Friday, June 20, 2025

QFR Paddy குமாரும் மாண்டலின் இசையும்..


Subhasree Thanikachalam அவர்களின் QFR-400 இன் கடந்த 399 பாடல்களில் சிறந்த 50 பாடல்களை top-50 count downஇல் கண்டு களித்துக்கொண்டிருக்கிறோம். சிறந்த பாடகர்கள், சிறந்த வாத்திய கலைஞர்களை சுபஶ்ரீ அவர்கள் பாராட்டுவதுடன் அந்த பாடலின் சிறப்பையும் நமக்கு விளக்கும்போது முதல் 50 பாடல் வரிசையில் இடம் பிடித்ததன் காரணத்தையும் அறிய முடிகிறது.
மாண்டலின் இசைக்கருவி..
இத்தாலி நாட்டில் ‘மாண்டலோ’வாக பிறந்து இந்திய கர்நாடக இசையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மின்னியல் நரம்பிசைக்கருவி மாண்டலினை மாண்டலின் ஶ்ரீனிவாஸ் அவர்கள் இந்திய இசை மரபுக்கேற்ப மாற்றியமைத்து பரவலாக்கி உள்ளார். பஞ்சாபி பண்பாட்டில் பரவலான நடன இசை பாங்கராவிலும் மாண்டலின் பயன்படுத்தப்படுகிறது.
‘இசை ஒரு தெய்வீகப் பரிசு. எதை வாசித்தாலும் அது கேட்பவர்களின் ஆன்மாவைத் தொட வேண்டும். அது எப்படி சாத்தியம்? நீங்கள் அனுபவித்து வாசித்தால், கேட்பவர்களும் அவ்வாறே அனுபவிப்பார்கள்’ என்று கூறிய மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அவர் கூறியதற்கு ஏற்ப அனுபவித்து வாசித்து கேட்பவர்களின் ஆன்மாவை வருடிய அமர சங்கீதக் கலைஞர்.
இப்படியாக நம் ஆன்மாவை வருடும் மாண்டலினால் திரையிசையை QFRஇல் வாசிப்பவர் பத்மநாபன் (எ) Paddy குமார் அவர்கள். பொறியியல் படிப்பு படித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகானத்தில் வசிப்பவர்.
QFRஇல் எனக்கு மிகவும் பிடித்த இவர் மாண்டலின் வாசித்த பாடல் எது என கேட்டால் சட்டென மனதில் தோன்றுவது ‘தூது செல்ல ஒரு தோழி ’ (QFR-253) தான். பாடலின் ஆரம்பமே இவரது மாண்டலின் இசை தான். ஒரே வார்த்தை: அபாரம். கண்களை மூடிக்கொண்டு கேட்டீர்களானால் மெல்லிசை மன்னர்களுக்காக மாண்டலின் ராஜு சார் வாசித்த அதே அசல் இசையை Paddy குமார் ஸ்ருதி சுத்தமாக கொண்டு வருவார்.
QFR-197 ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடலில் பாடகி அனு ஆனந்த்தின் ஆரம்ப ஆலாபனையைத்தொடரும் இவரது மாண்டலின் இசை பிரமாதம்.
‘சீட்டுக்கட்டு ராஜா’ (QFR-295)வின் முதல் இடையிசையில் பாங்கோஸ் (வெங்கட்) உடன் இவர் வாசிக்கும் மாண்டலின் இசை அற்புதம்.
ஏராளமான QFR பாடல்களுக்கு இவர் வாசித்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல சில பாடல்கள்:
QFR-96 ‘எல்லோரும் கொண்டாடுவோம்’.
QFR-313 ‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ’
Paddy குமாருக்கு இறைவன் அளித்த மற்றொரு திறமை இவரை பாடகனாக்கியது. இவரை பார்த்த மாத்திரத்தில் இவருக்கு கணீரென குரல் இருக்கும் என ஊகிக்கவே முடியாது, KJ ஏசுதாஸ் மற்றும் ஜெயச்சந்திரன் குரல் இவருக்கு அசாத்தியமாக வருகிறது.
2 வருடங்களுக்கு முன்பு குழலிசைக்கலைஞர் KJ விஜய் அவர்களுடன் இணைந்து இவர் ‘மன்னிக்க மாட்டாயா’ (QFR-24) பாடலை அசாத்தியமாக பாடியிருப்பார். அதற்குப்பின் ‘புத்தம்புது பூ பூத்ததோ’ (QFR-46) பாடலை ‘இது பத்மநாபன் குரலா?’ என வியக்கும்படி சற்று வித்தியாசமாக பாடியிருப்பார்.
அப்புறம் இவர் அசத்திய பாடல்கள் ஏராளம். ‘கீதா சங்கீதா ‘(QFR-74, ‘ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்’ (QFR-259), ‘வீணையடி நீ எனக்கு’ (QFR-233) மற்றும் ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு’ (QFR-211) பாடல்களை effortless ஆக பாடுகிறார்.

No comments:

Post a Comment