Saturday, March 8, 2014

பட்டாபி ……….('பாம்பே டு இந்தோரி'ன் தொடர்ச்சி)



முன் கதை சுறுக்கம்:
நண்பன் கணபதி பாம்பேயிலிருந்து இந்தோருக்கு வேறு வேலை கிடைத்து போனபோது நானும் அவனுடன் கிளம்பி விட்டேன். அங்கே கம்பெனி செக்ரட்டரி ஆனந்த் ராவ் என்பவர் மூலம் ஒரு பிஸ்கட் கம்பெனியில் என்னை சேர்த்துவிட்டான். ஏனோ தெரியவில்லை ஆனந்த ராவுக்கு என்னைக்கண்டாலே பிடிக்கவில்லை. கம்பெனியில் பிரச்சனைகள் ஏராளம், சம்பள பாக்கி வேறு..கணபதி மறுபடியும் பாம்பே மாற்றிக்கொண்டு போனதும் எனக்கும்  இந்தோர் பிடிக்கவில்லை. ஆனந்த ராவின் நண்பர் பாம்பேயில் சிஃப்கோ ஃபைனான்ஷியல் சர்வீசஸ் என்ற பெரிய கம்பெனியில் உயர்பதவியில் இருப்பதாக கணபதி சொன்னதால் அங்கே எப்படியாவது சேர்ந்துவிட முடிவு செய்தேன்... ஆனால் ஆனந்த ராவுக்குத்தெரியாமல்... அவர் பெயரையே சொல்லி.. அது எப்படி?


இனி பட்டாபி ....

1986
இல் கணபதி மூலம் நான் சேர்ந்த முந்தைய  CA firm இன் பார்ட்னர்கள் அஜய் ஆஷர் மற்றும் ஹேமந்த் கபாடியா இருவரையும் தொடர்பு கொண்டு பட்டாபி இருக்கும் சிஃப்கோ க்ரூப் பற்றி விசாரித்தேன். குஜராத்தி குடும்பத்தினராம். பாம்பேயின் மிகப்பெரிய மர்ச்சன்ட் பாங்கர்ஸாம். அவர்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் சிஃப்கோவில் இல்லையாம். அங்கிருக்கும் சில குஜராத்தி ஷேர் புரோக்கர்கள் பெயர்களை  மட்டும் ஹேமந்தபாய் மூலம் தெரிந்து கொண்டாயிற்று.  


ஆனந்தராவ் உங்களை பார்க்கச்சொன்னார்என்று சொல்லி சிஃப்கோ பட்டாபியின் முன் போய் நின்றேன்.. தலையை படிய சீவி.. கையிலும் சீவி. 'இன்னும் மூன்று மாதங்கள் கழித்து பாம்பே வரும்போது உங்களை வந்து பாக்கறதா ஆனந்த ராவ் சொல்லச்சொன்னார்' என்று சின்னதா ஒரு புழுகல்... பட்டாபி அதை சட்டை செய்யாமல் சிஃப்கோ பற்றி சொல்ல ஆரம்பித்தார். ஆனந்த ராவ் மூலம் வந்தவன் என நினைத்து சம்பிரதாயமாக சில கேள்விகள் மட்டும் என்னிடம் பட்டாபி கேட்டபோது பொய்சொல்லி விட்டோமே என சின்னதாக ஒரு உறுத்தல். சரி.. பின்னால் சமாளிக்கலாம் என தைரியம் வேறு. இப்போதைக்கு ஃபனான்ஸ் டிபார்ட்மென்ட்டில் வேகன்சி இல்லையென்றதும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் சிஃப்கோ குழுமத்தைச்சேர்ந்த சுமார் 15க்கும்மேற்பட்ட சிறிய கம்பெனிகள் எனக்குக்கீழ் இருக்கு...அதன் அக்கவுன்ட்ஸ் பார்த்துக்கொள்ள 
ஒரு குஜராத்தி தேவை... இதுவரை ஆள் கிடைக்கவில்லை. இருந்தாலும்  நமது சேர்மன் பூபேன் தலால் உன்னை பார்க்க விரும்புவார்..”  என அங்கே அனுப்ப அடுத்த சில நிமிடங்களில் சேர்மன் பூபேன் தலால் முன் அமர்ந்திருந்தேன். கிரீஷ் கர்நாட் சாயலில் இருந்தார். நல்ல உயரம். சாதாரண basic லெவல் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் இன்டர்வியூவை கூட கம்பெனி சேர்மனே நடத்துவது கண்டு ஆச்சரியமாக இருந்தது. குஜராத்திகள் பொதுவாக 'சார்.. சாப்மிஸ்டர்'  என்றெல்லாம் விளிக்காமல்  பெயரின் முன் 'பாய்' (பூபேன்பாய்) சேர்ப்பது வழக்கம். பெண்கள் பெயரின் முன் 'பென்' ( ஜோதிபென்) ....


'
பட்டாபி மற்றும் எனது செக்ரட்டரி (மலையாளி) தவிர இங்கு சவுத் இன்டியன்ஸே கிடையாது.... எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் சவுத் இன்டியன்ஸ்' என பூபேன்பாய் ஆரம்பித்தார்.(இது போதாதா நமக்கு!).. அடுத்து நான் ஏற்கனவே கேள்விப்பட்ட அங்கிருக்கும் சில குஜராத்தி புரோக்கர்கள் (அபய்பாய்.. கம்லேஷ்பாய்.. சைலேஷ்பாய்...) பெயர்களை எடுத்து விட்டேன்       (எக்ஸ்-பாஸ் ஹேமந்த்பாய்க்கு நன்றி).. 'ஓ.. அபய்பாயை உனக்குத்தெரியுமா?' என அவர் கேட்டப்போ  ' என் பழைய பாஸ் ஹேமந்த்பாய்க்கு ஃப்ரெண்டாச்சே' என என் பதில்..(கேட்ட கேள்வி வேற. பதில் வேற.). இதெல்லாம் போதாமல் நானும் 'என் அப்பா கோ ஆபரேடிவ் சப்-ரிஜிஸ்ட்ரார்... கோஆபரேடிவ் வங்கிகளுக்கு ஆடிட்டராக இருக்கிறார்'…. (சொன்னதில் இது மட்டும் தான் உண்மை சார்). அவ்வளவு தான்..கையில் அப்பாயின்டமென்ட் லெட்டரே கொடுத்து விட்டார்கள். 


நான் பார்த்தவரை குஜராத்தி முதலாளிகள் நம் படிப்பு பற்றி கண்டுக்க மாட்டார்கள். நம் நடத்தை மற்றும் நம்மை அவர்களுக்கு பிடித்திருந்தால் போதும்..தம் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்பவர்கள். இன்டர்வியூவின் நடுவே சேர்மனின் மனைவி பாருல்பென்  எட்டிப்பார்த்தார்..கூடவே பக்கத்தில் ஆபிஸ'பாய்…(அவனும் பாய்.. அதாவதுஜிதேஷ்பாய்.. சாரி ஜீதேஸ்பாய். இவர்களுக்கு '' வராது '' தான்.). கையில் தட்டு நிறைய அல்பொன்ஸா மாம்பழத்துண்டுகள்.. என்னையும் எடுத்துக்கச்சொன்னார்கள். 


இப்போது என் கவலை எல்லாம் வேறு. திடீரென்று ஒரு நாள் ஆனந்த் ராவ் பட்டாபியை பார்க்க வந்தால் நான் மாட்டிக்கொள்வேன். மறு நாளே இந்தோருக்கு போன்போட்டு ஆனந்த ராவிடம் ' சார் நான் இங்கே சிஃப்கோங்கற கம்பெனியில சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசரா சேர்ந்துட்டேன். நம்ம பாஸ் பட்டாபின்னு ஒருத்தர். உங்கள நல்லா தெரியுங்கறார்' என்று சொல்லி வைத்தேன். அவர் பட்டாபியை பார்க்க வரும்போது சமாளிக்கலாமென இருந்துவிட்டேன்.


சீனியர் வைஸ் பிரசிடன்ட் பட்டாபிக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். முழுக்க முழுக்க டெல்லியில் வேலை பார்த்தவர். மினிஸ்ட்ரி ஆஃப் காமர்ஸில் இருந்து ரிடையர் ஆனவர். கம்பெனி லா அவருக்கு அத்துப்படி. சிஃப்கோ குழுமத்தின் அட்வைசர். ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ் (ROC), கம்பெனி லா போர்டு (CLB), ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(BSE) சம்மந்தப்பட்ட எல்லா வேலைகளும் அவர் தான் பார்த்துக்கொள்கிறார். அவருக்குக்கீழே அசிஸ்டன்ட் வைஸ் பிரசிடன்ட் ஜோஷி எனும் மராட்டிக்காரன், நான் மற்றும் ஓரிரு ஸ்டாஃப். பிறகு நண்பன் ரங்குவும் என்னுடன் சேர்ந்துகொண்டான்.அத்தனை கம்பெனிகளின் கணக்கு வழக்குகள், வருடாந்திர ROC ரிடர்ன்கள், ஆடிட்கள், மீட்டிங்குகளின் மினிட்ஸ் என பட்டாபியின் ட்ரெய்னிங் படு ஸ்வாரஸ்யமாக போய்க்கொண்டிருந்தது. ஆனந்த ராவ் போன் மட்டும் இன்னும் வந்ததாகத்தெரியவில்லை. 


ROC
அலுவலகத்தில் ஒரே லஞ்ச மயம். பட்டாபிக்கு லஞ்சம் கொடுப்பது பிடிக்காததால் வேலையில் எப்போதும் கறாராக இருந்தார். அங்கே லஞ்சம் வாங்குவது பாதி பெண்கள். டைரக்டர்களை நியமிக்கும்போதும், அவர்கள் ராஜினாமா செய்யும்போதும் கம்பெனிகள் ROC யில் அதுகுறித்து ரிட்டர்ன் ஃபைல் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் அந்த ROC பெண்கள் back- dated ரிட்டர்ன் ஃபைல் செய்யச்சொல்லி பணம் பிடுங்குவதால் நாங்கள் வேலையில் மிக ஜாக்கிரதையாக இருப்போம். நண்பன் ரங்குவின் தூரத்து உறவுக்காரப்பெண் UPSC தேர்வில் பாசாகி 'அஸ்ஸிஸ்டன்ட் ரிஜிஸ்ட்ரார் ஆப் கம்பனீஸ்'ஆக வந்து சேர்ந்திருந்தாள். அதனால் எங்களது வேலை சுலபமாக முடிந்தது. சிறிய முதலீட்டில் நிறைய கம்பெனிகளை form செய்து எங்களில் சிலரையே டைரக்டர்களாக போட்டு live ஆக அவைகளை ஷெல் கம்பெனிகளாக வைத்திருப்பார் பட்டாபி. பிறகு Sandoz , பிராமல் போன்ற பெரிய கம்பெனிகள் ஏதாவது டைவர்சிஃபை செய்யும்போது பட்டாபியிடமிருந்து அந்த கம்பெனிகளை வாங்கி அதில் தங்கள் இயக்குநர்களுக்கு shareகளை மாற்றி புதிய தொழில் துவங்குவார்கள். அவர்களுக்கும் ROC மூலம் புதிய கம்பெனி துவங்க எடுக்கும் நேரம் மிச்சம். பட்டாபியும் நல்ல லாபத்திற்கு கம்பெனிகளை விற்பார். சுவாமி நாராயன் இயக்கத்தைச்சேர்ந்த குங்கும பொட்டு வைத்த கம்பெனி ஆடிட்டர் 'அதுல் பண்டியா'வே பட்டாபியின் திறமையை கண்டு வியந்தவர். ஆனந்தராவ் போன் வந்தபாடில்லை. பட்டாபியும்  என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். இப்போதைக்கு நான் மாட்டிக்கொள்ளும் பயமில்லை. 


சூப்பரான ஆங்கிலப்புலமை பட்டாபிக்கு. கடிதங்கள் எழுதுவது, கம்பெனி லா போர்டு பெட்டிஷன்கள் ட்ராஃப்ட் செய்வது எல்லாம் அவருக்கு ஜுஜூபி.. Gammen India கம்பெனி பங்குகளை சிலர் மார்க்கெட்டிலும் தனியாரிடமும் வாங்கி, கம்பெனியை பின்கட்டில் கைப்பற்ற (backdoor take-over bid) முயன்றபோது தம் ஸ்டாஃப் புடை சூழ கம்பெனி லா போர்டிலையே உட்கார்ந்திருந்து அந்த அக்விசிஷனை வெற்றிகரமாக முறியடித்து gammen சேர்மன் சுப்‌பா ராவின் நன்மதிப்பை பெற்றவர் பட்டாபி.  'நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு மூன்றும் இருந்தால் போதும் அதை வைத்து career இல் முன்னுக்கு வந்துவிடுவேன் என்ற வேட்கை உன் நெஞ்சில் கனல் போல் எறிந்துகொண்டேயிருக்கவேண்டும்'  என பட்டாபி அடிக்கடி சொல்வார்.  


பழைய குமுதம் கார்ட்டூனிஸ்ட் சுதர்சன் கேரக்டர்களின் முகங்கள் உருண்டையாக சுறுங்கியிருப்தை நினைவுபடுத்தும் முகம் பட்டாபிக்கு. தலையில் முடி இல்லை. அந்த வயதிலும் கண்ணாடியில்லாமல் தான் படிக்கிறவர். மூக்கிலிருந்து ஓரிரு முடி வெளியே எட்டிப்பார்க்கும். தமிழை விட ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தான் அதிகம் பேசுவார். ரிட்டயராகி டெல்லியிலிருந்து பம்பாய் வந்தபின் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டாராம். நல்ல உயரம். அந்தக்கால பேண்ட்  நெஞ்சு  வரை.. முழங்கை வரை மடித்துவிடப்பட்ட சட்டை. படு சிறியதான ப்ரௌன் கலர் தோல் பெல்ட்.சீட்டுக்குப்பின்னால் எப்போதும் தொங்கும் பழைய கோட்டு.. அந்தேரியில் இறங்கி ஆட்டோ பிடித்து போனால் ஜோகேஸ்வரி பக்கம் அவர் வீடு. சாதாரண 2 பெட்ரூம் ப்ளாட் தான். அவர் பையன் பத்ரி CA.. எனது நண்பன். சாப்பிட டிபன் டப்‌பாவெல்லாம் கொண்டுவரமாட்டார். ஆபிஸ் காண்டினில் தினமும் பஜியா, ஸ்வீட் கச்சோரி போன்ற சமாசாரங்களை விரும்பி சாப்பிடுவார்.


சோதனையான அந்தநாள் வந்தது. ஒரு நாள் பட்டாபிக்கு எதிரே நான் உட்கார்ந்திருந்தபோது ஆனந்த ராவிடமிருந்து போன். பக்கென்றது எனக்கு.. பட்டாபி போனில்,  ம்..ம்...என மட்டும் சொல்லிக்கோண்டிருந்தார். பிறகு போனை வைத்தார். இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீசிங் கம்பெனியில் ஏதோ வேலையாம் ஆனந்தராவுக்கு. அது சம்மந்தப்பட்ட சில கோப்புகளை தயார் பண்ணச்சொல்லி விட்டு  எதிரே மித்தல் கோர்ட்டிலிருக்கும் அந்த கம்பெனிக்கு ஓடினார். அரை மணியில் திரும்ப வந்து வேறு சில வேலைகள் கொடுத்தார். ஆனந்த ராவ் என்னைப்பற்றி எதுவும் சொன்னதாக தெரியவில்லை. அப்பாடாவென இருந்தது.


மாலை வீட்டிற்கு கிளம்பும் முன் பட்டாபி அந்த குண்டைப்போட்டார். ஆனந்த ராவ் மறுநாள் பாம்பே வருகிறாராம். அய்யய்யோ! நாளை அவரும்  பட்டாபியும் சேர்ந்திருக்கும்போது  பொய்சொல்லி நான் வேலையில் சேர்ந்தது இருவருக்கும் தெரிந்து விடுமேயென பயம் என்னை கவ்வ ஆரம்பித்தது.. இருந்தாலும் 6 மாதம் ஓடிவிட்டதால் வெறும் திட்டுடன் முடிந்துவிடலாம். அல்லது சேர்மன் போன்றவர்களுடன் நல்ல பரிச்சயமிருந்ததால் பட்டாபி ஒன்றும் சொல்ல மாட்டாரோவென தைரியமும் எனக்கிருந்தது. எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாமென விடு வந்து சேர்ந்தேன்.


மறுநாள் காலை வரை அதே ஞாபகம். பட்டாபியும் ஆனந்தராவும்  தூக்கத்தின் நடுவே வந்து மிரட்டிவிட்டுப்போனார்கள். ச்சே...வேலை போனால் தான் என்ன?’ என சமாதானம் செய்துகொண்டு காலை 9.30 க்கு ரீஜென்ட் சேம்பரை அடைந்து ஆபீசுக்குள் நுழைந்தபோது எல்லோரும் அங்கங்கே கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்க பட்டாபி சீட்டில் இல்லை. ..ஜோஷி 'ஓ..வென அழுதவாறு என்னிடம் ஓடி வந்தான். 


அன்று மதியம் காட்கோபர் இடுகாட்டுக்கு நான் போனபோது நல்ல கூட்டம். கூட்டத்தின் நடுவே ஆனந்த ராவ். அடுத்த 3 வருடங்களில் சிஃப்கோ க்ரூப்பில் நான் பதவி உயர்வு பெறுவேனென எனக்கு அப்போது தெரியாது. என்னை காப்பாற்றிய பட்டாபியை மட்டும் கடைசியாக ஒருமுறை பார்க்க நான் கூட்டத்தை கடந்து கொஞ்சம் முன்னே  போய் பார்த்தேன்.
  
'நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு மூன்றும் இருந்தால் போதும் அதை வைத்து career இல் முன்னுக்கு வந்துவிடுவேன் என்ற வேட்கை உன் நெஞ்சில் கனல் போல் எறிந்துகொண்டேயிருக்கவேண்டும்'  என எப்போதும் சொல்லும்  பட்டாபியின் வெற்று மார்பில் சூடம் எரிந்துகொண்டிருந்தது..

Saturday, March 1, 2014

பாம்பே டு இந்தோர்

1986 இல் நான் பம்பாய் வந்த ஓரிரு வருடங்களில் நண்பன் கணபதி வேறு வேலை கிடைத்து இந்தோர் போன கையோடு என்னையும் பாம்பெயிலிருந்து இழுத்துக்கொண்டான். சிறிய அழகான நகரம் மத்திய பிரதேஷின் இந்தோர். பம்பாய் மாதிரி எல்லா மாநிலத்தவர்களும் அங்கு வசிப்பதால் 'மினி பம்பாய்' என்றும் சொல்கிறார்கள்.

கணபதியின் நண்பர் ஆனந்த ராவ் என்பவர் என்னை அங்கு வேலையில் சேர்த்து விட்டவர். கம்பெனி செக்ரட்டரியாக ப்ராக்டீஸ் செய்பவர். அந்த நகரத்தை சுற்றியுள்ள தேவாஸ், ரத்லம் போன்ற இடங்களில் நிறைய தொழிற்சாலைகளுக்கு வங்கிக்கடன் வாங்கி தருவதில் இருந்து நிதி சம்மந்தப்பட்ட ஆலோசனை எல்லாம் அவர் தான். கொட்டோ கொட்டேன்று பணம் கொட்டியது. மனுஷன் எப்பவும் சிடு சிடு தான். சுமார் 60 வயதான அவருக்கு வயதுக்கு மீறிய முதிர்ந்த படு ஒடிசலான தோற்றம். பில் கிளிண்டன் மற்றும் மைக்கேல் ஷூமாக்கர் இருவரையும் கூட்டி ஆவேரெஜ் ஆக்கி அந்த உருவத்தையும் கால் பங்கு சுருக்கி தாவாங்கட்டையை சுத்தியலால் ரெண்டு தட்டு தட்டி கரிய வர்ணம் பூசினால் ஆனந்த் ராவ் ரெடி.

அரை மணிக்கு ஒருதரம் சிகரெட்டை வெளியே எடுத்து அதை செங்குத்தாக நிறுத்தி டப்பாவில் தட்டி இடது உதட்டில் சொருகி பத்த வைத்து ஸ்டைலாக அவர் இழுத்தபோது இரு கன்னங்களும் )( மாதிரி ஓட்டிக்கொண்டன.  அடுத்து ஆனந்த் ராவ் இரும ஆரம்பித்தார். கல்லாப்பெட்டியை திறந்து சில்லறையைத்தேடி மூடும் சப்தத்துடன் அவர் இருமி, அடுத்து அந்த கோழையை முழுங்கியும் தொலைத்தார். பனித்த கண்களை துடைத்துக்கொண்டார். ரன்பீர் கபூர் ஸ்டைலான அடி வயிற்றுக்கும் கீழே இறக்கி பாண்ட் போடுவதை ஆனந்த் ராவ் அப்போதே ஆரம்பித்து விட்டார். ஆனால் இவர் கொஞ்சம் ஓவர். முழங்கால் அரித்தால் பாண்ட் வழியாக சொறிந்துகொள்ளும் அளவுக்கு கீழே இறக்கம். இவ்வளவு ஒல்லியா என வியந்தவண்னம் என் கண்கள் அவரது பின் பக்கம் போனபோது கூடுவாஞ்சேரி பக்கம் விற்கும் இரு காலி மனைகள் நினைவுக்கு வந்தது..

இன்டர்வியூ அவரது வீட்டில் தான். பெரிய சாலமான வீடு. சாப்பிட எதுவெனும் கொடுப்பார்களோ என யோசித்துக்கொண்டிருக்கும்போது அறையில் திடீரென கமகமவென சோப்பு வாசனை. ப்ரெஷாக அழகான பெண் காபி கொண்டு வந்து வைத்தாள். என்னையும் கணபதியையும் ஏறெடுத்துகூட பார்க்கவில்லை. அட... ஆனந்த் ராவ் மூஞ்சிக்கி இவ்வள அழகான பெண்ணா?..’.  எனது ரியாக்‌ஷனை ஆனந்த் ராவ் கவனித்துக்கொண்டு, பேசுவதை உடனே நிறுத்தி, காபி கோப்பையை பார்த்தவுடன் சோப்பு வாசனை உள்ளே போய் விட்டது. என்னை அவருக்கு அறவே பிடிக்கவில்லை போலும்.

 'என்னாயா.. CA வா? கம்பெனி லாவெல்லாம் ஒழுங்கா தெரியுமா' என எகத்தாளமாக கேட்டார். "caveat emptor பத்தி சொல்லு பாக்கலாம்" என கேட்டுவிட்டு நம்மை கூர்ந்து பார்த்தார். "யோவ்.. படிக்கிற காலத்திலேயே இதெல்லாம் நமக்கு மண்டக்குள்ள ஏறாது.. இப்பப்போய் கேக்கறீயே..!" என அவரை சபித்துக்கொண்டே "ஹாங்.. ம்ம்..when the buyer buys something.." என இழுத்தேன். அதற்க்குள் அவர் "wait…wait.. ..no kite-flying ..OK?" .."உனக்கெல்லாம் யாருய்யா வேல குடுப்பா?  இரு.. ஒரு எரநூறு கொறைச்சே கொடுக்கச்சொல்றேன்" என சொல்லி கம்பெனிக்கு அனுப்பினார்.  

நான் வேலையில் சேர்ந்த கம்பெனி நகரை விட்டு சுமார் 30 கி.மீ. தொலைவில் பீதாம்பூர் என்றவூரில்.. ஒரு பிஸ்கட் தயாரிக்கும் கம்பெனியில் அக்கவுன்ட்ஸ் ஆபீசர் வேலை.  கம்பெனியின் MDக்கு 35 வயதுதான் இருக்கும். அவரது அம்மா ம.பி.மாநில தொழில்துறை செயலர். மகனுக்கு எல்லா உதவிகளும் செய்து கம்பெனி ஆரம்பித்து, பொது மக்களின் பங்குகளுடன்  நிறைய பணம் திரட்டி, கொஞ்சம் சுருட்டி... MDக்கு டெக்னிக்கல் ஆலோசனை என்ற பெயரில் சிலர் தரம் குறைவான மெஷின்களை வாங்க வைத்து தத்தம் கமிஷன்களை வாங்கிக்கொண்டு அபேஸ்..

வேலையில் சேர்ந்து முதல் மூன்று மாசம் சம்பளமே கிடைக்கவில்லை.. "எல்லாம் சேர்த்து வைத்து பின்னால் கொடுப்பார்கள் தானே?" என விகல்பமாக கேட்ட என்னை அக்கவுண்டன்ட் பண்டாரி ஏளனமாக பார்த்து "ஊக்கும்.. பின்னால் தான் கொடுப்பார்கள்" என பின்புறத்தை எட்டி உதைக்கிற மாதிரி சைகை செய்தான். சம்பள தினம் வருவதாக தெரியவில்லை. ஒரு நாள் MD எல்லோரையும் கூப்பிட்டார். ஆவலுடன் ஓடினோம். முதலில் ஆபீஸ் பையனிடம் "தும்கோ அபி கித்னா பைசா  ச்சாஹியே?" என கேட்டதும் அந்த படுபாவி.. " ஹமாரா போஜனாலயாமே அஸ்ஸி ருப்பியா ஜமா கரேகா தோ கானா மிலேகா” ….என்ற அவன் முன் அஸ்ஸியை விட்டெறிந்த பின்  MD என்னைப்பார்த்தார். "பாவிகளா! அவனுக்காவது போஜனாலயா பாக்கி... எனக்கு தங்கற ஆலயாவுக்கே 3 மாத வாடகை பாக்கி" என கெஞ்சி அட்வான்ஸ் ஆயிரத்தை அவரிடம் கறந்தேன்.

பாக்டரி செயல்படும் லட்சனம் இன்னும் கேவலம். நாலைந்து வகை பிஸ்கட்டுகள் உற்பத்தி செய்து ம.பிரதேசத்தின் முக்கிய நகரங்களுக்கு அனுப்புகிறார்கள். ப்ரொடக்‌ஷன் மானேஜருக்கு 4 மாத சம்பள பாக்கி. ஆந்திராக்காரன் வேறு. காட்டமாக இருந்தான். கமிஷன் வாங்கிக்கொண்டு நம் தலையில் கட்டப்பட்ட க்ரீம் பிஸ்கட் மெஷின் கிட்டத்தட்ட தையல் மெஷின் சப்தத்துடன் இயங்கியது. முதலில் கீழ் பக்க பிஸ்கட், கன்வேயரில் மெதுவாக நகர்ந்து வந்து நடுவே நிற்க மேலிருந்து 'ப்ளக்'கென கொஞ்சம் க்ரீம் கெட்டி சட்னி மாதிரி அந்தபிஸ்கட்டின் மேல் உட்காரும். அடுத்து இன்னொரு பிஸ்கட் மேலிருந்து வந்து க்ரீம் மேல் வைக்கப்பட்டு வலது பக்கம் நகர்ந்து 10 பிஸ்கட்டுகள் சேர்ந்த பின் பேக் செய்யப்படும். இதெல்லாம் ஒரு நல்ல மெஷினில் நடக்க வேண்டிய சமாசாரங்கள். ஆனால் அங்கு நடப்பது வேறு. நடுவே வந்து நிற்க வேண்டிய பிஸ்கட் தயங்கியவாறு வந்து கொஞ்சம் முன்னாடியே நின்றுவிட, மேலிருந்து கொட்டப்படும் க்ரீம் வாழையிலையில் வைக்கப்படும் தொக்கு மாதிரி பச்சக்கென்று கன்வேயரில் வந்து உட்காரும். உடனே மேல் பிஸ்கட் அதன்மேல் உட்கார,சற்று தள்ளி தனியாக யோசனை செய்துகொண்டிருந்த பிஸ்கட் திடீரென நடுவே வர, அந்த கலவையின் மேல் மறுபடியும் க்ரீம் விழ, அடுத்த சில நிமிடங்களில் அந்த இடமே ஏதோ குழந்தை கக்கா போன மாதிரி இருக்கும். உருப்படுமா அந்த கம்பெனி?

பிஸ்கட் தயாரிக்க தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் கோதுமை மாவு, சர்க்கரை மற்றும் விஜிடபிள்  கீ(ghee). இது மூன்றும் கொள்முதல் செய்து 6 மாத பாக்கி வைத்ததால் சப்ளையர்கள் தினமும் வந்து என்னை சரமாரியாக திட்டுவார்கள். ஒருவருடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. திரும்பவும் பாம்பே போக தீர்மானித்தேன். 



இதற்குள் கணபதியும் பாம்பே போய் விட்டான். அங்கே CIFCO க்ரூப் என்ற பெரிய கம்பெனியில் சீனியர் வைஸ் ப்ரெஸிடென்ட் பட்டாபி என்பவர் இருக்கிறாராம். அவர் நாம் ஆனந்த் ராவின் நண்பர் என உபரி தகவலையும் கணபதி கொடுக்க, அந்த கம்பெனியில் சேர ப்ளான் செய்தேன். ஆனந்த் ராவுக்கு நம்மை கண்டாலே பிடிக்காதே!. அவருக்கு தெரியாமல் அவர் பேரையே சொல்லி CIFCO பட்டாபியிடம் சேர்ந்தது தனி கதை.. அது அப்புறம்..        

Sunday, February 2, 2014

வாடிகன்

நேற்று மதியம் சுமார் 3 மணி நேரம் வாடிகன் அரண்மணையை எங்களுக்கு சுற்றிக்காண்பித்த அந்த guideக்கு வயது 70க்கு மேல் இருக்கும். அமெரிக்கர். ஏதோ திருச்சி அல்லிமால் தெரு முனையில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருப்பது போல் வாஞ்சையுடன் பேசினார். ...நாங்கள் மொத்தம் 12 பேர் அவரது குழுவில்.

ரோம் நகரம் மற்றும் ஒருங்கிணைந்த இத்தாலி உருவான கதை, வாடிகனில் (தனி நாடாவதற்கு முன்) போப்பாண்டவர்கள் தங்கள் உரிமைக்காக போராடியது, பிறகு அரண்மணை கட்டியது, ஸீஸர் மற்றும் அகஸ்டஸ் பற்றிய விபரங்கள், மைக்கல் ஆஞ்சலோ முதன்முதலில் ரோமுக்கு வந்தது, அவரை யாருக்கும் ஆரம்பத்தில் தெரியாதது, அவர் தனியாக தீவு ஒன்றில் சில வருடங்கள் தங்கியிருந்து அரண்மணையின் வரைப்படத்துக்கு (plan) ஏற்றவாறு தன் ஓவியங்கள் வரைய அளவுகள் மற்றும் themes தயார் செய்தது, பிறகு அரண்மணை முழுவதும் ஓவியங்கள் வரைந்தது, அவரது சீடர்கள் தண்ணீரில் வர்ணங்களை கலந்து 20 மீட்டர் உயரத்தில் இருக்கும் மைக்கலுக்கு கயிறு மூலம் அனுப்ப அவர் வானம் பார்த்தவாறு படுத்துக்கொண்டே ceilingஇல் Jesus, Moses, vergin Mary, last supper போன்ற உலகப்புகழ் பெற்ற படங்களை வரைந்த விபரங்கள்....

Guide சளைக்காமல் பேசிக்கொண்டிருந்தார். மனுஷனுக்கு கை, கால் கொடைச்சலே வராது என நிணைக்கிறேன். எங்களுக்குத்தான் அப்பப்ப பசி, தண்ணித்தாகம், இயற்கையின் அழைப்பு எல்லாம் வரிசையாக....
ஒரு மணி நேரத்திற்கு மேல் விலாவாரியாக guide விளக்கியபோது நமக்கு விலா எலும்பு வலித்தது.

எவ்வளவு நேரம் தான் மோட்டு வளைகளையும் விட்டத்தையும் பார்ப்பது? தோளுக்கு மேல் வளர்ந்த என் சின்னவன் மெல்ல என் தோளின் மேல் சாய்ந்து கொண்டு ' does he have any break in his job?' என கேட்ட போது அவருக்கு ஏதோ அசரீரி சொல்லி விட்டது மாதிரி புரிந்து விட்டது போலும். ஆசாமி படு உஷார். "At the end of my session I will be asking questions to some one I choose from you guys" என ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அது வரை வெறுமனே தலையை ஆட்டிக்கொண்டிருந்த என் பார்யாள் கலவரத்துடன் என்னை பார்த்து "ஏமி போடுஸ்தாமா" என கேட்க, கூட வந்திருந்த மற்றொரு இங்கிலாந்துக்காரர் "oh gaad" என சலித்துக்கொண்டார். அடுத்து அவர் 'next one and half hours, I will be briefing you on the functioning of pope's office and his powers' என்றதும் நாங்கள் கீழே விழாமலிருக்க ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டோம். Guide இங்கே விளக்கிக்கொண்டிருக்கும்போது மற்றொரு நிர்வாண ஓவியத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெங்காலிக்காரரைப் பார்த்து "are you with me?" என கோபமாக நம்ம guide அதட்ட, எண்ணை மூஞ்சியுடன் இருந்த பெங்காலிக்காரர் நறநறவென பல்லைக்கடித்து அம்ரீஷ் பூரி மாதிரி பதிலுக்கு முறைத்தார்.

அந்த guideஐ குறை சொல்வது சரியல்ல. மதியம் 4 மணிக்கு மேல் எல்லோருக்கும் டீ தேவைப்பட்டது. மிக அழகாக அவர் தன் கடமையை செய்து கொண்டிருந்தார். கடைசியாக பிரம்மாண்டமான Sistine chapel கொண்டு சென்று காட்டியபோது பிரமிப்படைந்தோம். அதற்கு முன் இந்த வெள்ளைக் கோட்டிற்கு அந்த பக்கம் வாடிகன் இந்த பக்கம் ரோம் போன்ற சமாசாரங்கள், உலகத்தில்
உள்ள எல்லா கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவர் போப் என்றும், போப் தங்கும் இல்லம், வாடிகன் அலுவலகங்கள், பரப்பளவில் ஶ்ரீரங்கத்தை விட சிறியதான(என் ஊகத்தில்)அந்நாட்டிற்கு தனி நாணயம் மற்றும் பாஸ்போர்ட் போன்ற விபரங்கள், அங்கே அலுவலகத்தில் பணி புரியும் மக்கள் எல்லோரையும் காண்பித்தார்.

சிப்பந்தி ஒருவர் சிரத்தையுடன் போப் மற்றும் அவரது glergymen, கார்டினல்களுக்கு புதிய உடைகள் தைத்து அழகாக சுவற்றில் மாட்டி வைத்துக்கொண்டிருந்தார்.அத்தனை guardsம் உம்மனாம் மூஞ்சிகள்...Swiss நாட்டவர்களாம். நமக்கு வத்தல் வடாம் மாதிரி swiss guardsக்கு சாக்லேட் தான் மதியம் தொட்டுக்கொள்ள..போன்ற தகவல்கள்,
சிலர் Greece மற்றும் எகிப்து நாட்டவர்களாம்.(முன்பு கிரீஸ், எகிப்து நாடுகள் இத்தாலியின் காலனி ஆதிக்கத்திற்குட்பட்டிருந்ததால்)...முந்தைய போப் பெனடிட்டோ ஜெர்மானியர் என்பதால் நிறைய ஜெர்மானியர்கள் பணிபரிகின்றனர் என்பது உபரித்தகவல்...நம் அமெரிக்க guide கொஞ்சம் விஷமப்பேர்வழி. அங்கு நடக்கும் அரசியலையும் நமக்கு கொஞ்சம் விளக்கினார்.(அப்போது மட்டும் எங்களுக்கு களைப்பே தெரியவில்லை)

அது சரி... அங்கு கர்ம சிரத்தையுடன் போப் மற்றும் கார்டினல்களுக்கு உடைகள் தைக்கும் அந்த அன்பருக்காகத்தான் இந்த பதிவையே எழுதுகிறேன். அவர் ஒர் இந்தியர் என guide சொன்னபோது எங்களுக்கு பெருமிதம் தாங்கவில்லை. உலகத்தின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றான வாடிகனில் ஒரு இந்தியர் என எங்களுக்கு புல்லரித்தது.அவர் எந்த மாநிலத்தவர்?

புள்ளி..மலையாளியானு...

சூப்ஸ் என்கிற சுப்ரமணியன்....

செம்பூர் செட்டா நகருக்குள் நுழையும்போதே ஜிலுஜிலுவென காற்று.. ஏராளமான மரங்கள். அமைதியான சூழல். பரபரப்பான பாம்பே தானா இது என சந்தேகம். சுமார் 60, 70 அடுக்குமாடி வீடுகள். நடுவே முருகன் கோவில். அங்கே வசிக்கும் முக்காவாசி பேர் தமிழர்கள். பல வருடங்களுக்கு முன் பம்பாய்க்கு குடியேறி அங்கேயே படித்து, மணமுடித்து, புத்திர சந்தானத்துடன் செட்டிலான பாலக்காட்டுக்காரர்கள். அல்லது நம்மூரிலிருந்து வேலை கிடைத்து வந்து சில பல வருஷங்களாக இருப்பவர்கள். திடீரென்று என்னை மாதிரி பம்பாய் விட்டு ஓடக்கூடியவர்கள்.
பம்பாய் தமிழ்ப்பெண்கள்? சுத்த வேஸ்ட் ஸார். ஆண் வர்க்‌கமே பிடிக்காத மாதிரி சீன் போடுவார்கள். சரி, தமிழ்ப்பொண்ணாச்சே என்று ஒருத்தியுடன் தமிழில் பேசினால் பதில் ஆங்கிலத்தில் வரும். அவள் தம்பி அதுக்கு மேல... பார்க்க மதமதவென்று போக்கிரி அசின் தம்பி கிட்ட விஜய் சொல்ற மாதிரி "குடும்பமே உப்புமா சாப்ட்டு" வளர்ந்த ஸ்தூல சரீரி. தமிழோடு ஹிந்தி கலந்து வெறுப்பேற்றுவார்கள். ("அந்த பங்க்காவ பந்து பண்ணு.. எட்டு மணிக்கு ப்ரோக்ராம் சாலு பண்ணுவாங்க.."). அதிலும் சில எக்ஸ்‌ட்ரீம்கள்... இந்த காஸ்ஸெட் அங்கே கிடைக்குமாவென்று கேட்டால் "அங்கே தோடி(ஹிந்தி) கிடைக்கும்" என பதில். 'அதுசரி..உங்கக்கா என்னடா பண்றா' என கேட்டால் 'தெர்லடா’ என பட்டென பதில் வரும், வயது வித்தியாசம் தெரியாமல் 'டா' போடும் தம்பிகள். ‘அதுசரி! அவங்க அக்காவை நீ எதுக்கு விஜாரிக்கனும்?’ என என்னை கேட்க நினைப்பவர்கள் அடுத்த பாரா போய்விடலாம். 😃
தமிழ்க்கார அப்பாக்கள் பலவகை. ஒன்று காலை 6 மணிக்கு காண்ட்ராக்ட் பஸ்ஸில் ஐய்ரோலி, தூர்பே, முலுன்டு பகுதியில் உள்ள PIL அல்லது ஏஷியன் பெயிண்ட்ஸில் வேலை செய்யும் சீனியர் ஸ்டேனோக்ராபர்கள். அல்லது டிபன் டப்பாவில் சப்பாத்தி எடுத்துக்கொண்டு 8.13 லோக்கலை பிடிக்க ஓடும் ரயில்வே சிப்பந்திகள், இன்கம்டாக்ஸ்/சச்சிவாலயா ஊழியர்கள். அல்லது மனைவியிடம் சள்ளென்று எறிந்து விழும் கொஞ்சம் கடுகடுவென முகத்துடன் சம்மந்தமில்லாத கலரில் பாண்ட் சட்டை, கழுத்தில் படு ஒல்லியான டை, சூட்கேசில் ஹிந்து பேப்பர், ரவுண்டு டிபன் டப்‌பா, ட்ரெயினில் படிக்க வென்ச்சர் காபிடல் மானேஜ்மெண்ட் புத்தகம் சகிதம் பர்ஸ்ட் க்ளாஸ்ஸில் பயணம் செய்யும் 'ஐ ஆம் shawreng pawni' என கை குலுக்கும் வைஸ் பிரெஸிடெண்டுகள். வந்தாரை எப்படியும் வாழ வைக்கும் பம்பாய்..
வேலைக்குப்போகும் பேச்சிலர்ஸ்...? தமிழ் நாட்டிலிருந்து வேலைக்கு வந்த பேச்சிலர்ஸ் 2,3 வருஷம் யாராவது ஒருத்தியுடன் தாதர் சிவாஜி பார்க், ஜூஹூ பீச்சென ஊரெல்லாம் சுற்றி, ப்ரீத்தி உண்டாக்கி, ஒருமாத லீவுக்கு ஊருக்குப்போய் திரும்பி வரும்போது 'மாயவரத்துப்பொண்ண வீட்ல நிச்சயம் பண்ணீட்டாங்க' என்று வந்து நிற்பார்கள்.
என் அண்ணனின் மாமனார் சொன்னாரென்று யாரோ ஒருவர் தன் பெண்ணின் ஜாதகத்துடன் என்னை பார்க்க ஆபீசுக்கு வந்துவிட்டார். ஜாதகத்தை வாங்கி ஊருக்கு அனுப்பிவிட்டேன். அப்படியும் மனுஷன் என்னை விடுவதாக இல்லை. சரியாக ஒவ்வொரு சனியன்றும் மதியம் ஆபீசுக்கு (ஃபோர்ட் ஏரியா) வந்து பக்கத்தில் உடுப்பி ஹோட்டலுக்கு கூட்டிப்போய் கல்யாணத்தப்பத்தியே பேசுவார். தாலியும் வாங்கித்தருவார்(இது நார்த் இன்டியன் தாலி..வயத்துக்கு). 'யாரைக்கேட்டு நீயே பெண் பார்க்கிறாய்' என திட்டி ஊரிலிருந்து லெட்டர் வந்ததும் பயந்து போய் அடுத்தவாரம், அவருடன் நல்லா சாப்பிட்டவுடன் மெதுவாக 'வீட்ல அவங்களே பெண் பாத்துப்பாங்க மாமா' என நான் சொன்னதும் கரகாட்டக்காரன் ஷண்முகசுந்தரம் மாதிரி உஷ்ணமாகி ஜீரகத்தை வாயில் அள்ளி போட்டுக்கொண்டார்.
முருகன் கோவிலுக்கு சற்று எதிரே விஜயா பில்டிங்கில் நாங்கள் ஐந்தாறு பிரம்மச்சாரிகள் தங்கியிருந்தோம். வீட்டுக்கு போய் குளித்துவிட்டு நானும் ரங்குவும் முதலில் கோவிலுக்கு போவோம். சுவாமி தரிசனத்திற்கு மட்டும் தான்!. எல்லா குருக்களும் எங்களுக்கு தோஸ்த்.. கீழ் தளத்தில் தங்கியிருக்கும், சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி வந்திருக்கும் 25 வயது கூட நிரம்பாத அர்ச்சகர் சதாசிவம் ரங்குவுக்கு நண்பர். 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா' பாட்டு கேட்டுக்கொண்டு இருந்த அவருடன் அவர் ரூமில் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த போது சந்துரு Balasubramaniam Chandrasekaran வந்திருந்தான்.

சந்துருவுக்கு திருச்சி சுந்தர் நகரில் எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீடு. கம்பெனி செகரடேரி. ரோஷக்காரன். மானஸ்தன். அப்பாவின் கடனை அடைக்க காலை டிபனுக்கு பிறகு ஒன்றும் சாப்பிடாமல் இரவில் உ.பி.பைய்யா கடையில் பால் மட்டும் குடித்து கடனை அடைத்தவன். வேலையில் இருந்துகொண்டே ACS பைனல் பாஸ் செய்து என்னுடைய உபயத்தால் ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டவன். (அந்த கதை என் 'செம்பூர் ஸ்டேஷன்' என்ற தனிப்பதிவில்..) சரியான லூட்டி... நாகேஷின் காமெடிக்காக என்னை பலமுறை 'சோப்பு சீப்பு கண்ணாடி' பார்க்க வைத்தவன். சந்துரு இன்ஸ்டன்ட் ப்ரூ காபி போட்டு குடுத்தான்.
அடுத்து துபே (வடநாட்டுக்காரன்), மற்றும் சத்யன் (IT) ஆபிசிலிருந்து வந்தார்கள். கடைசியில் ஸ்ரீரங்கத்துக்காரனான முரளி வந்தான். இரவில் வீட்டு சாப்பாடு தான். அந்த ரூமில் முன்பு சாம்பார், தக்காளி ரசம், தயிர்சாதம், பொறியல்..மட்டும் தான். நான் இவர்களுடன் சேர்ந்தவுடன், "இதெல்லாம் பத்தாதுடா... " என்று சொல்லி அடுத்த சில நாட்களில் ராவா தோசை(ஞாயிறு காலை டிபன்), பூண்டு ரசம், மோர்குழம்பு, தக்காளி சாதம், லெமன் ரைஸ், புளியோதரை, சப்பாத்தி, ஆலு கோபி, பைங்கன் மசாலா என எனக்குத் தெரிந்த வெரைட்டியுடன் சமையலில் பிரதான இடம் என்னுடையதாகியது.
அடுத்தடுத்த பில்டிங்குகளிலும் நிறைய பேச்சிலர்கள். எல்லோரும் நள மகாராஜாக்கள். கிச்சனிலிருந்து வெளியே வந்து பால்கனியில் நின்றுகொண்டு பக்கத்துவீட்டு பெண்ணிற்கு கேட்கும்படி "'மணி!... put some காரப்பொடி'...என கத்தி அலப்பறை செய்யும் கணேசன்கள்..
பிரம்மச்சாரிகளின் வாழ்க்கை வெகு சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் நண்பரின் சிபாரிசின் பேரில் BITS Pilaniயிலிருந்து சுப்ரமணியன் என்ற மாணவன் 3 மாதம் மட்டும் தங்க எங்களுடன் சேர்ந்துகொண்டான். வங்கியில் தன் ப்ராஜெக்ட் செய்ய பம்பாய் வந்திருந்தவன் சூப்ஸ் என்ற நாமகரணம் எங்களால் சூட்டப்பட்டான்.
ஒடிசலான உருவம், திக்கான சோடாபுட்டி கண்ணாடி. சின்ன மீசை.. முள் தாடி.. சட்டையை இன் செய்யாமல் முழங்கை வரை மடித்து சாதாரண பாண்ட் மற்றும் ரப்பர் செருப்பு, அலட்சியமாக வாரிய தலை முடி. மண்டை முழுக்க மூளை. அவன் படிக்காத ஆங்கில நாவல்களே இல்லை. இடதுகையில் சதா புகைந்து கொண்டிருக்கும் ஃபோர் ஸ்கொயர் சிகரெட். வயது 20. பார்க்க கண்ணாடி போட்ட தனுஷ் மாதிரி இருக்கும் சூப்ஸ்சுக்கு இந்திய, உலக அரசியலாகட்டும், தமிழ், ஆங்கில இலக்கியமாகட்டும் எல்லாம் அத்துப்படி. சினிமா அறிவு அறவே கிடையா. பார்க்க மூடியாக இருப்பான். அவ்வப்போது தனது டைரியில் ஆங்கில கவிதைகள் எழுதுவான். எங்கே..படித்துக்காமிடா என்றால் வெட்கப்படுவான். ஆனால் பழகப்பழக சில நாட்களில் அவனது நட்பு எங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. சமையல் தெரியாததால் காபி குடித்த தம்ளர்களை சிங்க்கில் போட்டு அலம்புவான். போட்டிருக்கும் சட்டை பாண்ட்டுடன் அப்படியே சட்டென் தூங்கிப்போவான்.
இவனுடன் மற்றொரு ரூம்மேட் ஸ்ரீராமும் சிகரெட் வலிப்பதால், அடூர் கோபாலகிருஷ்ணன் ஜாடையிலிருக்கும் பக்கத்து வீட்டு மாமா திருட்டு தம்மடிக்க எங்கள் வீட்டிற்கு அப்பப்போ வருவார்.அவரை தேடிக்கொண்டு வந்த மாமி ஒருமுறை எங்கள் ரூமை பார்த்ததும் தன் மராட்டிய வேலைக்காரியை விட்டு எங்கள் வீட்டை சுத்தம் செய்ய அனுப்ப, அந்த மராட்டி பாயி எங்கள் வீடு இருக்கும் நிலையை பார்த்து சரமாரியாக திட்டித்தீர்த்து விட்டாள். அங்கங்கே அவுத்துப்போட்ட பாண்ட் சர்ட்டுகள், உலர்த்தாத கப்படிக்கும் ஈரத்துவாலைகள், ஸ்ரீராம் , அடூர் மாமா மற்றும் சூப்ஸ் விட்டெரிந்த சிகரெட் துண்டுகள், எங்கு பார்த்தாலும் CA,ACS சம்மந்தப்பட்ட புத்தகங்கள். கட்டிலுக்கு அடியில் போட்டுத்தள்ளப்பட்டிருக்கும் வாழைப்பழத்தோல்.. எங்கெங்கு காணினும் ஜட்டியடா!
ஒரு சனிக்கிழமை ஸ்ரீராம் ஆபிசில் எல்லோரும் கர்ஜத் அருகில் பிக்னிக் போவதாக ப்ளான் செய்து என் ரூம் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். நானும் சந்துருவும் போகவில்லை. மறுநாள் செம்பூர் கீதாபவனில் பைனாப்பிள் தோசா முடித்து வெளியே வரும்போது எதிரே சந்துரு கலவரத்துடன் ஓடி வந்து "ஸ்ரீதர்...சூப்ஸ் செத்து போய்ட்டாண்டா.." என சொல்ல அதிர்ந்து போனோம். சூப்ஸ்சின் பாடி கல்யாண் ஆஸ்பத்திரியில் இருப்பதாக தகவல் வந்ததால் நாங்கள் இருவரும் ட்ரெயின் பிடித்து கல்யாண் போனோம்.
ஆசுபத்திரி பின்பக்கம் மார்ச்சுவரியில் பாடி இருப்பதாக சொல்ல அங்கு ஓடினோம். கொஞ்சம் ஒதுக்குப்புறமான பழைய சிறிய கட்டிடம். சுற்றிலும் மரங்கள். ஊஊஊவென காற்றடிக்க, பகலில் கூட தனியே போக பயமாக இருக்கும் அளவுக்கு ஒரு அமைதி. வாசலில் ஒரு வேன்… மெல்ல அருகே போய் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தோம். சூப்ஸ் லேசாக உடல் ஊதி, கறுத்து விரைத்துப்போயிருந்தான். அடுத்து மற்றொரு மாருதி ஆம்னி ஆம்புலன்ஸ் ஒன்றிரண்டு விரைந்து வர, ஒரே சமயத்தில் நாலைந்து பிணங்கள் வந்திறங்கின. சில உடல்களை சதையும் ரத்தமாக கந்தலாக கொண்டு வந்து வைத்தார்கள்.. இல்லை.. போட்டார்கள். டோம்பீவிலி, கல்வா அல்லது சுத்துப்பட்டு ஸ்டேஷன்கள் அருகே ரயிலில் அடித்துச்சென்ற உடல்களாம்.
மார்ச்சுவரியை பார்த்துக்கொள்ளும் மராட்டிய கிழவன் முழு போதையுடன் வந்தான். பிணவரையில் தினம் 16 மணி நேரம் வேலை செய்ய அரசாங்கமே அவனுக்கு மதுவுக்கு பணம் கொடுக்குமாம். சலனமேயில்லாமல் உடல்களை தொட்டு அப்படியும் இப்படியும் உருட்டி தள்ளினான். சில உடல்களை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டியவாறே ‘ஹஸ்த்தே மரா க்யா!’ (சிரிச்சிக்கிட்டே செத்தையாடா?) என கேட்டு வேலை செய்து கொண்டிருந்தான். எனக்கும் சந்துருவுக்கும் வயிறை என்னமோ செய்ய, லேசாக உள்ளே எட்டிப்பார்த்த சந்துரு ‘ஆ’வெனஅலறி பின்வாங்கினான். எனக்கு லேசாக தலை சுற்றியது. அங்கே பக்கவாட்டில் சரிந்தும், சாய்ந்து உட்கார்ந்த நிலையிலும், குப்புறக்கிடந்தும், குடல் மற்றும் சதைக்குவியலோடும் அங்கங்கே …. சில நாட்கள் பிணவறை முற்றிலும் காலியாக இருக்குமாம். அன்று அந்த சிறிய ரூம் கொள்ளாத அளவுக்கு …..( போதும் நிறுத்திக்கிறேன் ஸார்.)
இரவு 12 மணி வரை கல்யாண் போலீஸ் ஸ்டேஷனில் நண்பர்களை போலீஸ் தூண்டித்துருவி விசாரித்தார்கள். கர்ஜத் அருகே எங்கோ கிராமத்தில் அழகிய நீரோடை, பூங்கா மற்றும் காட்டுப்பகுதி…நண்பர்கள் மதியம் 2 மணி வரை பூங்காவில் சுற்றிவிட்டு சாப்பிட்டவுடன் 4 மணி வரை கிரிக்கெட் ஆடி மெதுவாக ஒவ்வொருவராக தண்ணீரில் இறங்கி குளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தெளிவான அமைதியான ஓடை. இடுப்பளவு தண்ணீர் தான். எல்லோரும் குளித்து முடிந்து வெளியே வந்த பிறகும் சூப்ஸ் மட்டும் தண்ணீரில் நின்றுகொண்டிருந்தானாம்..
'போதும் வாடா' என அவனை நண்பர்கள் கூப்பிட அவன் மெல்ல சிரித்துக்கொண்டே கரையை நோக்கி ஓரடி எடுத்து... 'சளக்' கென்று அப்படியே நீருக்குள்ளே போய் உடலை சிலுப்பி.. நண்பர்கள் கூச்சலுடன் துண்டை அவன் பக்கம் வீசியும் பயனில்லை... யாருக்கும் நீச்சல் தெரியாது. உள்ளே முழுவதும் சென்றுவிட்ட சூப்ஸ் அடுத்த நொடி திடீரென மறுபடியும் தண்ணீருக்கு மேலே கழுத்தளவு வெளியே வந்து அதே வேகத்தில் திரும்ப உள்ளே போனான்.. ஒரு கை மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிய அடுத்த நொடி நீர்க்குமிழிகளுடன் தண்ணீருக்குள் மாயமாக மறைந்தான். வெளியே வர போராடுகிறான் என்பது தண்ணீரின் சலசலப்பில் தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நீர்க்குமிழிகளும் நீரின் சலசலப்பும் அடங்கி நீர்ப்பரப்பு அமைதியானது. எல்லோரும் கூச்சலிட யாருக்கும் ஒன்றும் செய்யத்தெரியவில்லை. போலீஸ் வந்து சேர மேலும் இரண்டு மணிநேரம் ஆனது.
போலீஸ் கூட வந்திருந்த கிராமத்தான் 'சாலா! பொழுதன்னைக்கும் உங்களுக்கு இதே வேலயாப்போச்சு? இந்த வாரத்துல இது மூணாவது சாவு!' என சலித்துக்கொண்டு 1500 ரூபாய் பேசி தண்ணீருக்குள் பாய்ந்து செடிகளுக்கிடையே கையை விட்டு பாறைகளை நகர்த்த, ஜிவ்வென உடல் மேலே வர, சூப்ஸ் என்கிற சுப்ரமணியன் வெளியே எடுத்து போடப்பட்டான்.
நண்பர்கள் எல்லோரையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து ஸ்டேஷனுக்கு கூட்டிப்போனார்கள். பஞ்சநாமா போன்ற சம்பிரதாயங்களுக்குப்பின் “வேறெந்த முகாந்திரமும் இல்லை ..சுழலில் சிக்கி இறந்த தற்செயலான விபத்து இதுவென ருசுவாகிறது.. கேஸ் பதிவு செய்யாமலிருக்க 35 ஆயிரம் ஆகும்” என போலீஸ் பேரம் பேச, ஸ்ரீராமின் அண்ணன் 20 ஆயிரத்திற்கு முடித்து நண்பர்களை வெளியே கொண்டு வந்தார்.
அடுத்த 2 நாட்கள் கொடுமையானவை. 13 வயது மகளுடன் வடநாட்டு சுற்றுலா சென்று விட்ட சூப்சின் பெற்றோரை யாரோ பெரியப்பா ஒருவர் தேடி போனில் பிடித்தார். மறுமுனையில் கூச்சல்..அழுகை. உடலையும் அவர்கள் பார்க்கத்தயாராக இல்லை. பெரியப்பா மட்டும் 2 நாளில் வந்து அந்திம காரியங்களை முடித்து விட்டுப்போனார்.
அடுத்த ஒரு மாத காலம் வீட்டில் சமைக்கவில்லை. ஏதோ ஒரு பயத்துடன் சோகமாக உலாவினோம். சூப்ஸ்சின் உடமைகளை பெ
ரியப்பா கொண்டு சென்றுவிட அவனது ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் மட்டும் ரூமில் கிடந்தன.
சில நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு வரத்தொடங்கினோம். ஒருநாள் சந்துரு ஏதோ புத்தகங்களை குடைந்தபோது சூப்ஸ்சின் டயரி கிடைக்க "ஸ்ரீதர்! இங்க வாடா! " என அலறினான். கைகள் நடுங்க டயரியை புரட்டியபோது, இறப்பதற்கு சில நாட்கள் முன்பு கிறுக்கி வைத்த கவிதை மாதிரி சில வரிகள்..... ஒன்றும் புரியவில்லை. ஆனால் படிக்க முடிந்த கடைசி நாலைந்து வரிகள் ….
And I want to dwell..
in some corner…
alone..
surrounded by water…
only water.. 

Tuesday, January 21, 2014

நண்பேன்டா ....


1986 ஆம் வருடம் ஒரு நாள்..அதிகாலை மணி 3... பம்பாய் மெயில் கல்யான் ஸ்டேஷனை தான்டியதும் மெதுவாக எழுந்து உட்கார்ந்து கொண்டேன். கையில் ஒரே பெட்டி. முதல்முறை பம்பாய் வருகிறேன். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படித்ததால் கற்ற சரளமான ஹிந்தி, பள்ளிப்பருவத்தில் திருச்சி செயின்ட் ஜோசப்ஸில் விரல்கள் ஒடிக்கப்பட்டு imposition எழுதி grammer படித்தால் ஓரளவு சுமாரான ஆங்கிலம்......குடும்ப சூழ்நிலை காரணமாக CA மற்றும் ICWA இன்டர்மீடியட் பாஸ் செய்தவுடன் வேலை…பின் அடுத்த சில வருடங்களில் final பரிட்சை பாஸ் செய்ய வேண்டிய கட்டாயம்..இதுதான் சார் அப்ப நம்ம ப்ரொஃபைல். தண்டவாளங்கள் மாறும் ரயிலின் 'தடாம்...தடாம்' சப்தம் வெளியே கேட்டது....

திருச்சியில் ஆடிட்டர் குமாரராஜிடம் ஆர்டிகிள்ஸ் படிக்கும்போது அவரது partner ஆடிட்டர் முகுந்தன் ஆபிஸ் மாணவர்களுடன் வெளியூர் ஆடிட்கள் நான் போவதுண்டு. ஒருநாள் அவர்கள் ஆபிசில் இருந்து கணபதி சுப்ரமணியன் எனும் மாணவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். நெடுநெடுவென உயரம், சோடாபுட்டி கண்ணாடி, சம்மந்தமில்லாத ஒரு டி.சட்டை, ஓரிரண்டு நாள் தாடி.. இதுதான் இந்த பதிவின் நாயகன் கணபதி. அன்று மாலையே மன்னார்புரம் ஹவுசிங் காலனி எங்கள் வீட்டிற்கு கணபதி வந்துவிட்டான். எங்கள் குடும்ப நண்பர் ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் சுபான்கான்' னீடம் தனக்கு accountancy பேப்பருக்கு டியூஷன் சேர உதவி கேட்டான்.

அடுத்த சில தினங்களில் டியூஷன் சேர்ந்து எனக்கும் நெருங்கிய நண்பன் ஆனான். என்னை விட ஒரு வருடம் சீனியர் வேறு. தினமும் நான் பொன்மலைக்கு போய் அவனுடன் படிக்கும் வழக்கமானது. நண்பன் மட்டுமில்லாது நமக்கு taxation, accountancy மற்றும் costing பாடங்களுக்கு அவன் தான் குரு. 'B' List of Contributories பற்றி விளக்கும்போது 'ஸ்ரீதரா.......நம்ம வீட்டு கல்யாணத்து பந்தியில நாம முதல்ல ஒக்காந்து சாப்பிடுவோமாடா.. அதுமாதிரி தான் ஒரு கம்பெனியை லிக்விடேட் செய்யும்போது…மொதல்ல யாராருக்கு பணத்த திருப்பி கொடுப்பா...'' என புரியும்படியான சில உதாரணங்களை சொல்லி accountancy இல் நம்ம டவுட்டுகளை க்ளியர் செய்வதில் கில்லாடி. படிக்கும் நேரத்தில் பாதி நேரம் பேச்சு தான். ('பொன்மலை' என என்னுடைய தனி பதிவில் இதைப்பற்றி எழுதிவிட்டேன்).

அவன் படித்த பொன்மலை சாமியார் ஸ்கூலில் (கிறுஸ்துவ நண்பர்கள் மன்னிக்க..அப்படித்தான் சொல்வார்கள்) ஆங்கில இலக்கணம் சொல்லித்தரும் வாத்தியார் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள நிறைய tips கொடுப்பார்களாம். ….
"ஐவி வந்தா ஷல்லு (I,WE,SHALL), மத்ததெல்லாம் வில்லு (WILL), மாத்தி போட்டா கொல்லு……….."மூனாவது பையன் தனியே வந்தா செருப்பால(S) அடி" (third person singular)...
மற்ற உள்ளூர் வாத்தியார்கள் சீக்கிரம் வீட்டுக்கு போகும்போது தினமும் ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் பூகோள வாத்தியார் (ஸ்கூலில் 'அய்யிரு') லேட்டாகத்தான் போவாராம். யாராவது பையன்கள் அவரை சைக்கிளில் பொன்மலை ஸ்டேஷனில் விட்டு விட்டால் அங்கேயே சந்தியவதானம் செய்து விட்டு ஸ்ரீரங்கத்துக்கு ரயிலை பிடிப்பாராம்.பஞ்சகச்சம் அங்கவஸ்திரத்துடன் வரும் அவர் " இந்த பூமியே அய்யரு மாதிரி தாண்டா.. அங்கவஸ்திரத்த இப்பிடி போட்டா அட்ச ரேகை.. இப்பிடி மாத்தி போட்டா தீர்க்க ரேகை.. புரியுதா?" என அவர் மாணவர்களுக்கு புரியும்படி விளக்குவாராம்.
தினமும் படிக்கிறேன் பேர்வழி என்று பொன்மலை ரயில்வே கான்டினில் ராவா தோசை, மைசூர் பாக், பில்டர் காபி, காசி அல்வா என வாழ்க்கை சந்தோஷமாக போனது. கணபதி CA பாஸ் செய்து பாம்பேயில் வேலையில் சேர்ந்து பிறகு இரண்டே வருடங்களில் அவனது உபயத்தில் நானும்…இதோ வந்துவிட்டேன்..

ச்சாய்.... ச்சாய்... சத்தம் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தேன். விடியற்காலை 4 மணிக்கு பம்பாய் வி.டி. ரயிலடியை ரயில் அடைந்த போது எனக்கு லேசான பயம் தொற்றிக்கொண்டது. மிரள மிரள விழித்தபடி நின்ற என்னை நோக்கி கணபதி கொஞ்ச நேரம் கழித்து வந்தான். 'வாடா... எப்பிடி இருக்கே..' என வலி உயிர்போகும்படி தோளில் அடித்தான். செம்பூர் போக உள்ளூர் ட்ரெயின் ஒன்றை பிடித்தோம். '6 மணிக்கு மேல டிரெயின்ல கூட்டத்த பாத்தேன்னா அசந்துடுவே' என்று அவன் சொன்னது ட்ரெயின் சத்தத்தில் என் காதில் விழவில்லை. ஓரளவு கூட்டமாகத்தான் இருந்தது.

ட்ரெயினில் எங்கு பார்த்தாலும் 'Abortion-Only Rs.70'..டிரான்ஸ் எலெக்ட்ரா கம்பெனியின் 'டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திசுருள்' விளம்பர வாசகங்கள். காந்தி குல்லா ஜீப்பா பைஜாமா உடுத்தி பக்கத்தில் அமர்ந்த மராட்டிக்காரன் ஒருவனை மிக மரியாதையுடன் பார்த்தேன். மெல்ல ஜிப்பாவில் கை விட்டு ஒரு சிறிய டப்பாவில் இருந்து கொஞ்சம் புகையிலை தூளை எடுத்து இடது கையில் வைத்தான். அதே டப்பாவை தலைகீழாக திருப்பி மூடியை திறந்து ஆள்காட்டி விரல் நகத்தால் சுண்ணாம்பை கீறி எடுத்து புகையிலை தூளுடன் சேர்த்து பெருவிரலால் தேய்த்து டப்...டப்பென்று தட்டி தோலை பறக்கவிட்டு மீதிப்பொடியை விரலால் செல்லமாக அள்ளி தன் கீழ் உதட்டுக்கு கீழே அவன் அடைத்த பொழுது எனக்கு நெஞ்சை அடைத்தது. என்னோடு சேர்ந்து இன்னும் இரண்டு பயணிகள் தும்மினார்கள். அதற்குள் காந்தி குல்லாக்காரன் ஆள்காட்டி மற்றும் நடுவிரலை உதட்டில் வைத்து விரல் gap இல் சீராக 'ப்பச்ச்ச்சத்தூ' என ஜன்னலை பார்த்து துப்ப.. சில துளிகளுடன் ஜில்லென என் முகத்தில் அடித்த ஈரக்காற்றில் "மலைச்சாரலில்.. இளம் பூங்குயில் " பாடலை நான் பாடாத குறைதான். திடீரென ஆர்மோனிய சத்தம்..கண்ணில்லாத வயதான கிழவர் ஆர்மோனியம் வாசிக்க கூடவே ஒரு சிறுமி 'ஔலாது வாலோன்.. பூலோங் கிலோன்' என பாடியவாறே நம் தொடையை தட்டி தட்டி உரிமையாக பிச்சை கேட்டாள். மற்றவர்கள் இல்லையென்று சொல்லாமல் ஸலாம் மட்டும் வைத்தார்கள். சுத்தமான ஹிந்தி பேசும் எனக்கு பம்பாயின் 'ஏ பாஜூ... ஓ பாஜூ..' மற்றும் 'அபன் கோ நை மாலும்' போன்றவை வித்தியாசமாக இருந்தது.

செம்பூர் ரயிலடியிலிருந்து 5 நிமிடத்தில் கணபதியின் ஃப்ளாட். அவனது நண்பர்கள் என்னை மேலும் கீழும் வினோதமாக பார்த்தார்கள். நாகராஜனுக்கு (CA மற்றும் ICWA) திருச்சி திருவானைக்காவல் கோவில் சமீபம் வீடாம். ஃபோர்ட் பகுதியில் A.F. பெர்குசன்னில் ஆடிட்டர் வேலை. கிருஷ்னரத்னம் (ICWA மற்றும் ACS ஆம்) சென்ட்ரல் வங்கி ப்ரொபெஷனரி ஆபீசர். நாகராஜன் நடு வகிடெடுத்து நெற்றியில் முடி புரள பேசிக்கொண்டிருந்த அந்த 10 நிமிடத்தில் 5 கெட்ட வார்த்தைகள். அதுவும் ஸ்பஷ்டமான உச்சரிப்புடன் சூடான பாலை டம்ளரில் ஊற்றி முட்டையை அடித்து கலக்கி குடித்துக்கொண்டே பம்பாய் பெண்களைப்பற்றிய சில புள்ளி விபரங்களை அவன் எடுத்து விடும்போது கிருஷ்னரத்னம் குளிக்கப்போக மனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். நமக்கும் கொஞ்சம் பயம் போய் இயல்பு நிலைக்கு வர முடிந்தது. சப்ஜெக்ட் அப்படி.. அந்தப்பக்கம் பாத்ரூமில் 'மணிகண்டா மணிகண்டா… மாமலை வாசா மணிகண்டா'.... பாடிக்கொண்டு கணபதி குளித்துக்கொண்டிருந்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் நானும் கணபதியும் ட்ரெயின் பிடிக்க செம்பூர் ஸ்டேஷனில் நின்றிருந்தோம். சுமார் 20 பேர் வெளியே தொங்கியவாறு ஒரு ட்ரெயின் வந்தது. "ரொம்ப கூட்டம் போல.. அடுத்த ட்ரெயின் பிடிக்கலாமா கணபதி?" என அப்பாவியாக நான் கேட்கும் முன், கணபதி என்னை ட்ரெயின் நுழை வாயில் அருகே தள்ளியவாறு நிற்க, பின்னாலிருந்து ஒரு கூட்டம் எங்களை அலாக்காக உள்ளே கொண்டுபோனது. நுழைவாயில் அருகிலேயே பீடிக்கட்டு மாதிரி நெருக்கமான கூட்டம். நானும் கணபதியும் கமல் ஸ்ரீதேவி மாதிரி பச்சக்கென்று ஓட்டிக்கொண்டு நின்றோம்.

நிறைய பேசினோம்..இனிமையான பாம்பே வாழ்க்கையின் ஈடு கொடுக்க முடியாத வேகம், 'மெஷினரி லைஃப்' என மற்ற மாநிலத்தவர் சொன்னாலும் அங்கு நிலவி வரும் அமைதியான வாழ்க்கை, பயமின்றி நடமாடும் இளம் பெண்கள், எத்தனை சம்பளமாக இருந்தாலும் அதற்கென வகுக்கப்பட்ட வாழ்க்கை முறைகள்.. அரசாங்கத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழ் CA க்கள் பெரும் பதவிகளில் கோலோச்சுவது… இப்படிப்போன எங்கள் பேச்சு மெல்ல அவ்வூர் பெண்டிர் பக்கம் தாவியபோது திருச்சியில் காய்ந்து கிடந்த நமக்கு உற்சாகம் கரைபுரண்டது. அதுபற்றி அப்புறம் தனியாக பேசுவோம்…. வெளியே குர்லா, சுன்னாபட்டி, கோலிவாடா, வடாலா, காட்டன் க்ரீன் போன்ற வித்தியாசமான பெயர்களில் ஸ்டேஷன்கள்.

கணபதி நேராக என்னை நாரிமன் பாய்ன்ட்டில் A.P.ஆஷர், சார்டர்ட் அகௌன்டென்ட்ஸ் என்ற இடத்தில் சேர்த்தான். வேலையில் இருந்துகொண்டே நான் CA ஃபைனல் பாஸ் செய்து வேறு 2 ,3 வேலைகள் மாறினேன். தினமும் மதியம் அரை மணிநேரம் கணபதியை நேரில் பார்த்து அரட்டை… மாலை சேர்ந்து ரயில் பயணம்….சனி ஞாயிறு முழுவதும் அவனுடன் முலுன்டு மற்றும் செம்பூரில் இருக்கும் அவனது அக்காக்கள் வீடு, மாதுங்கா கோவில், உடுப்பி க்ரிஷ்னா, கன்செர்ன் மற்றும் சொசைட்டியில் அருமையான இரவு சாப்பாடு, ஞாயிறு மதியம் சயான் மணீசில் வெ.சாம்பார், உ.கி. கறி, செம்பூர் அஹோபில மடம், செம்பூர் முருகன் கோவில் கீழ் தளத்தில் நெய்வேலி சந்தானம் கச்சேரி, என நிறைய ஊர் சுற்றினோம்.

அடுத்த சில வருடங்களில் கணபதி பஹ்ரைனுக்கு வந்து விட 8 வருட பம்பாய் வாசத்தை விட்டு நானும் 1994இல் பஹ்ரைன் வந்திறங்கினேன் கணபதியின் கைங்கரியத்தில்.. இன்றுவரை அதே கம்பெனி. நம்மை மாதிரியே கணபதிக்கும் 2 பையன்கள். குழந்தைகளும் எங்களை மாதிரியே லூட்டியடிப்பவர்கள். நாங்கள் 'பஹ்ரைன் ஸ்லோகா க்ரூப்' ஆரம்பித்து சுமார் 10 குடும்பங்கள் குழந்தைகளுடன் வாரமொருமுறை பஜன் மற்றும் ஸ்லோகங்கள் சொல்லி வாழ்க்கையை அடுத்த 20 வருடங்களுக்கு நகர்த்தினோம் .

தற்போது கணபதி சென்னையில் ஒரு பெரிய ஆடிட் நிறுவனத்தில்... CA மட்டுமல்லாது CISA, SAP போன்ற படிப்புகள் முடித்து ஆடிட்டில் இருந்து ITக்கு தாவி சைனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் டியூ டெலிஜன்ஸ் மற்றும் இம்பிளிமெண்டேஷன் என்று கலக்குகிறான். வாரமொருமுறை குறைந்தது அரை மணி நேரம் என்னுடன் தொலைபேசியில் அரட்டை.. வருடமொருமுறை நான் ஒருவாரம் வுட்லாண்ட்ஸில் தங்கும்போது, பக்கத்தில் நீல்கிரீசுக்கு அருகிலே தங்கியிருக்கும் கணபதி விடிகாலை 6 மணிக்கு வந்து என்னை கடற்கரைக்கு கூட்டிப்போவது வழக்கமாகி விட்டது.

சென்ற வருடம் எங்கள் ஸ்லோகா க்ரூப்பின் குட்டீஸ் சென்னையில் கூடினார்கள். சென்னை IIT இல் M.Tech முடித்து தற்போது stanford பல்கலைக்கழகத்தில் Ph.D பயிலும் கணபதியின் பையன், அவனது இரண்டாம் பையன் மற்றும் நண்பர் ராஜகோபாலின் பையனுடன் சேர்ந்து C.A final படிக்கும் என் பையன், மற்றும் MBBS, MBA, BE படிக்கும் மற்ற வாண்டுகள் எல்லோரும் கூடியது எங்களை வியக்க வைத்தது.

ஆருயிர் நண்பன் கணபதியின் பிறந்த நாளான இன்று... அவனது குலதெய்வம் தஞ்சை கணபதி அக்ரஹாரம் மஹாகணபதியின் அருள் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ என் வாழ்த்துக்கள்.