Wednesday, August 13, 2014

Caricaturist Sugumarje

Caricaturist Sugumarje அவர்களுடன் சுமார் ஒரு மணி நேர சந்திப்பு. முதல் சந்திப்பு அது. ஶ்ரீரங்கம் திருவானைக்காவலில் இருந்து கரூர் பைபாஸ் ரோடு வந்ததும் வண்டியை ஓரங்கட்டி அவருக்கு போன் செய்தபோது ' அடுத்த ஃபேஸ்புக் ஃபரெண்டா? அது யாரு?' என மனைவி கேட்டார். உடனை தன் ஆபிஸிலிருந்து வெளியே வந்து நின்றுகொண்டு தன் ஆபீசை ஆடைய வழி சொன்னார்.

பார்க்க கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் மிக அமைதியாக பேசுகிறார். குறைவாகவும் பேசுகிறார். அழகாக திருத்தப்பட்ட சால்ட் அன்ட் பெப்பர் தாடி..

'உங்கள் ஓவியங்கள் நன்றாக இருக்கிறது ஶ்ரீதர். ஆனா


ல் நீங்கள் human anotomy கொஞ்சம் படிப்பது அவசியம்' என அறிவுறுத்தினார். முகம் வரையும்போது கண்கள், தாடை போன்ற பகுதிகள் இன்னும் அழகாக வரைய இன்னென்ன செய்யவேண்டுமென நிறைய யோசனைகள் கொடுத்தார். விழிகள் வரையும்போது அதன் நடுவே எப்படி வெள்ளைப்புள்ளிகள் வைப்பதென்பதை அழகாக வரைத்தும் காட்டினார்.

ஓரிரு நிமிடங்களில் தான் காரிகேச்சர் வரையும் விதத்தையும் விளக்கினார். அதில்லாமல் ஓவியங்கள் வரையும்போது தான் பயன்படுத்தும் சில உத்திகளையும் தயங்காமல் சொல்லி என் மனதில் வெகுவாக உயர்ந்தார். Suresh cheenu வரையும்
ஓவியங்களையும் புகழ்ந்தார். அவர்கள் இருவரது ஓவியங்களுக்கும் உள்ள வித்தியாசங்களையும் அழகாக விளக்கினார்.

அடுத்து அவர் டிஜிட்டல் பேனா எடுத்து தான் எப்படி வரைகிறாரென்பதையும் செய்துகாட்டினார். ஏற்கனவே அவர் வரைந்த காரிகேச்சர்களையும் நமக்குக்காட்டினார். திடீரென 'நீங்க உட்காருங்க 2,3 நிமிஷத்துல நானே உங்கள வரையறேன்' என சொல்லி கிடுகிடுவென எங்கள் இருவரையும் வரைந்து காட்டி அசத்தினார். படம்
வரையும்போது தாடையில் ஆரம்பித்து தலைமுடியில் முடிக்கிறார்.

விடைபெற்றுக்கொண்டு அவர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தோம். வண்டியை எடுத்து தில்லைநகர் ஆர்ச் உள்ளே புகுந்து 1வது க்ராஸ் ஓரத்தில் இளநீர் குடிக்க நிறுத்தியவுடன் செல்போனை பார்த்தால் தான் வரைந்த எங்கள் படங்களை அடுத்த 5 நிமிடத்திலேயே பதிவு செய்திருந்தார்.

சுகுமார்ஜே சாருக்கு ஜே!!

எது இன்று உன்னுடையதோ...

அந்த பதிவாளர் அலுவலகம் திருச்சி நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. முன்கூட்டியே போனில் சொல்லி வைத்திருந்ததால் கம்பெனி பிரதிநிதி (க.பி) என்னையும் மனைவி Usharani Sridhar ஐயும் காலை எங்கள் வீட்டிலிருந்து தன் இன்டிகா காரில் ஏற்றிக்கொண்டார்.
நிலம் தொடர்பான பதிவு செய்ய நாங்கள் அங்கு சென்றதும் பத்திரம் எழுதும் கடை முன் கார் நிற்க, க.பி மட்டும் உள்ளே ஓடினார். "ஒன்னும் பெரிய வேலை இல்ல சார். அக்ரிமென்ட் கம்ப்யூட்டர்ல ரெடியா இருக்கு. ஆயிர்ருவாய்க்கு பத்திரத்தாள் வாங்கி அதுல ப்ரின்ட் எடுக்கனும்" என சொல்லி ஓடிய க.பி.க்கு சுமார் 25 வயது தான் இருக்கும். மாதத்தில் முக்காவாசி நாட்கள் தமிழ்நாட்டின் பல பாகங்களுக்கு வாடிக்கையாளர்களை கூட்டிச்சென்று அவர்கள் கம்பெனி மூலம் வாங்கிய நிலத்தை அந்தந்த மாவட்ட/ஊர் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுப்பது அவர் வேலை. அவரே 'செல்லர்' மற்றும் ‘கம்பெனி இயக்குநர்’ என கையொப்பமிடுவார்.
பதிவு செய்ய முன்கூட்டியே எல்லா செலவுகளுக்கும் சேர்த்து கனிசமான தொகையை நம்மிடமிருந்து வாங்கி விடுவார்கள். நமக்கு அதிகம் வேலையில்லை. இளநீர் சாப்பிட்டுக்கொண்டே (பைசா அவர் குடுத்துட்டார்) அவர்கள் கை காட்டுமிடத்தில் கையொப்பமிடவேண்டும். எல்லாம் முடிந்தபின் திருச்சி பஸ் ஸ்டாண்டில் பெரிய ஓட்டல் ஒன்றில் மதிய சாப்பாடு வாங்கிக்கொடுத்து வாழைப்பழம் பீடாவுடன் நம்மை வீட்டில் ட்ராப் செய்துவிடுவார்கள்.
"பதிவு செஞ்சவுடன ஒரு வில்லங்கம் எடுக்கனுமே" என தயங்கி கேட்கும் நம்மிடம் "இன்னும் 10 நாள்ல சிஸ்டத்துல ஏத்திடுவாங்க.. அப்பறமா நீங்க ஆன்லைன்ல போட்டு வில்லங்கம் எடுத்துறலாம்" என டக்கென பதில் வரும்.
"ஏம்ம்பா..நெலத்தை சுத்தி காம்பவுன்டு செவுரெடுத்து இரும்பு கேட் போட்டு கேட்டான்ட 'இந்த நிலம் இன்னாருக்கு சொந்தம்..மீறி உள்ளே வருபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'னு போர்டு வைக்கனுமே என வெள்ளந்தியாக கேட்ட நம்மிடம் அவர் "சார் நான் ரிஜிஸ்ட்ரேஷன் டீம். அதெல்லாம் மார்க்கெட்டிங் டீம் பாத்துப்பாங்க" என சொல்லிவிட்டு '10 கிலோமீட்டருக்கு சுத்திலும் வெறும் நெலந்தான் இருக்கு.. கல்லு நட்டதே பெருசு.. இவுருக்கு காம்பவுன்டு செவுராம்" என அவர் முனுமுனுத்தது நம் காதில் லேசாக விழுந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அந்த பக்கம் திரும்பிக்கொண்டோம் .
பக்கத்தில் இன்னொரு இளைஞர். அவரும் கஸ்டமராம். கத்தார் பார்ட்டி. சம்பிரதாயத்துக்கு அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தேன் தமிழில். வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே பதில் சொன்ன அவர் பிசியாக தினமணி படித்துக்கொண்டிருந்தார். இதற்குள் பத்திரங்கள் ரெடி செய்து நம்மிடம் வந்தார்கள். எல்லா பக்கங்களிலும் கருப்பு மையில் கையொப்பமாம். போட்டோம்.
"சார்.. நீங்க கத்தார் பார்ட்டிக்கு சாட்சி கையெழுத்து போடுங்க.. அவுரு உங்களுக்கு சாட்சி கையெழுத்து போடுவார்" என இவர் சொன்னதும் எனக்கு சுள்ளென கோபம் வந்தது. "அதெப்பிடிப்பா? அவர இப்பத்தான் நா பாக்கறேன். எந்த நெலத்த எப்பிடி வாங்கறார்னு எனக்குத்தெரியாம நா எப்பிடி சாட்சிக்கையெழுத்த அவருக்கு போடமுடியும்" என எகிற, அவர் உடனே கூலாக "பரவால்ல சார்.. நம்ம டிரைவர் போடுவார்" என சொல்லவும் தயாராக காத்திருந்த டிரைவர் கிடுகிடுவென சாட்சி கையெழுத்து போட்டார்.
" என்னப்பா! மணி ஒன்ற.. எப்ப முடியும்?" பொறுமையிழந்து கேட்ட என்னிடம் அவர் "மொத்த டாக்குமென்ட்ட ரெடி பண்ணி மேடம் டேபிள்ள வெக்கனும். அவங்க வந்து சுறுக்க ரெண்டு , ரெண்ட்ரைக்குள்ளாற முடிச்சுடுவாங்க" என்றார். பதிவாளர் ஒரு பெண்ணாம்.
இரண்டு மணிக்கு மேடம் வந்ததும் அவர் மேசையைச்சுற்றி யார் யாரோ நின்று கொள்ள எங்களை வெளியே நிற்க வைத்தார்கள். துண்டு பேப்பர்கள் சொறுகி பல ரிஜிஸ்தர்களை அவர் முன் வைக்க அவர் ஏதோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.
'இந்த அலுவலகம் கண்காணிப்பு கேமிராவுக்குட்படுத்தப்பட்டுள்ளது' என்ற போர்டை ஆச்சர்யத்துடன் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே "செல்வம் வாங்க சார்!" என குரல் கேட்டதும் கத்தார் பார்ட்டி உள்ளே ஒடினார். குனிந்தவாறு இருந்த பதிவாளர் பெண்மணியின் கண்கள் மட்டும் தன் மூக்குக்கண்ணாடிக்கு மேல் வெளியே வந்து தீர்க்கமாக அவரை பார்த்து ஏதோ கேட்க கத்தார் பார்ட்டி திருப்பதி லட்டு மாதிரி இருந்த தன் மோட்டா மணி பர்ஸிலிருந்து சுமார் 10 க்ரெடிட் கார்டுகளுக்கு நடுவே இருந்த பான் கார்டை வெளியே எடுத்துக்காட்ட கிஷ்ணமூர்த்தி என்ற குமாஸ்தா "இந்தாண்ட வாங்க சார்" என அவரை கூப்பிட்டார். வெள்ளை வேட்டி சட்டையணிந்த கருப்பான கிராமத்து முதியவர் கிஷ்ணமூர்த்தி. கி.ராஜநாராயணன் சாயல். முரட்டுத்தோற்றம்.
அடுத்து நாங்கள். "மேடம் உங்க பான் கார்டெங்க?" என என் மனைவியை கிஷ்ணமூர்த்தி கேட்க கூட வந்திருந்த க.பி. உடனே அவர் காதில் ஏதோ சொல்ல, என் பான் கார்டை மட்டும் பதிவாளர் பெண்மணி பரிசோதித்தார். மேலும் ஆறேழு சிப்பந்திகள் எதற்காக எங்களைச்சுற்றி நிற்கிறார்களென தெரியவில்லை. டொம் டொம் அந்த பிரதேசமே அதிர அவர்கள் சீல் அடிக்க நாங்கள் கோத்ரொஜ் பீரோவை ஒட்டி பவ்யமாக நின்றோம்.
"அங்க நேரா பாருங்க சார்"- கிஷ்ணமூர்த்தி கை காட்ட அந்த திசையில் உள்ள கவுன்டர் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு வெப்கேமிரா நாகப்பாம்பு போல நம்மை படமெடுத்தது. திருப்தியுடன் நான் மனைவியை பார்க்க புடவையை சரி செய்துகொண்டு அவளும் போஸ் கொடுத்தாள்.
அடுத்து கட்டைவிரல் பதிவு. நம் கை கட்டை விரலை கிஷ்ண மூர்த்தி இறுக்க பிடித்து மையில் தொட்டு பத்திர தாளில் மாறி மாறி அழுத்த உயிர் போகும் வலி. ரிஜிஸ்ட்ரேஷன் கட்டன ரசீதையும் நம் படமெடுத்த காகிதத்தையும் வெளியே எடுத்து அதில் நாம் கையொப்பமிடவேண்டுமாம்.
பிரின்ட்டர் கக்கிய காகிதத்தை பார்த்தேன். இந்த போட்டோவுல இருக்கற ஆசாமிக்கு கிட்டத்தட்ட நம்ப மொக ஜாடை இருக்கே என நான் வியந்து மறுபடியும் போட்டோவை.. அடச்சீ! அது நம்முடைய போட்டோ தான்! கிட்டத்தட்ட ஒற்றைக்கண் சிவராசு மாதிரி ஆக்கிவிட்டார்கள் பாவிகள்..
அதற்குள் வேறு ஏதோ தவறு நடந்துவிட 'செல்வம்' என்று பிரின்ட் செய்யப்பட்டுள்ள ரசீதை என் முன் நீட்டினார்கள். ‘அய்யா! நா சீதாபதி ஶ்ரீதருங்க!’ என ஏவியெம் ராஜன் மாதிரி பரிதாபமாக சொல்ல ரசீதை கையால் அடித்து பேரை மாற்றி எழுதினார் கிஷ்ணமூர்த்தி. ‘சார்..,பேரு மாறி இருக்கே... அத கைல திருத்தலாமுங்களா? சிஸ்டத்துல மாத்த வேணாமுங்களா?‘ என்ற என்னிடம் "ரசீதுல பேரை விட நம்பரு தான் முக்கியம்...நாங்க பாத்துக்கிடுவம்" ... கிஷ்ணமூர்த்தி லேசாக உஷ்ணமூர்த்தியானார்.
அந்த வெப் கேமிரா, தம்ப் இம்ப்ரெஷன் பார்ட்டிகள் எல்லோரும் அரசாங்க ஊழியர்கள் கிடையாதாம். அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட சர்வீசாம் அது. அதற்கென்ற தனியாக சார்ஜ் கொடுக்கவேண்டுமென கிஷ்ணமூர்த்தி சொல்ல நம் க.பி. மறுபடியும் அவர் காதில் ஏதோ சொல்ல கிஷ்ணமூர்த்தி முகத்தில் மலர்ச்சி. "நீங்க வெளிய இருங்க சார் " என நம்மை அனுப்பிவிட்டார்கள்.
ஒருவழியாக முடிந்து வெளியே வந்தோம். எல்லாமே ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் அங்கு ஓடுகிறது. பதிவாளர் பெண் நம் அடையாள அட்டை, தஸ்தாவேஜுக்களை அலட்சியமாக பார்வையிடுகிறார். நம்பரை சரி பார்க்கிறார். உடனே கிடுகிடுவென கையொப்பமிடுகிறார். நடுவே பிஸ்லேரி அருந்துகிறார். எப்போதாவது ஏதோ கேள்வி கேட்க கிஷ்ணமூர்த்தி போன்றவர்கள் முன்னே பாய்ந்து உடனே பதில். தள்ளி நிற்கும் நமக்கு இனம்புரியாத பயம். தேவையில்லாமல் சுற்றிலும் கூட்டம். 'லீகல் சர்வீஸ் சார்ஜஸ்' என மொத்தமாக நம்மிடம் ஏற்கனவே வசூலித்த பணத்திற்கு விளக்கமெல்லாம் கிடையாது. கேட்டால் வெடுக்கென பதில்.
பதிவாளர் பெண் இருக்கையின் பின்புறம் லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் படங்கள். அந்தப்பக்கம் பெரிய கிருஷ்ணர் படம்... பக்கத்தில் கீதோபதேசம்..மெல்ல வாசித்தேன்...
"எது நடந்தோ அது நன்றாகவே நடந்தது" ( ஆஹா.. அப்ப நிலம் வாங்கியது நல்லது தான்)
அடுத்த சில வரிகளுக்குப்பின்...
" இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது" (ஐயோ! நாராயணா! விசு ஜோக் ஞாபகத்துக்கு வருதே!) 
No automatic alt text available.

ஆனந்த் ராகவ் & சுதாகர் கஸ்தூரி

இரண்டு பெரிய எழுத்தாளர்களை முதன்முதலில் நேரில் பார்க்கப்போகிறோம்... எப்படி நம்மிடம் அவர்கள் பேசுவார்கள்...என்னென்ன விஷயங்கள் நமக்கும் அவர்களுக்கும் பொதுவானது போன்ற கேள்விகளுடன் மல்லேஷ்பாளயாவிலிருந்து கிளம்பினேன். 

ஒருவர் ஆனந்த் ராகவ்.. ஷ்ரத்தா மேடை நாடக குழுவின் தலைவர், பிரபல பத்திரிக்கைகளில் சிறுகதை மற்றும் கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர், கலைஞர் டீவி நாளைய இயக்குநர் குறும்படங்கள் சிலவற்றின் கதாசிரியர், நாடக நடிகர், விரைவில் வெள்ளித்திரையில் நாம் காணப்போகும் சினிமா நடிகர், company secretary, ஒரு IT நிறுவனத்தின் Chief Financial Officer, குழந்தைகள் நலனில் அபரிதமான அக்கரையும் பாசமும் கொண்ட தந்தை ( ப்ளஸ் 2 படிக்கும் பையனின் நலன் கருதி டீவிக்கு தடை விதித்து தானும் டீவி பார்க்காமல் இருக்கிறார்).

மற்றொருவர் சுதாகர் கஸ்தூரி.. தமிழகத்தின் டான் ப்ரௌன்..விஞ்ஞானக்கதைகள் எழுதி எல்லோரையும் மலைக்க வைத்துக்கொண்டிருப்பவர். குறும்பு மற்றும் நகைச்சுவை இழையோடும் சிறு கதைகள், தமிழ் செய்யுள், இலக்கணம், கவிதைகள், தமிழ் இலக்கியத்திலிருந்து ஏராளமான மேற்கோள் காட்டி அதை திறம்பட தன் கதைகளின் கருவுக்குள் புகுத்தி அசத்தல் சிறுகதைகள் எழுதுபவர்..

இருவரும் படு ஸ்மார்ட்... ஸ்மார்ட் கேஷுவல் உடையணிந்து, குறுந்தாடியைச்சுற்றி ஓரிரு நாள் தாடியுடன் மௌனராகம் கார்த்திக் மற்றும் ரன்பீர் கபூரை நினைவுபடுத்தினார்கள். இருவரும் போட்டோவில் பார்த்தைவிட நேரில் மிக இளமையாக ஐந்தாறு வயது குறைவாகவே காணப்பட்டார்கள்.

சில்க்போர்டு சமீபம் ஒரு கஃபே காஃபி ஷாப்பில் மூவரும் சந்தித்தோம். பரஸ்பரம் குடும்பம், குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயங்கள், அலுவல், பஹ்ரைன் வாழ்க்கை பற்றிய நுணுக்கமான விபரங்கள் பற்றி நிறைய பேசினோம். க்ராய்சோ(ன்), பிக்கீஸ், டார்ஜிலிங் தேனீர், கருப்பு காபி சகிதம் மூவரும் சுமார். ஒரு மணி நேரம் பேச முடிந்தது. இருவருக்குமே பல நாடுகளுக்கு சென்று வந்த அனுபவங்கள் ஏராளம். இலக்கியம், அரசியல், சினிமா, உலக நடப்பு என எந்த துறை பற்றியும் விவாதிக்கக்கூடியவர்கள். ஏதோ பல வருடங்கள் அறிமுகமானார்கள் போல பேசிக்கொண்டிருந்தோம்.

திறமையான எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு எத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பது இவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தெரிந்தது.

மணி ஐந்தரையானதும் சுதாகர் விடைபெற்றுக்கொண்டார். இதற்குள் ராஜ்ஜிடமிருந்து( Rajagopalan Trichy ) போன் வந்தது. அதன்படி ஆனந்த் என்னை தன் காரில் கூட்டிச்சென்று பன்னர்கட்டா ரோட்டில் ஒரு சிக்னலில் இறக்கிவிட அங்கே மற்றொரு காரில் ராஜ் எனக்காக காத்திருந்தார். ராஜகோபாலுடன் கழித்த அடுத்த 4 மணி நேரங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாது(தனி பதிவு)

முகநூல் மூலம் எனக்கு கிடைத்த இந்த இரு நண்பர்கள், அவர்களது ப்ரொஃபைல், இனிமையாக பழகும் விதம்.... அடடா...இந்த இரு படைப்பாளர்களும் மேலும. பிரபலமடைந்து அடுத்த சில மாதங்களில் புகழின் சிகரத்தில் அமர்வது உறுதி..

Queen (Hindi movie)

டெல்லி ரஜோரி பகுதியில் மிட்டாய் கடை வைத்திருக்கும் பஞ்சாபி குடும்பத்தாரின் பெண்ணான ராணிக்கு (கங்கனா ரனவத்) முகமெங்கும் பரவசம். இன்னும் ரெண்டே நாளில் கல்யாணம். மிகவும் கட்டுப்பாடான குடும்பம்.வீட்டைவிட்டு அதிகம் வெளியே போய்ப்பழக்கமில்லாத அவள் பஞ்சாபி உறவினர்களுடன் பாடி ஆடுகிறாள். மறுநாள் மாப்பிள்ளைப்பையன் விஜய் (ராஜ்குமார் ராவ்) அவளை காஃபி ஷாப்புக்கு கூப்பிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாமென சுறுக்கமாக சொல்ல.. 'ஏன்டா.. நீதானே என்னை சுத்தி சுத்தி வந்து காதலித்து பெண் கேட்டாய்.. இப்ப என்ன குடிமுழுகிப்போச்சு?' என அழுகையினூடே கேட்ட ராணிக்கு ஏதோ சால்சாப்பு செல்கிறான் அவன். நமக்கு ஒத்து வராது. நீ நிறைய மாற வேண்டுமே.. அது இதென்று சில காரணங்களைச்சொல்லி கழண்டுகொள்கிறான் அந்த அழகான இளைஞன்.

கல்யாணமும் நின்றுவிட, ஒருநாள் முழுவதும் கிடந்து அழுத பின் ஏற்கனவே தேனிலவுக்காக புக் செய்திருந்த பாரிஸ் டிக்கட்டை கேன்சல் செய்யாமல், பெற்றோர் வேண்டாமென சொல்லியும் அழுத மூஞ்சியுடன் விமானம் ஏறுகிறாள் சாதாரணமாகவே அழுமூஞ்சி மாதிரி இருக்கும் கங்கனா.

பாரிஸ் விடுதியில் பணிப்பெண்ணாக இருக்கும் விஜயலக்ஷ்மியின் நட்பு கிட்டுகிறது கங்கனாவுக்கு. விஜயலக்ஷ்மியாக வரும் லிசா ஹேடன் பாலிவுட் இறக்குமதி... பூர்வீகம் சென்னையாம். அவள் வரும் சீனில் தியேட்டரில் கர்சீப்பால் முகம் துடைத்துக்கொண்ட நிறையபேருக்கு தூக்கம் கெடுவது நிச்சயம். உலகமே தெரியாத அப்பாவி கங்கனாவுக்கு தைரியமூட்டுகிறாள். பெண்கள் எப்படி தனித்துப்போராட வேண்டுமென அறிவுறுத்துகிறாள். நடுவே ஏன் தண்ணியடிக்கவும் கற்றுக்கொடுக்கிறாள் எனத்தெரியவில்லை.

கங்கனா அடுத்து ஆம்ஸ்டர்டாம் போய் இறங்குகிறாள். ஹாஸ்டல் ஒன்றில் 3 ஆண்களுடன் தங்க அவளுக்கு இஷ்டமில்லையென்றாலும், அவர்கள் மிக அன்பாகப்பழகி நல்ல நண்பர்களாகிறார்கள். ஒரு உணவகத்தின் முதலாளியுடன் சேர்ந்து இந்திய உணவெல்லாம் தயாரித்து கொஞ்சம் பணமும் சம்பாதிக்க, அவளுக்கு மனதிடமும் தைரியமும் கூடி வாழ்க்கையில் மறுபடியும் சந்தோஷ தருணங்களை எதிர்கொள்ளும்போது, பழைய காதலன் விஜய் அவளைத்தேடி அங்கே வருகிறான். பழசையெல்லாம் மறந்து மறுபடியும் திருமணம் செய்துகொள்ள அவளை வற்புறுத்துகிறான்.

திரும்பவும் கங்கனா மனம் மாறியதா? என்ன முடிவு செய்கிறாள்? கல்யாணம் மறுபடியும் நடந்ததா என்றெல்லாம் நம்மை ரொம்ப மண்டையைப்போட்டு குழப்பிக்கொள்ளவிடாமல், நம்மூர் பாரதிராஜா, பாக்யராஜ் மாதிரி டன்...டன்..என உடுக்கையெல்லாம் அடித்து நீண்ட க்ளைமாக்ஸ் சீன், வசனங்கள் என இழுக்காமல் சட்டென்று படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் விகாஸ் பெஹல்.

' உன்னோட நிம்மதியக் குலைச்சி, உன் புருஷனையே என் முந்தானைக்குள்ளாற முடிச்சி, உன் குடும்பத்த நடுத்தெருவுக்கு கொண்டு வரத்தயங்கமாட்டா இந்த சாவித்திரி' போன்ற சின்னத்திரை சீரியல் வசனங்களை பார்க்கும் மாலை வேளையில், வன்முறை மற்றும் சண்டைக்காட்சிகளில்லாத, நகைச்சுவை கூடிய இந்த ஹிந்திப்படத்தை நிம்மதியாக 3 மணிநேரம் பார்க்கலாம்..

G.K.R

ரிடையர் ஆன அன்று திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் வழியாக கோஷங்களுடன் பெரிய ஊர்வலம்.. யூனியன் தலைவர் GKR வாழ்க என சத்தம்..சரியான கூட்டம். நடுவே இவர் மாலையுடன்.... ரோட்டின் இருபுறங்களிலும் மக்கள் கூட்டம். கூட்டத்தின் நடுவே எங்கோ மூலையில் நான். எத்தனையோ வருடங்கள் இரயில்வேயில் இருந்து விட்டு இன்று பிரிகிறோமென சோகத்துடன் அவர் கண்களில் நீர் வழிந்தோட, நமக்கு இத்தனை பேர் நண்பர்களா என ஆனந்தகண்ணீருடன் நடந்து வருகிறார். ஊர்வலம் அவரது வீட்டை நோக்கி நகர்கிறது. அவ்வளவு பெரிய கூட்டத்திலும் அவர் என்னை பார்த்துவிட்டார். என்னைப்பார்த்து கையை தூக்கி ஆட்டி 'ஆத்துக்கு வந்துடுங்கோ' என சைகை செய்கிறார். அடுத்த அரை மணியில் அவரது வீட்டில் எல்லோருக்கும் இனிப்பு மற்றும் சிற்றுண்டி காபி...

இடுப்பிலிருந்து லேசாக அவிழும் வேட்டையை இழுத்து கட்டி, பெஞ்சில் கிடக்கும் துண்டை உதறி தோளில் போட்டு " உட்காருங்கோ.. அப்புறம் CA படிப்பெல்லாம் எப்பிடி போயின்டிருக்கு?" என கேட்டு லேசாக தலையை தூக்கி புகையிலை மணத்துடன் உதட்டோரம் தாம்பூலச்சிவப்புடன் எட்டிப்பார்க்கும் எச்சிலை உள்ளுக்குள் இழுத்துக்கொள்வார். பேச்சின் நடுநடுவே நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்காத ஆங்கில பழமொழிகளை எடுத்து விடுவார். வாழ்நாள் முழுக்க தனக்கென்று எதுவும் சேர்த்துக்கொள்ளாமல் பெரியவன் ரமணியின் BE (REC) படிப்பு, சின்னவன் கணபதியின் CA படிப்பு செலவுகளை சமாளித்து, 4 பெண்களான ராஜு, பத்மா, சந்திரா மற்றும் வாணி எல்லோரையும் நல்ல இடங்களில் கட்டிக்கொடுத்து அடுத்த 10 வருடங்களில் சட்டென்று இந்த லோகத்திலிருந்து விடை பெற்றுக்கொண்டார்.

மற்றவர்கள் செய்யும் தவறை அவர்கள் மனம் புண்படாவன்னம் முகத்துக்கு நேரே எடுத்துரைத்து..'அப்புறம் உங்க இஷ்டம்' என நாசூக்காக சொல்லிவிடுவார். தொழிலில் நேர்மை, பிறருக்கு உதவி, குடும்ப கடமைகள்... இதுதான் GKR என்கிற GK ராமமூர்த்தி அவர்கள். பயம் என்பது கொஞ்சம் கூட கிடையாது. காய்கறி வாங்கப்போனாரென்றால் கடைக்காரர் அரை கிலோ கொத்தவரங்காயை தராசில் நிறுத்தி அவர் பையில் போட்டபின்னும் கை நிறைய இன்னும் கொஞ்சம் அள்ளி பையில் போடும் அளவிற்கு அவ்வளவு மரியாதை.

தினமும் காலை உதவிகேட்டு யாராவது ஒருவர் இவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அதற்கென்றே வாசலில் பெஞ்சு போடப்பட்டிருக்கும். கல்யாணங்கள், சிலரின் பையனுக்கு ரயில்வே கலாசி வேலை, ஸ்கூல் அட்மிஷன், ரயில்வே கல்யாண மண்டபத்தில் சத்திர ஏற்பாடு என பொன்மலை ரயில்வே காலனியில் ஒரு MLA மாதிரி வலம் வந்தார். ஒரு சின்ன சதுர மரப்பலகையில் காவி வர்ணத்தில் சில நிமிடங்களில் அவர் வரைந்த காஞ்சிப்பெரியவர் ஓவியத்தை கண்டு மலைத்திருக்கிறேன்.

சின்னவனான கணபதி என் ஆருயிர் நண்பன்..குரு.. CAவில் சீனியர்.. திருச்சியில் இருந்த என்னை 20 வருடங்கள் முன் பஹ்ரைனில் உட்கார வைத்துவிட்டு சென்னை திரும்பியவன். "உன்னை அவருக்கு ரொம்ப புடிக்கும்டா... அடிக்கடி விசாரிப்பார்" என்பான்.

நைரோபியில் இருந்து நேற்று போனை வைக்க மனமில்லாமல் ஒரு மணி நேரம் கணபதி பேசிக் கொண்டுருந்தான். "அப்பறம் என்னடா ஶ்ரீதரா.. எதாவது சொல்றா....யார் மண்டையாவது போட்டு உருட்டேன்" என கேட்டுவிட்டுத்தான் போனை வைப்பான்.
ச்சே... இன்னிக்கி friendship dayயாகவும் இருக்கக்கூடாதா!..

தந்தையர் தினமான இன்று என் தந்தை மட்டுமல்லாது கணபதியின் தந்தையையும் நினைத்து அவர்களது ஆசி எப்போதும் எங்களுக்கு கிடைக்க தஞ்சை கணபதி அக்ரஹாரம் ஶ்ரீ மகா கணபதியை வேண்டுகிறேன்.

கோச்சடையான்....


கோட்டைப்பட்டினம் ராஜா ரிஷிகோடனின் (நாசர்) படைத்தளபதி தான் அப்பா ரஜினி, கோச்சடையான். நிறைய சண்டை போடுகிறார். எதிரி மன்னன் மகேந்திரன் (ஜாக்கி ஷ்ராஃப்) நாடான கலிங்கபுரி படைகளுடன் போர். வீரர்களையும் குதிரைகள் மற்றும் ராணுவத்தளவாடங்களையும் இழந்து நாடு திரும்புகிறார். அதனால் போர்க்குற்றம் சுமத்தப்பட்டு மன்னன் நாசரால் கொல்லப்படுகிறார். 

பிறகு மகன் ரஜினி (ராணா) தந்தையைக்கொன்ற நாசரை பழிவாங்கும் எண்ணத்துடன் தந்தையால் இழந்த படை வீர்ர்களை மீட்க கலிங்கபுரி போகிறார். அங்கும் சிறந்த வீரனாகிறார். மன்னர் ஜாக்கிக்கு ரஜினியின் புகழ் தெரிய வருகிறது. மன்னரின் மகன் வீர மகேந்திரன்(ஆதி.... ஓ.. நீயும் நடிக்கறயா?). ஜாக்கியின் நன்மதிப்பைப்பெற்று அந்நாட்டின் படைத்தளபதியாகி திரும்ப கோட்டைப்பட்டினம் மீதே படை எடுக்க சம்மதம் பெறுகிறார் ரஜினி. சிறைபட்டிருந்த (கோ.பட்டினத்தைச்சேர்ந்த) வீரர்களையே போருக்கு அனுப்பலாம் என அவர் கொடுக்கும் ஐடியாவையும் ஏற்றுக்கொண்டு மன்மோகன்சிங் மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டுகிறார் அனிமேஷனில் ஜாக்கி ஷ்ராஃப் சாயலில்(!) இருக்கும் ஜாக்கி ஷ்ராஃப்..

போர் ஆரம்பம். போர் நாடுகளின் எல்லைக்கு வந்தவுடன் மகன் ரஜினி ராணா தன் வீரர்களிடம் 'நீங்கள் உங்கள் பழைய நாடான கோ.பட்டினத்துக்கே ஓடி விடுங்கள்' என அவர்களை விடுவித்தவுடன்தான் ஜாக்கிக்கும் அவரது மகன் வீர மகேந்திரனுக்கும் ரஜினியின் சூழ்ச்சி புரிகிறது. ('நமக்கும் தான்'னு சொல்லியிருந்தேன்னா அடி விழும்). படம் முழுக்க போர்..போர்..போர்..(மன்னிக்க.. bore... bore..bore)

ரஜினியும் தன் தாய் நாடான கோ.பட்டினத்துக்கே திரும்ப வந்து நாசரைக்கொல்ல முயன்று, நாசரால் சிறை பிடிக்கப்பட்டு, இளவரசி வதனா..அதாவது ரஜினியின் காதலியான தீப்பிக்கா(ரி) ரஜினியை விடுவிக்க முயல, பிக்காரியின் அண்ணன் செங்கோடனை (சரத்குமார்) ரஜினியின் தங்கை மணக்க...'ராஜ குடும்பத்தில் பிறந்து சாதாரண பெண்ணை மணந்ததால் உனக்கு அரியனை இல்லை' என நாசர் சொல்ல... அதனால் சரத் நாட்டை விட்டு வெளியேற....ஆஆஆவ்....பக்கத்தில் 'நாச்சோ' கொறித்துக்கொண்டிருந்த நண்பன் Anantha Narayanan க்கும் கொட்டாவி...

எங்க விட்டேன்?... ஆங்.. சொல்ல மறந்துட்டேனே! சின்ன வயசுலயே தொலைந்து போய்ட்டாராம் ரஜினியின் அண்ணன் சேணா... ( ஐயோ.. வேணா) அவரும் கடைசி சீன்ல வர்றாரு..அண்ணனும் தம்பியும் சேர்ந்து பழி வாங்கப்போறாங்க.... தொடரும்...னு ஸ்க்ரீன்ல போட்டவுடனே தியேட்டர்ல லைட் பளிச்சுன்னு எறிஞ்சுது.

'அப்பாடா..சரி.. உச்சா போய்ட்டு வந்து இன்டர்வல்லுக்கப்பறம் மீதி கருமத்த பாத்துத்தொலைக்கலாம்னா, 'ஹலோ..படமே முடிஞ்சிடுச்சு'ன்னு சொல்லி வயத்துல பால வர்த்தாங்க மக்கழே...ஆஆவ்..

'எதிரிகளை ஒழிக்க நெறைய வழி இருக்கு.. அதுல முக்கியமானது..மன்னிப்பு' போன்ற பஞ்ச் வசனங்கள்.

சோழிங்கநல்லூர் வழியா சுறுக்க சிறுசேரி போய்ட்டு சாயரச்சே திரும்ப வர்ற மாதிரி ரஜினி அடிக்கடி கோட்டைப்பட்டினம், கலிங்கபுரி கப்பல்ல போய்ட்டு போய்ட்டு வர்றார்.

படைவீரர்களுடன் நடுக்கடலில் திரும்பிக்கொண்டிருக்கும்போது எதிரிகளால் விஷம் கொடுக்கப்பட்டு தன் வீரர்கள் இன்னும் சில நிமிடங்களில்(?) இறந்துவிடுவார்கள் என மருத்துவர் ரஜினிடம் சொல்ல, அவர் ' பக்கத்துல எதாவது நிலம் இருக்கா? ஓ.. கலிங்கபுரியா? உடனே ரூட்ட மாத்து...' என இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு போற மாதிரி கப்பலை திருப்பும்போது....தூக்கம் கண்ணை சொறுகிடுச்சு...T.ஷர்ட்டெல்லாம் எச்சி...

தியேட்டரில் இருந்த குட்டீஸ் பாவம்...எல்லோர் கையிலும் ஊதுவதற்கு விசில் இருந்தும் தாங்கள் எதிர்பார்த்து வந்த ரஜினி இல்லாத்தால் Usharani Sridhar பக்கத்தில் உட்கார்ந்திருந்த Jayasri Narayanan குழந்தைகள் பரிதாபமாக படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"நானும் இருக்கேனே!".. யாருங்க அது? ஓ... தீபிகா படுகோனே.."அது சரி.. எனக்கென்ன வேலை? இது போர் சம்மந்தப்பட்ட படம் தானே! அப்பப்ப பாடல் காட்சியிலாவது 'புறமுதுகு'(ம்) காட்றேனே!" என்ற அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள் போலும். அனிமேஷனில் தீபிகா முகத்தை இன்னும் 2 முறை பார்த்தால் போதும். ரசிகர்கள் அவருக்கு சினிமா உலகிலிருந்து ஓய்வு கொடுத்துவிடுவார்கள். இந்த அனிமேஷன் ஐடியா தமிழ் சினிமாவுக்கும் வந்தால் கூடிய சீக்கிரம் சில நடிகைகளிடமிருந்து ரசிகர்களுக்கு விடிவுகாலம் கிட்டும்.

அனிமேஷன் முக, உதடு அசைவுகளுக்கு ஒத்து வராத ஒலி..குரல்... 70, 80 களில் தியேட்டர்களில் main படத்துக்கு முன் Indian news reviewவில் வரும் 'பீகாரில் வெள்ளம்'...மற்றும் விளம்பரப்படங்களான "தாதாஜி! பாட்மின்டன்"...ஞாபகம் வருகிறது.

பஹ்ரைனில் 400க்கும் மேல் டிக்கட்டுகளை முன்பதிவு செய்த நம் நண்பர்கள் Shyam Krishnan...மற்றும் அமீத் ஷா மாதிரி அவருக்கு உதவிய Karthik Gangaprakash பாராட்டுக்குறியவர்கள். படம் பார்க்கப்போன பெரியோர் சிறியோர் என எல்லோருக்கும் ரஜினி படம் போட்ட T.ஷர்ட்டுகள்...

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே (3D கூட இல்ல) படத்தைப்பார்க்கப்போன நாம் " இது technology' க்காகவே பார்க்க வேண்டிய படம் என குழந்தைகளிடம் எப்படிச்சொல்வது?

நைனா...நைனா

அப்பாவின் பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளில் பல வருடங்கள் பின் நோக்கி...

நேர்மை, கூச்சம் மற்றும் பயந்த சுபாவம் இது மூன்றும் கலந்த உருவம் தான் ராமசாமி சீதாபதி என்கிற என் அப்பா.

ரிடையர் ஆகும் வரை நகைகளை அடகு வைத்து எங்களை படிக்க வைத்த மகான் அவர். பிறகு 20 வருடங்களாக நாங்கள் மாதாமாதம் அனுப்பும் பணம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மாத பென்ஷனை என்ன செய்வதென்று தெரியாமல் சேர்த்து வைத்து எங்களுக்கே திருப்பிக்கொடுப்பார். புற்று நோயால் வாடிய என் மூத்த சகோதரியின் மருத்துவ செலவுகளையும் அடுத்த 2 வருடங்களில் அவள் இறக்கும் வரை ஏற்றுக்கொண்டார். அவளது பெண்ணின் திருமண செலவுக்கும் சேர்த்து வைத்து விட்டு திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன் போய்ச்சேர்ந்தார்.

பஹ்ரைன் மற்றும் மஸ்கட்டுக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை வந்துவிடுவார். கடைசி ஐந்தாறு வருடங்கள் பார்கின்சன் நோயினால் அவதிப்பட்டார். பேச்சுக்குளறல்...வாயிலிருந்து சட்டை முழுக்க எச்சில் ஒழுகுதல்... நிற்பதற்கு balance இல்லாமல் (இல்லையென நினைத்துக்கொண்டு) பின் பக்கம் தடாலென அடிக்கடி விழுந்து மண்டையில் அங்கங்கே தையல். எண்ணையில் பொறித்த பலகாரங்கள் மிகுந்த இஷ்டம். 2010இல்அவரை மதராச பட்டினம் படம் பார்க்க கூட்டிச்சென்றபோது இடைவேளையில் ஆசையாக சமோசா வாங்கி சாப்பிட்டார். விமான நிலையத்தின் உள்ளே கடைகளில் கட்லெட் வாங்கித்தரச்சொல்வார். பஹ்ரைனில் ஹோட்டலுக்கு கூட்டிப்போய் ' என்ன சாப்பிடறீங்க' என கேட்டால் வெட்கத்துடன் குழைந்து தயக்கத்துடன் 'மசால் தோசை' என்பார்.

கோஆபரேடிவ் சப் ரிஜிஸ்ட்ராராக இருந்த அவர் பல கோ. வங்கிகளில் ஆடீட்டராக பணியாற்றும்போது ஊழல்களை கண்டு பயப்படாமல் ரிபோர்ட் செய்திருப்பதால் அடிக்கடி பல இடங்களுக்கு பந்தாடப்பட்டார். இரவு 10 மணிக்கு சில அரசியல்வாதிகள் எங்கள் வீட்டிற்கு அலுவல் விஷயமாக அப்பாவிடம் உதவி கேட்டு வரும்போது ' நாளை ஆபிஸில் வெச்சு பேசலாமே' என பணிவாக அவர்களை இவர் வெளியே அனுப்ப முனையும்போது சடாரென அவர்கள் நோட்டுக்கற்றையை இவர் சட்டையில் தினிக்க முயல், இவர் அதை தடுக்க, ஒரு சிறு போராட்டத்துடன் அவர்களை வெளியே அனுப்பியபின் பயத்தால் நடுங்கி படபடப்போடு சோபாவில் சரிந்துவிடுவார்.

புதிய திரைப்படங்கள் நகருக்கு வந்து ஓரிரு மாதங்களில் கழித்து புறநகர்ப்பகுதியான மன்னார்புரம் வரும்போது தான் குறைந்த செலவில் நாங்கள் படம் பார்க்கப்போவோம். மாத இறுதியில் அவர் கையில் பணம் வேறு இருக்காது. ' எப்ப காசு கேட்டாலும் இல்லன்னு சொல்றதே உங்களுக்கு வழக்கமாப்போச்சு' என நானும் என் தம்பியும் உச்ச ஸ்தாயியில் அவரைப்பார்த்து கத்தும்போது சட்டைப்பையில் இருக்கும் ஓரே ஒரு 10 ரூபா நோட்டையும் எங்களிடம் கொடுந்துவிடுவார்.

நானும் எனது சகோதரர்கள் இருவரும் சேர்ந்து அவரை கலாட்டா பண்ணாத நாளே கிடையாது. 6ஆங்கிளாஸ் படிக்கும்போது, நானும் தற்போது மஸ்கட்டில் இருக்கும் என் தம்பி ரவி( Jani Vijay Raghavan )யும் 'நைனா...நைனா...இந்த பென்சில கொஞ்சம் சீவிக்குடுங்க' என அவர் கையில் கொடுத்து விட்டு அவர் முகத்தை உற்றுப்பார்ப்போம். அடுத்து அவர் வாயை 'ஊ'வென்று வைத்துக்கொண்டு பென்சில் சீவுவதைப்பார்த்து 'ஏ... வாயப்பாரு' என்று கைகொட்டி விழுந்து விழுந்து சிரிப்போம். 'போங்கடா அந்தப்பக்கம்...அது அப்படித்தான் வரும்' என அவர்செல்லமாக எங்களை அதட்டுவார்.

செல்லமாக எங்களை வளர்த்தாலும் நைனா கண்டிப்பானவர்.திருச்சி தென்னூர் பென்ஷனர் காரத்தெருவில் நாங்கள் 70களில் வசிக்கும்போது வீட்டில் அடிக்கடி 'தொபேல்.. தொபேல்' என அடி வாங்கிக்கொண்டு நாங்கள் 'லேது...லேது'என சப்தமிடுவது பக்கத்து வீட்டிற்கு கேட்கும். சீப்பு, கயிறு என்று கையில் எது இருந்தாலும் அதைக்கொண்டு அடிப்பார். மறு நிமிடம் முட்டாய் வாங்க காசு கொடுப்பார்.

சென்னையிலிருந்து அடிக்கடி எங்கள் மாமா அந்தக்கால ஸ்டான்டர்டு காரை எடுத்துக்கொண்டு திருச்சி வந்து எங்களை விராலிமலை கூட்டிப்போவார். நைனா தான் முன்னால் உட்காருவார். காரில் போகும்போது ரோட்டில் தண்ணீர் தேங்கியிருந்தால் சட்டென காலைத்தூக்கிக்கொள்வார். 'ஹே... நைனா காலத்தூக்கிட்டார்' என நாங்கள் கத்தி சிரிப்போம்.

வழியில் செக்போஸ்ட் தடுப்புக்கட்டைக்கு கீழே கார் போனால் இவர் தலையை குனிந்துகொள்வதைப்பார்த்து குபீரென சிரிப்போம்.

'நைனா! இன்னிக்கி காலைல செல்வா கீழ விழுந்துட்டு 'ஆ.. வலிக்குதுன்னு கத்தினான்' என்று நாங்கள் செல்வா மாதிரி முகத்தை அஷ்டகோனலாக்கி காட்டும்போது அவருக்கும் முகம் கோனலாவது பார்த்து நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். கோபித்துக்கொள்ளவே மாட்டார்.

இரவில் வீட்டிற்கு நடந்து வரும்போது திருச்சி தென்னூர் தெருக்களில் குடிகாரர்கள் நடமாட்டம் இருப்பதால் பயந்துகொண்டு அடுத்த தெருவெல்லாம் சுற்றி வீடு வந்து சேர்வார்.அப்படியும் குடிகாரன் ஒருவனிடம் மாட்டிக்கொள்வார். "யோவ் எங்கய்யா போற" என அவன் இவரை மிரட்ட " தோ.. அங்க தான் வீடு" என சைக்கிளில் இருந்து கீழே இறங்கி பயந்தவன்னம் பதில் சொல்லி ஓடி வருவார்.

உயிருள்ளவரை உஷா படம் வந்த புதிதில் 'மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க' பாடலின் ஆரம்பத்தில் பல்லவிக்கு முன் 'தீம்தனகதீ...'தீம்தனகதீ' என நளினி முனகுவது கிட்டத்தட்ட 'சீதாபதி... சீதாபதி' என கேட்கும். இது போதாதா? சும்மா இருப்பமா? 'நைனா.. நைனா... T. ராஜேந்தர் உங்க பேர்ல 'சீதாபதி'ன்னு பாட்டெழுதியிருக்காரு' என்று நாங்கள் சொல்ல ஆசையாக அவர் அந்த பாட்டை கேட்டு விட்டு 'சும்மா இருங்கடா' என வெட்கத்துடன் வழிவார்.

ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடித்து வேலைக்குப்போகும்போது கூட நாங்கள் அவரை கலாய்ப்பதை நிறுத்தவில்லை. வெளியே கிளம்பும்போது வாசக்கதவை பூட்டிய பின் ஏழெட்டு முறை அவர் இழுத்துப்பார்ப்பது கண்டு நாங்கள் சிரிக்காத நாட்களே இல்லை. கிளம்பி பாதி தூரம் வந்தவுடன் 'ஶ்ரீதர்.. கேஸ் அடுப்பை ஆஃப் செஞ்சியா" என கேட்டு வெறுப்பேத்துவார்.

குளிருக்கு கால்கள் வெளியே தெரியாதவாறு அவர் பெட்சீட்டால் போர்த்திக்கொண்டு தூங்கும்போது நாங்கள் மெல்ல கிட்டப்போய் கால் பக்கம் பெட்சீட்டை எடுத்து தூக்கி விடுவோம். அவர் உடனே இரு கால்களையும் தூக்கி சைக்கிள் ஓட்டுவது போல் சுற்றுவதைப்பார்த்து நாங்கள் ஓஹோவென சிரித்து....அதற்குள் "டேய் ஏன்டா அவரை படுத்தறீங்க" என அம்மா அடிக்க வருவார்கள்.

கடைசி ஓரிரு வருடங்கள் பேச்சு வரவேயில்லை. அவரும் அதிகம் பேச மியற்சிக்காமல் மௌனமாக இருக்க ஆரம்பித்தார். டீவி பார்ப்தையும் குறைத்துக்கொண்டார். என் தம்பி, அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன் ஒரு நாள் எங்கள் திருச்சி வீட்டில் அவருக்கு தன் கையால் சவரம் செய்து குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து சென்ட் அடித்து பேத்தியின் நிச்சயதார்த்தத்திற்கு கூட்டிப் போன போது வாய் குளறியபடியே 'தேங்க்ஸ்' சொல்லி அவனை நெகிழ்ச்சியடையச்செய்தார்.

பணம் இல்லாத போதும் சரி இருக்கும்போதும் சரி simple ஆக இருப்பதையே விரும்பினார். வாழ்க்கையில் நேர்மையைத்தவிர எதுவுமே தெரியாமல் கடைசி வரை 'பிழைக்கத்தெரியாத' மனிதராகவே இருந்துவிட்டுப்போனார் ராமசாமி சீதாபதி.அவரது ஆசிகள் எங்களுக்கு எப்போதும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

பி.கு: இப்போதே பையன்கள் என்னை இமிடேட் செய்கிறார்கள். கலாய்க்கிறார்கள்.
முற்பகல் செயின்...