்லூரியில் பி.காம் முடித்து செவனேன்னு பாங்க் வேலைக்கு பரிட்சை எழுத நினைத்த இவரை சட்டென கல்யாணம் பண்ணி வைத்து ஜெயங்கொண்டத்தில் அப்பா நடத்தும் நகைக்கடையை பார்த்துக்க சொன்னால் புள்ள என்ன செய்யும் பாவம்! நகைக்கடை-வீடு-நகைக்கடை-வீடு என இரண்டு இடத்திலும் உரசி சேதாரமில்லாமல் அடுத்த வருடம் ஒரு குட்டி உதயசூரியன்.. 22..23 வயதில். 

இவரது அப்பா கவிஞர் சுபா திமுக அரசியல் பிரமுகர். பஞ்சாயத்து யூனியன் தலைவர். கலைஞருக்கு நெருக்கமானவர். இவரோ ஆ. ராசா மற்றும் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். இவரது தம்பியும் வட்ட/மாவட்ட செயலாளர் என அரசியல் வாழ்க்கை. குளித்துவிட்டு தலை துவட்டுவது கூட கரைதுண்டில் தான். அய்யரில்லாத இவரது கல்யாணம் அரசியல் மாநாடு மாதிரி தான் நடந்தது அன்பழகன் முன்னிலையில். ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் என அப்பாவுடன் அரசியல் கூட்டங்களுக்கு போவதிலும் நகைக்கடை தொழிலிலும் அதிக ஆர்வம் இல்லாமல், ஆடிட்டராக விரும்பி சி.ஏ படிக்கும் முடிவுடன், மனைவியையும் குழந்தையையும் தன் அப்பா அம்மாவிடம் விட்டு விட்டு, திருச்சி கிளம்பி வந்தவர். மாதமொரு முறை ஜெயங்கொண்டம் விஜயமுண்டு. 

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக திருச்சி மன்னார்புரம் பேர்ட்ஸ் லாட்ஜில் இவர் 80களில் தங்கியிருந்தார். லாட்ஜ் என் வீட்டிற்கு மிக சமீபம் என்பதால் இவருடைய அறையில் இவருடன் கம்பைன்ட் ஸ்டடீஸ் செய்துகொண்டிருந்தேன். நிற்க! என்னுடன் கம்பைண்ட் ஸ்டடீஸ் செய்து சி.ஏ பாஸ் செய்தவர்கள் அப்போ ஏகத்தும் இருந்தார்கள். சிவப்பு/வெள்ளை வர்ண சோனி காஸட் ப்ளேயர் அப்போது பிரபலம். படிப்பு ஒரு பக்கம். ‘பனி விழும் மலர்வனம்’ பாடல் ஒரு பக்கம். லாட்ஜில் எதிரே வரும் பேச்சிலர் விடும் ஏப்பத்தில் மெஸ் புரோட்டா குருமா வாசனை. மன்னார்புரம் நால்ரோட்டில் சமோசா பஜ்ஜி டீ. ‘நைட்டு சனந்தேரி கசம் ஹிந்திப்படம் போலாமா?’ என சுகமாக போய்க்கொண்டிருந்த நாட்கள். ஹிந்தி எதிர்ப்பாவது.. மண்ணாங்கட்டியாவது. 

கணித வாசனையே இல்லாமல் சி.ஏ படிக்க வந்த கணபதிக்கு பெரிய சேலஞ்சே சி.ஏயில் கடினமான கணிதப்பாடம் ஒன்று இருந்தது தான். பிஎஸ்ஸி கணிதம் படித்து வந்தவர்கள் கூட சி.ஏ கணிதத்தில் 40க்கும் குறைவான மார்க்குகள் வாங்கி ஃபெயிலாகி மலைவாசல் அருகே பேஸ்தடித்த முகத்துடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள். செஞ்சோசப்ஸ் குப்புசாமியிடம் கணிதம்
டியூஷன் சேர்ந்து அடுத்த சில மாதங்களில் ‘ஏஸ்கொயர் ப்ளஸ் பீஸ்கொயர் இசீக்வல்டு’ என கணிதத்தை பிச்சி உதற ஆரம்பித்தார். படிப்பில் மனுஷன் புலி தான். 

படுத்துக்கொண்டே படிப்பார் என பகுதியின் ஆரம்பத்தில் சொன்னேனல்லவா! அக்கவுண்டன்சி மற்றும் கணித நோட்ஸ்களை மார்பில்
போட்டுக்கொண்டு தலைக்கு 2 தலகாணி முட்டு கொடுத்து, தரையில் பாய் விரித்து படுத்துக்கொண்டு ராஜேஷ்குமார் நாவலை படிப்பது போல கணித பாடத்தையும் அக்கவுண்டசியையும் கண்களை மேயவிட்டே படிப்பது கண்டு நாங்கள் வியந்தோம். தவிர ரேடியோ செய்தி, பத்திரிக்கைகள் வாசிப்பு, உலக நடப்பு, அரசியல் போக்குவரத்து என எல்லாமே விரல் நுனியில். சி.ஏ ரிசல்ட் வந்து எக்கச்சக மார்க்குகளுடன் பாஸ் செய்து ஜெயங்கொண்டத்தில் தன் நகைக்கடைக்கு மேலேயே ‘கணபதி சுந்தரம், B.Com, ACA, Chartered Accountants’ என போர்டு போட்டு ஒரு வழியாக தன் ஆடிட் ப்ராக்டிஸை வெற்றிகரமாக ஆரம்பித்தார். பணபலம், சொத்து, வியாபாரம், அரசியல் செல்வாக்கு என சகலமும் இருந்தும் தலைக்கணமில்லாது அடக்கமாக இருப்பது இவரது சிறப்பு.

தன்னம்பிக்கையும் அயராத உழைப்பும் வெற்றி மீது கவனமும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்பதை இவரை பார்த்து தெரிந்துகொள்ளலாம். அவ்வப்போது ஊரிலிருந்து போனில் தொடர்பு கொள்வார். 

கோட்டோவியத்துடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணபதி சுந்தரம்!

பி.கு: ‘இப்ப இவரோட ஆடிட் பிராக்டிஸ் எப்பிடி போகுது என கேட்பவர்களுக்கு.. ஆடிட்டராக விசிட்டிங் கார்டுடன் ஆடி ஓடி அல்லாடி சம்பாரிப்பதை மூட்டை கட்டிவிட்டு, வாடிக்கையாளர்கள் நம்பிக்கைக்காக உழைத்து குடும்ப தொழிலில் கவனம் செலுத்தி சகோதரர்களுடன் மூன்றோ நான்கோ நகைக்கடைகள் திறந்து விட்டார். மாடியில் இருந்த இவரது ஆடிட்டர் ஆபிஸ் இப்போ வெள்ளி பாத்திரங்கள் பகுதி... 

மலபார் உணவகம்

 ஒரு வெள்ளிக்கிழமை..

கடந்த வாரங்களில் ஒரு வெள்ளியன்று மதியம் பஹ்ரைன் உமல்ஹாசம் பகுதி கிம்ஸ் ஆசுபத்திரி பக்கம் போயிருந்தோம். முன்பெல்லாம் ஆஸ்பத்திரி எதிரே ரோடு வெறிச்சோடி இருக்கும். ஓரிரண்டு மலையாளி டாக்சிக்காரர்கள் மட்டும்.
காதில் அரிப்பு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், முதுகுப்பிடிப்பு போன்ற சின்ன உபாதைகளுக்கான சிகிச்சைக்கு சிறந்த இடம். 5 தினார் பணம் கட்டி நம் அடையாள அட்டை காண்பித்த 5 நிமிடத்தில் மாடிக்கு அனுப்புவார்கள். அங்கே மலையாளி சேச்சி உங்கள் எடை, உயரம்( உயரம் எதற்கு!), டெம்பரேச்சர், இரத்த அழுத்தம் எல்லாம் பார்த்து ‘அவ்டே இருக்கி’ என நாற்காலியை காட்ட, அடுத்த பத்தே நிமிடத்தில் டாக்டரை பார்க்கலாம். கீழே நம் அடையாள அட்டை எண்ணை கணினியில் அவள் தட்டி விட்டதும் நமது குண்டலினி எல்லாவற்றையும் மேலே டாக்டர் தன் கணினியில் பார்த்துவிடுவார். ‘நாட்ல எவ்டே?’ தான் அவரது முதல் கேள்வி. அப்புறம் தான் என்ன ரோகம் என விஜாரிப்பார். பரிவுடன் பேசி நோய் ஏன் வந்தது, எப்படி சிகிச்சை அளிக்கலாமென சுருக்கமாக பேசி ‘பின்னே காணாம்’ என முடித்து சரியான மருந்து கொடுத்து அனுப்பி வைப்பார். நிவாரணம் நூறு சதம் கியாரண்டி. தேவையில்லலாத டெஸ்டுகள் செய்து பணம் பிடுங்க மாட்டார்கள்.
தற்போது பக்கத்தில் பார்மசி, கண்ணாடி கடை எதிரே புதிய ஹோட்டல் பரணி என அந்த இடமே களை கட்டியிருக்கிறது. பொதுவாக கேரள விஜிடேரியன் தாலி எங்களுக்கு பிடிக்கும். மோட்டாவா பாரிக்கா (அரிசி) என நம்மை கேட்டு தாலி கொண்டு வந்து வைப்பார்கள். பொலபொலவென முத்துக்கள் போல கேரள கொட்டை அரிசி, தாராளமாக தேங்காய் துருவிபோட்ட முட்டைகோசு பொறியல், சிறிதுள்ளி+கொடும்புளி தூக்கலுடன் சாம்பார், வாடாமல்லி கலரில் அவன் வைக்கும் சட்னி போன்ற வஸ்துவை விரல் தொட்டு நக்கிப் பார்த்தால் கசப்புடன் கூடிய அருமையான ருசி, பாகற்காயை அரைத்துவிட்ட சட்னி அது. முழுவதும் தோல் சீவாத பாதி நிர்வாணமாய் வாழைக்காய் மற்றும் மோதிரவிரல் சைஸில் சேனை துண்டங்களுடன் அவியல் அமிர்தம். புழுங்கல் அரிசி மற்றும் பஞ்சசாரத்தில் (வெல்லம்) செய்த அரவண பாயசம் ஒரு மடக்கு விழுங்கியபின் சாவகாசமாக முந்திரி மற்றும் தேங்காய் பற்களை மென்று தின்னும் சுகம் மறுமையில் வைகுண்ட ப்ராப்தி கிடைத்த மாதிரி.
திவ்யமான சாப்பாடு. இதையெல்லாம் மனதில் கொண்டு அந்த புதிய ஹோட்டலில் நுழைந்தால் ‘சாரே! சோறு கழுஞ்ஞு.. மணி ரெண்டற..’ என்றான் படுபாவி.
ஏமாற்றத்துடன் வெளியே வந்து எதிரே பான்ஏசியா ஹோட்டலில் நுழைந்தோம். இந்த ஹோட்டலை யாரோ ஒரு வட இந்தியன் தானே நடத்தி வந்தது! உணவு ருசியாக இருந்தாலும் கூட்டம் எப்பவும் இருக்காது. காரணம் நம் ஆர்டர் கொடுத்தபின் தான் சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பிப்பார்கள். வீட்டில் சண்டை போட்டு பிறகு மனைவியை சமாதானப்படுத்த முனையும் கணவர்களுக்கு இந்த ஹோட்டல் சரியான இடம். நிறைய பேசி தீர்த்துக்கலாம். பொது இடம் என்பதால் கணவர்களுக்கும் பாதுகாப்பு உத்திரவாதம். நாங்களும் அதுமாதிரி அவ்வப்போது வருவோம்😄. ஆனால் தற்போது யாரோ ஒரு மலையாளி அந்த ஓட்டலை எடுத்து புதுப்பித்து அதை மிலிட்டரி ஹோட்டலாக்கி விட்டார். மரக்கறி உணவும் உண்டு.
மதியம் இரண்டரை மணிக்கு கூட்டம் அம்மியது. ரிசப்ஷனிலேயே அரை மணி நேரம் காத்துக்கிடந்து இரண்டு பேருக்கான சீட் கிடைக்க உள்ளே நுழைந்தோம். எல்லாம் மாடர்ன் யுவதிகள். ஸ்ட்ரெய்ட் ஹேர், ஹேர் கலரிங் செய்து தலையை அங்கங்கே பிரவுன் கலராக்கி, உதட்டு சாயம், டீஷர்ட், லெக்கின்ஸ், உச்சந்தலையில் சொருகியிருக்கும் குளிர் கண்ணாடி என வட இந்திய பெண்கள் போல இருக்கே! ஆனா பக்கத்தில் பட்டை மீசை, சிவந்த கண்கள், தடித்த சுண்டுகளுடன் (உதடுகள்) மலையாளி கணவர்கள். ‘ஏ மோனே! நீ இப்பொ தாழ வீழும்! இவ்டே வா!’ என அந்த பெண்களில் ஒருவர் தன் குழந்தையிடம் க்றீச்சென கத்தி விளித்தபோது தான் தெரிந்தது கரீனா கபூர் போல மாடர்னாக இருந்த அவரும் மலையாளி என.
30 நிமிட பயணத்தில் சவுதியிலிருந்து பெரிய 4 வீல் ட்ரைவ்வில் பஹ்ரைன் வந்து, ஊணு கழிச்சி, மாலில் ஷாப்பிங் செய்து, மாலை சினிப்ளெக்ஸில் நவீன் பௌலி படம் பார்த்துவிட்டு இரவு சவுதி திரும்புபவர்கள்.
முன்பெல்லாம் பொதுவாக மலையாளி பெண்களென்றாலே நாம் காண்பது ஶ்ரீவித்யா போல தாட்டியாக, நான்கடி அடர்ந்த சுருள் கேசத்தை வெளிச்செண்ணெயில் பராமரித்து, சீர் செய்யப்படாத திக்கான புருவங்கள், உதட்டுக்கு மேல் அங்கங்கே மின்னும் மெல்லிய ரோமங்கள். சீமா சசி , ஷீலா, சாரதா போன்ற நடிகைகளை நினைவூட்டுவார்கள். இப்ப எல்லாம் மாறி விட்டது. மலையாள வாடை இல்லாத ஆங்கிலம்.
அவர்கள் எதிரே சட்டிச்சோறு எனப்படும் புதிய மெனுவாம். சாதாரண பீங்கான் தட்டில் வைக்கப்படும் அசைவ உணவை மண் சட்டியில் கொட்டி, பறப்பன ஊர்வன நடப்பன மிதப்பன என முழு நேஷனல் ஜியாக்ரஃபியே அந்த மண் சட்டியில் இருக்க அத்தனை மலையாளி அன்பர்களும் உணவை கபளீகரம் செய்து பல் குத்திக்கொண்டு டெசர்ட்டுக்காக காத்திருந்தார்கள்.
ஹோட்டலுக்கு வெளியே தனியாக ஒரு பெரிய கண்ணாடி அறை. பழரசம், ஃபில்லே, பர்கர் என வகை வகையான துரித உணவுகள். கடைக்கு வெளியே பையன் ஒருவன் நின்று கொண்டு ஜன்னல் வழியாக பதார்த்தங்களை எடுத்து வெளியே நிற்கும் கஸ்டமர்களுக்கு சேவை. அங்கேயும் செம கூட்டம். ஆண்களும் பெண்களும் ஊதி ஊதி ச்சாய் மற்றும் பக்ஷணங்களை மொஸ்க்கிக்கொண்டிருந்தார்கள்.
மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தோம் பரிப்பு வடை (பருப்பு), பழம்பொரி (நேந்திரம்பழ பஜ்ஜி), பத்திரி(அரிசி), உன்னியப்பம், சுகியன்(சுய்யம்), புட்டு, பேரீச்சம்பழ கேக்.. அந்த பக்கம் பெரிய பாய்லரில் சமோவர் டீ. அப்படியே வெளியே நின்றுகொண்டே டீ வாங்கி குடித்தோம். பாய்லர் டீ சுவையே தனி. ஹோட்டலுக்கு உள்ளே 100 பேரும் ஹோட்டலுக்கு வெளியே பலகாரம் கழிக்க மட்டும் பதினைந்து இருபது பேர். அந்த பக்கம் காரில் இருந்தபடியே பாம் பாம் என ஹார்ன் அடித்து கடக் ச்சாய் ஆர்டர் செய்யும் உள்ளூர் பஹ்ரைனிகள்.
பொதுவாக பொருளாதார மந்த நிலையில் (recession) பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவை நுகர்வு (consumption) குறைவாக இருக்கும் என்று எவன் சொன்னான்! கார்கள் நிறுத்தக்கூட அங்கே இடமில்லை.
மெல்ல தலையை நிமிர்ந்தி மேலே பார்த்தேன். உணவகத்தின் பெயர்ப்பலகையில் உணவு வகைகளின் பட்டியல் வண்ண விளக்குகளில்..
இவர்களது வெற்றியின் ரகசியம் இது தான்! 👇🏿
Malabar
Indian
Chinese
Arabic
மலபார் உணவு இந்திய உணவை விட வித்தியாசமானதாம்! எப்படியோ.. அந்த பாய்லர் டீ மற்றும் பக்ஷ்ணங்களுக்காக அங்கே படையெடுக்கும் வாடிக்கையாளர்களில் நானும் ஒருவன்..
(சீதாபதி ஶ்ரீதர்)