Wednesday, June 19, 2013

செம்பூர் ஸ்டேஷன்...


மெதுவாக காலை எழும்போது 7 மணி இருக்கும். பக்கத்தில் ஜன்னலுக்கு வெளியே பறவைகள் சத்தம். நல இதமான காற்று. பஸ், கார் சத்தமே கிடையாது. 27, 28 வயதுதான் என்பதினால் மனசுக்குள் எப்போதுமே ஒரு உற்சாகம், கற்பனைகள்.., அலுவலகத்தில் தினமும் நடக்கும்  சம்பவங்களை நினைத்து அசை போடும் நேரம்  எப்போதும் விடிகாலை தான்தூக்கம் விழித்த  பின்னும் மேலும் 20,30 நிமிடங்கள் அப்படியே படுத்து கிடப்பதிலே ஒரு சுகம் உண்டு. இதெல்லாம் பம்பாய் நகரில் என்றால் நம்ப முடிகிறதா? அங்கே ஏது நிசப்தமான இடம்? நாங்கள் 5,6 பிரம்மச்சாரிகள் சேர்ந்து செம்பூர் chedda  நகரில் ஒரு தனி ப்ளாட்டை   வாடகைக்கு எடுத்திருந்தோம். நேர் எதிரே செம்பூர்  முருகன் கோவில் உள்ளதுவீட்டில் நண்பர்கள்… எப்போதுமே கும்மாளம் தான். ஒருவன்  'மீண்டும் மீண்டும் வா' என சத்தமாக பாட்டு போட்டுக்கொண்டிருப்பான். ஒருவன் 'வரக்...வரக்... என்று ப்ரஷ் போட்டு ஜீன்ஸ் பாண்ட்டை துவைத்துக்கொண்டிருக்க, ஒருவன் அட்டகாசமாக  சமையல் (சாம்பார், நிறைய தேங்காய் துருவி போடு வெண்டிக்காய் கறி, கட்டித்தயிர்) செய்து கொண்டிருப்பான். நானும் ரங்குவும் ஆபீஸ் கதைகளை பேசிக்கொண்டிருப்போம்.

யார் இந்த ரங்கு? பாஷ்யம் ரங்கநாதன் என்கிற 'ரங்கு' என் ஆருயிர் நண்பன். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சமீபம் தான் அவன் வீடு. ஸ்ரீரங்கம்  அடையவளஞ்சான் தெரு, கீழ சித்திர வீதி என்று என் தாத்தா, அம்மா, மாமாக்கள் குடியிருந்தவர்கள். சுஜாதா, வாலி , பஞ்சாங்கம் புகழ்- குட்டி சாஸ்த்ரி வீட்டு பெண் நடிகை வனிதா இவர்கள் வீட்டுக்கதைகளை என் மாமாக்கள் மணிக்கணக்காக  சொல்ல கேட்டிருக்கிறோம் .   எனக்கு ரங்கு வீட்டில் தனி மரியாதை. ரங்குவின் அப்பா எனக்கு தனியாக கடிதம் எழுதுவார். 2 இன்லண்ட் லெட்டரில் எழுதும் சமாசாரத்தை ஒரே போஸ்ட் கார்டில் டைப்  செய்து  செய்து அனுப்புவார். உதவி .போஸ்ட் மாஸ்டர் ஜெனெரலாக  இருந்து ஓய்வு பெற்றவர்.

பழங்கால Gராமநாதன், SM  சுப்பையா நாயுடு,KV  மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா போன்றோர்  இசையில் எனக்கு மிகுந்த நாட்டம்…. நானும் ரங்குவும் தீவிர இளையராஜா ரசிகர்கள். 'பட்டுப்பூவே எட்டிபாரு' .. 'ஒரு மைனா  மைனா'..(உழைப்பாளி) போன்ற பாடல்களை அடிக்கடி முனுமுனுப்பான். ஆளை பார்த்தவுடனே ' டேய் நீ ஸ்ரீரங்கம் தானே?' என்று கேட்கத்தோன்றும்படியான முகம்….படிய வாரிய எண்ணெய் சொட்டும் சிகை. நீண்ட கூர்மையான நாசி. திக்கான மீசை. பெரிய கண்ணாடி, ப்ளீட் வைத்த  அதிக சுருக்கங்களுடன் baggi பான்ட். கொஞ்சம் கூச்சம், முகம் நிறைய சிரிப்பு. இதுதான் ரங்கு . வாங்கும் சம்பளத்தில் பாதியை உடைகளுக்கும், காசெட்டுகளுக்கும், காலனிகளுக்கும் செலவழிக்கும் என்னை ரங்கு மிகவும் ரசிப்பான். 'டேய் ரங்கு... நீ பாம்பே  காரன் மாதிரி இருந்தாத்தான் உனக்கு ஏதாவது மாட்டும்... இல்லன்னா  போயிட்டே இருப்பாளுங்க..' என்ற எனது அறிவுரையை பெருஞ்சிரிப்புடன் ரசிப்பான். (இப்படி சொன்ன எனக்கு ஒன்னும் மாட்டவில்லை என்பது வேறு விஷயம்).

ஒரு ஞாயிறு மதியம் ரங்குவை கட்டாயப்படுத்தி நாற்காலியில் உட்கார வைத்து அவன் தலை அலங்காரத்தை மாற்றுவதற்குள் போதும்போதுமென்றாகி  விட்டது. அவன் கதற கதற ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரை நீண்டிருந்த தலை முடியை கத்தரிக்கோலால் வெட்டி,இடது  வகிடை மாற்றி  நடு  வகிடாக்கி , மீசையை ட்ரிம் செய்ய வைத்து 'நடிகர் பிரஷாந்த் போல இருக்க பாரு' என்று கண்ணாடியை முகத்துக்கு நேரே காட்டியதும் ரங்கு புளகாங்கிதமடைந்தான். அடுத்து ஒரு சுபயோக தினத்தில் கொலாபா, பாந்திரா பகுதிகளுக்கு ரங்குவை கூட்டிப்போய் பைசன் T -ஷர்ட் ,ஜீன்ஸ் பான்ட், கொவாடிஸ் என ஷாப்பிங் spree செய்ய வைத்தேன்.  சிறிய சீப்பை பான்ட் பின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மணிக்கொருதரம் மயிரை சீவ வேண்டுமென்ற எனது கட்டளையை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டான்.  அடுத்த சில நாட்களில் ரங்கு ஏதோ ஒரு சிவந்த ஹிந்தி நடிகனைப்போல் மாறி விட்டான். அவ்வளவுதான்..  மற்ற room mates க்கு பொறுக்கவில்லை.. தக்கலை அக்ரஹாரத்தில்  இருந்து வந்த இஞ்சினீயர் பத்மநாபன் என்கிற Paddu, திருச்சி கம்பெனி செக்ரட்டரி- சந்துரு .. எல்லோரும் கிடுகிடுவென தாங்களை T-ஷர்ட்/ஜீன்சுக்குள் புகுத்திக்கொண்டார்கள். எல்லோருக்குமே எப்போதுமே ஏதோ கனவு மயம் தான். தலைக்கு எண்ணெய் தேய்ப்பது பெருங்குற்றம். எல்லோரும் பாண்ட்டில் சீப்பு சகிதம் நொடிக்கொருதரம்  தலையை சிலுப்பி ' ‘டேய் நாம திருந்த மாட்டோம் போல இருக்கே' என சிலாகித்தார்கள்.   'mene  pyar  kiya' படத்தில் பாக்யஸ்ரீ  ஒரு சீனில்  சல்மான் கானை நினைத்துக்கொண்டு .தானே தலையில் செல்லமாக அடித்துக்கொண்டு மெல்ல  சிரித்ததை நண்பன்  ரங்கு மிகவும் ரசித்தான் என்று சொல்ல, மறுநாள் அந்த சீனை பார்க்க நாங்கள் எல்லோருமே   தியேட்டரில் ஆஜர். வாழ்கை  இனிமையாக போனது..   

நான் C A .அவன் கம்பெனி செக்ரட்டரி…ACS. சம்பக்லால் இன்வெஸ்ட்மென்ட் என்ற மெர்சண்ட் பாங்கிங் நிறுவனத்தில் எங்களுக்கு வேலை.. நிறைய குஜராத்தி, கோவன், மற்றும் மங்கலூரிய இளம் பெண்கள் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் இடம். மதியம் லஞ்ச்சில் அவர்கள் உரிமையுடன் நம் தட்டில் இருந்து சப்பாத்தி கர்ரியை எடுத்து   'so pungent  yaar '  என்று சொன்ன அன்று மாலை நம் நண்பர்களுக்கு treat  தான்.. 'தேவையே இல்லாம இவளுங்க எதுக்குடா குறுக்கா நெடுக்க  போறாளுங்க?' என்ற ரங்குவின் கேள்விக்கு என்னுடைய பதில்... " அதுக்கு தாண்டா நம்ம இப்பிடியெல்லாம் ஸ்டைலா இருக்கணும்னு அடிச்சுக்கறேன்... இப்ப புருஞ்சுதா?' அதிலும் டக்....டக் என்ற கூர்மையான ஹை ஹீல்ஸ் சப்தத்துடன் மிக மிக அருகே வந்து மிகவும் விகல்பமாக நம் கண்களை நேரே  பார்த்து 'where  is  underwriting  file ? என்று அப்பெண்கள் கேட்கும்போது நமக்கு மூச்சு முட்டும். ரங்குவிற்கு மூச்சே நின்றுவிடும். அதற்கே  மதியம் ஐஸ் கிரீம் வாங்கி தருவான் (தர வைத்து விடுவேன்)   .  

ஆபீசுக்கு போகும்போதும்  branded   சட்டை, checkered  பாண்ட் , சனியன்று அரை நாள் என்பதால் T-ஷர்ட் ,காடுராய், டெனிம் பாண்ட்,மொக்காசினோ ஷூ, ரிம்லெஸ் கண்ணாடி என்று ரங்கு கலக்கினான். இதில் சிறப்பு என்னவென்றால் அவனது பெற்றோருக்கு ரங்கு இப்படி மாறியது ரொம்ப சந்தோஷம்.ஸ்ரீரங்கம் போனால் எனக்கு நல்ல வரவேற்பு.

அதுசரி  .. இதெல்லாம்  செய்து  ஏதாவது மார்வாடி, மராத்திய, குஜராத்தி பெண்ணின் மனதில் ரங்கு  இடம் பிடித்தானா என்று நீங்கள் கேட்கலாம். இல்லை.... ஆனால்  ஆச்சாரமான ஒரு தமிழ் பெண் இவன் மனதில் இடம் பிடித்தாள். அவளது அண்ணன்காரனும் நம்ம நண்பர்தான்.. நம்ம  ரங்குவுக்கு தான் பயமே  போய்டுச்சே! தைரியமாக  போய் பேசி மணம் முடித்தான். இரண்டு குழந்தைகள்தற்போது பாம்பேயில் இன்னும் மிகப்பெரிய MNC யில்  CFO வாக  இருக்கிறான்.    ரங்குவை சில வருடங்கள் முன்பு சந்தித்த போது, என்னை பார்த்தவுடனேயே விழுந்து விழுந்து சிரித்தான். 20 வருடங்களுக்கு  முன்பு அவன் தலை முடி ஸ்டைலை நான் மாற்றியதை நினைத்து...  அதே இளமை...அதே கடும் உழைப்பு.. VP (Finance ) & கம்பெனி செக்ரடரி..  நரிமன் பாய்ன்ட்  எக்ஸ்ப்ரஸ் டவர்ஸில் sea view  அலுவலகம்..


மிகவும் சந்தோஷமாக இருந்தது.. நடு வகிடு எடுத்து தலை சீவினா இவ்வளவு உயருவோமா?  

Monday, June 3, 2013

நீலவானம்…….
திருச்சி சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் பகுதி.. சிறியதும் பெரியதுமான கடைகளுக்கு நடுவே விஸ்வநாதன் ஆஸ்பத்திரி. .காரை விட்டு இறங்கி அம்மாவுடன் உள்ளே நுழைந்தேன். புறத்தே  இருந்து பார்க்க ஏதோ மருந்தகம் போல இருந்தாலும், உள்ளே நுழைந்தால் மிக பிரம்மாண்டமான கட்டிடம். ஒவ்வொரு சிகிச்சை பிரிவுக்கும் தனித்தனியே வார்டுகள். குறுகலான வழிப்பாதைகளின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக ஆஸ்பத்திரி சிப்பந்திகள் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.
பிளாஸ்டிக் வயர் கூடையில் பிளாஸ்க்கில் காபி, சில பேர் ஆப்பிள் பை, சிலர் ஹார்லிக்ஸ் பாட்டில் என்று விதவிதமாக நோயாளிகளை பார்க்க வந்த வன்னம் இருந்தனர்
கடைசியில் கதிர்வீச்சு பிரிவு. ரேடியேஷன் தெரபி கொடுக்குமிடம். சுமார் 10 அல்லது 15 பேர் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். நானும் அம்மாவும் அங்கே போய் அமர்ந்தோம். நோயாளிகள் யார் மற்றும் கூட வந்த உறவினர்கள் யார் என்பது பார்க்கும்போதே தெரிந்தது. . எல்லோரும் புற்று நோய்க்கு சிகிச்சை பெற வந்தவர்கள். அநேகமாக பாதி பேர் தலையில் முடியில்லாமல் அல்லது முடி உதிர்ந்த நிலையில் அல்லது பாதி முடி உதிர்ந்தது தெரியாமலிருக்க சிரம் மழித்து இருந்தனர். சிலர் சமயபுரம் மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டு மொட்டை போட்டிருந்தனர். யாருடைய முகத்திலும் ஒரு சலனமும் இல்லை.கவலையும் இருப்பதாக தெரியவில்லைமரணத்தின் வாயிலை நெருங்கி மறுபடியும் வாழ இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்குபவர்கள்.   
இஸ்லாமிய பெண்மணியொருவர் தன மகளுடன் வந்திருந்தார். வந்த 5 நிமிடங்களில் தன உடலை பக்க வாட்டில் சாய்த்து மகளின் மடியில் தலை வைத்து படுத்து விட்டார். தாயின் வலி மகளின்    முகத்தில்...மொட்டையுடன் மற்றொரு இளம்பெண்  கணவனுடன் வந்திருந்தார். அவருக்கு எங்கே புற்று நோய் என தெரியவில்லை. ஆனால் திடீரென்று கால்கள் இரண்டையும் தூக்கி முன் சீட்டில் நீட்டி வைத்து தலையை பின்னே சாய்த்துக்கொண்டார். அவருக்கு என்ன செய்கிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகவும் ஸ்ரமப்படுகிறார் என்பது நிச்சயம்.   எனக்கு பக்கத்தில் கோவில் குருக்கள் ஒருவர் அமர்ந்திருந்தார். கழுத்துப்புறம்  கருமையாகவும் வாயில் சமீபத்தில் விட்டொழித்த  வெற்றிலை புகையிலை காவி.... அவருக்கு தொண்டையில் புற்று நோய் வந்திருக்கலாம். எல்லோரும் நொடிக்கொருதரம் பையில் இருந்து  பாட்டில் எடுத்து தண்ணீர் குடிக்கிறார்கள்.
'புத்து நோய் தொத்து நோய் இல்ல கண்ணு' என்ற 'நீலவானம்' பட வசனம் நினைவுக்கு வந்ததால் நானும் தைரியமாக அவர்களுடன்  அமர்ந்திருந்தேன்.
கலைஞர் கருணாநிதி காப்புறுதி திட்டம் என போர்டு வைக்கபட்டிருந்தது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு  அவர்களே பாரத்தை பூர்த்தி செய்து  அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்து பணம் கிடைக்க உதவுகிறார்கள்.  ஒரு மட்டும் தெரிகிறது. அது பணத்திற்காக நடத்தப்படும் மருத்துவமனை அல்லமிகவும் தரம் வாய்ந்த மெஷின்களை வரவழைத்து முறையான சிகிச்சை அளிக்கிறார்கள்.  பணியாளர் ஒருவர் கூட வெட்டியாக கதையளந்துகொண்டு  அங்கங்கே நிற்கவில்லை. ஏதோ ஒரு அவசர வேலை நிமித்தம் ஓடிகொண்டே இருக்கிறார்கள்.
சரோஜினி.. என்று அழைத்ததும் அம்மா எழுந்து உள்ளே சென்றார்கள். அவர்கள் கொடுக்கும் உடைக்கு மாறிக்கொண்டு சிறிய கட்டிலில் படுக்கசொல்கிறார்கள். கட்டிலுக்கு கீழே வெளிச்சமான பல்ப். பிறகு வயிற்றுக்கு  மேலே x -ரே போன்ற மெஷின் வைத்து சுவிட்சை ஆன் செய்து விட்டு பணியாளர்கள் மூவரும் ரூமை விட்டு வெளியே ஓடி வந்து விடுகிறார்கள். சும்மார் 10 நிமிடம் கழித்து புடவைக்கு மாற்றிக்கொண்டு அதே மலர்ந்த முகத்துடன் அம்மா வெளியே வருகிறார்கள்.
காரில் போகும் வழியில் அவசியம் இளநீர் அருந்த வேண்டுமாம். நிறைய நீராகாரம் சாப்பிட வேண்டுமாம்.  தலை முடி உதிர்தல், தோல் கறுத்துப்போதல், வாந்தி போன்ற நிறைய side  effects  இருந்தாலும் chemo  தெரபி  மற்றும்  ரேடியேஷன் தெரபி  முடிந்தபின் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடலாம்  .
 கடந்த 3 மாதங்களாக ஆஸ்பத்திரி, டாக்டர்கள், ஸ்கேன், ultra  சவுண்ட், கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி என்று  அம்மா அலைந்துகொண்டிருந்தாலும் தன்னம்பிக்கை, தைர்யம், பாசிடிவ் மனப்பான்மை போன்றவைகளினால் மரணத்தை  இன்னும் சில வருடங்கள் தள்ளி போட்டிருக்கிறார்கள்.
கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பூங்கோதை, அவரது கணவர் டாக்டர் செந்தில், டாக்டர் ரவி அய்யங்கார், anasthetist , radiologist   சற்றும் முகம் சுளிக்காத செவிலியர்கள், நாங்கள் வெளி நாடுகளில் இருந்தாலும் மாமியாரை (தாய் போல பார்த்துக்கொண்ட) என் மைத்துனர் டாக்டர் மனோகர், முழுக்க  முழுக்க  உடனிருந்து இரவு பகல் பாராமல் தாயை பார்த்துக்கொண்ட என் சகோதரி லதா மனோகர்  என்னுடன் மருத்துவ செலவனைத்தையும் பகிர்ந்து கொண்ட என் சகோதரர்கள் ரவி (மஸ்கட்) மற்றும் பாபு (பாம்பே), எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவி உஷா மற்றும் உறவினர்கள் இவர்கள் அனைவரும்  தெய்வத்திற்கு நிகரானவர்கள்... 5 வருடங்கள் முன்பு இதே புற்று நோயினால் தன் மூத்த மகளை (என் அக்கா) இழந்து, 2 வருடங்கள் முன்பு கணவனையும் இழந்து, மரணத்தை தொட்டுப்பார்த்த என் அன்னையை மீட்டவர்கள்... 
என்னுடன் முகநூல் தொடர்புடைய பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்...! நீங்கள் 40 வயதை கடந்தவரா? ஆம் எனில் வருடம் ஒரு முறை அவசியம்  pap  smear, biopsy, mammography  போன்ற சோதனைகளை செய்து விடுங்கள். கணவர் முகநூலில் பிஸியாக இருந்தால் தங்கை, மைத்துனி என்று யாரையாவது துணைக்கு அழைத்துக்கொள்ளவும். நேரம் கிடைத்தால் 'நீலவானம்' திரைப்படமும் பாருங்கள்...
அடுத்த 10 நாட்களில் பூரண குணமடைந்து அம்மா  (82 வயது ) பஹ்ரைன் வரவிருக்கிறார்கள்...

Saturday, May 18, 2013

சட்டினியும் சிலோன் ரேடியோவும்


காலை 8 மணிக்கு சோம்பல் முறித்து படுக்கையில் இருந்து எழலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்கும்போது, ஹாலில் அப்பா சத்தமாக சிலோன் ரேடியோ போட்டுவிடுவார். C.A . இன்டர்மீடியட் முடிந்து ஆர்டிகிள்சும் முடிந்து பைனலுக்கு   படித்துக்கொண்டிருக்கும் நேரம்..
சமையல்கட்டில் அடுப்பில் இட்டிலி. அம்மா சட்டினி அரைத்துக்கொண்டிருந்தார்கள். சட்டினி என்றால் ஏதோ சுமீத் மிக்சியில் என நினைக்க வேண்டாம். அம்மியில் தேங்கா சில்லு.. குழவியால் இரு புறமும் மாறி மாறி நச் நச்சென்று தேங்கா சில்லை சப்பையாக்கி சர் சர்ரென்று அரைக்கும்போது பொட்டு கடலை, . மிளகாய், புளி எல்லாம் கதறியபடி விழுதாகி விடும்.செங்குத்தாக  குழவியை நிறுத்தி நொடியில் அதை நிர்வாணமாக்கி அம்மியில் உள்ள சட்டினி விழுதை பாத்திரத்துக்கு மாற்றி, தாளித்து  சுருண்ட கருவேப்பிலை சகிதம் கடுகு .பருப்பு  கமகமவென மனத்துடன் தேங்கா சட்டினி ரெடி.
ஒரு நாள் . மிளகாய் என்றால் மறுநாள்  வரமிளகாயில் தேங்கா சட்டினி... மற்றொரு நாள் பச்சை கொ.மல்லி போட்டு... இப்படி தினமும் விதவிதமான சட்டினி வீட்டில்..
அதை சாப்பிடும் விதம் எங்கள் வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி..
சன்னமாகவும் இல்லாமல் திக்காகவும் இல்லாமல் அம்மா வார்க்கும் தோசையை ( சன்னமாக/திக்காக என்று தோசையை சொன்னேன் .. அம்மாவை அல்ல)
அம்மாவுக்கு அப்போது 55 வயதிருக்கும்.. அம்மியில் சட்டினி அரைக்க போதிய பலமிருந்தது.
தோசைக்கு வருவோம்..
என் தம்பி ரவி தோசையை பக்கவாட்டில் இருந்து பிய்த்து சட்டினி மேல் பரப்பி மடித்து வாயில்...
என் அக்கா இட்டிலி விள்ளலை சட்டினி மேல் போட்டு உருட்டி லேசாக பிசைந்து மறுபடியும் உருட்டி பிறகு  வாயில்..(ஒரு கிண்ணம் சட்டினி அவளுக்கு போதாது)  
என் அப்பா ஏதோ 'இட்டிலிக்கும் சட்டினிக்கும் சண்ட வந்துச்சாம்' போக்கில் பேருக்கு தொட்டுக்கொண்டு  ஒரு fiduciary relation  கொடுப்பார்.  
முக்காவாசி நேரம் அம்மா கடைசியாக சாப்பிடும்போது அநேகமாக சட்டினி காலி... மிளகாய் பொடி தான்.
ஹாலுக்கு வருவோம்..
அப்பா அலமாரியில்  பழைய மர்பி ரேடியோ வைத்திருப்பார். அதற்க்கு எர்த் கொடுக்க ஒரு சிறிய  கண்ணாடி கிளாசில் தண்ணீர் ஊற்றி ஒரு ஒயரை நட்டு வைத்திருப்பார்.ரேடியோவில் உருப்படியாக ஒரு ஒளிபரப்பை கேட்கமாட்டார்.   அதன் முன் நின்றுகொண்டு மாறி மாறி எல்லா ஒளிபரப்புகளையும் மாற்றி மாற்றி கேட்பார்.    
நானும் தம்பி ரவியும் ஹாலுக்கு வந்ததும் சிலோன் ரேடியோவுக்கு மாற்றிவிடுவார்.
தம்பி ரவியைப்பற்றி ... திருச்சி நேஷனல் மாலை கல்லூரி..B .Com மற்றும் ICWA வேறு.. நம்மைப்போல அவனும் வெட்டி தான்....ஏன் என்று ஒரு வார்த்தை அப்பா கேட்கமாட்டார்.அவர் சட்டையில் வெறும் 10 ருபாய் இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு நானும் ரவியும் மன்னார்புரம் வெங்கடேஸ்வரா தியேட்டரில் 'பலே பாண்டியா' போவோம் (ரேய் ...ரேய்..ஒத்துரா.. என்று அவர் கத்துவது தூரத்தில் கேட்கும்)
எங்கே விட்டேன்? ஹாங்... சிலோன் ரேடியோ...    
இலங்கை ஒலிபரப்பு வர்த்தக சேவை என காலையில் தொடங்கி முழு நாளும் (மாலையில் செய்திகள் வாசிப்பது செல்வராஜ், பொன்னருவி, jaroka,மற்றும் இரு விவிதபாரதி தவிர) வீட்டில் ரேடியோதான் ..
'பிறந்த நாள் ... இன்று பிறந்த நாள்.. நாம் பிள்ளைகள் போலே தொல்லைகளெல்லாம் மறந்த நாள்'.... TMS இன் கணீர் குரல்.. அனேகம்பேருக்கு  அது எந்த படப்பாடல்  என்று தெரியாது
'உறவு என்ற வானத்திலே நாம் பறவையாகலாம்... உள்ளம் என்ற தோட்டத்திலே நாம் மலர்களாகலாம்' என்று நாம் மூவர் படத்தில் TMS ஜெய் சங்கருக்கு பாடியிருப்பார்  ..
'மாத்தளையிலிருந்து அக்கா, அக்கக்கா... நுவரெலியாவிலிருந்து அப்பா, அப்பப்பா, வவுனியாவிலிருந்து மதனி', என்று விதவிதமான உறவுக்காரர்கள் விரும்பிக்கேட்ட பாடல்கள்..
சிலோன் ரேடியோவில் மட்டும் தான் சில பாடல்களை கேட்க முடியும். விவிதபாரதிக்காரர்களுக்கு அப்படி ஒரு பாட்டு இருப்பதே தெரியாதென நினைக்கிறேன்...
உதாரணத்திற்கு சில:
1)முத்தமா.... கை முத்தமா... (TMS சுசிலா... படம்: விளக்கேற்றி வைத்தவள்)
2)இல் வாழ்வினிலே ஒளி  ஏற்றும் தீபமாய் (பராசக்தி: TS பகவதி, MH ஹுசைன்
3)குளிர்ந்திடும் ஓடையெல்லாம் தேனருவி கண்டதனால்.. (TMS... படம் நினைவிலில்லை)
4)ஜிகு  ஜிகு ஜிகு ஜீயாலக்கடி ஜியாலோ (காத்தவராயன்: சந்திரபாபு, ஜிக்கி)
5) வெண்ணிலா .. வெண்ணிலாவண்ண பூச்சூடவா ..வெண்ணிலா (ராணி சம்யுக்தா : TMS )
6) கொக்கர கொக்கரகோ சேவலே... (TMS , ஜிக்கி... 'இரும்புத்திரை' என்று நினைக்கிறேன் )        
விவிதபாரதிக்காரர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு முறை மன்னாதி மன்னன்  சுசிலாவின் 'கண்கள் இரண்டும் இன்று உன்னைக்கண்டு' போட்டுவிடவேண்டும்..
'நீயா' படம் சூப்பர் ஹிட் ஆனதே  நம் KS .ராஜாவினால்தான்...
'நீங்க யாரு' என்று ராஜாவே கேட்பார் பதிலுக்கு ஏதோ படத்திலிருந்து 'ராஜா' என்று வசனம் வரும்.
லலிதாவின் பாட்டுக்கு பாட்டு... அடக்கமான ஆண் குரலில் அப்துல் ஹமீது.    
'வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே.... ஏனோ அவசரமோ'  ..பாடலில் 'ஏனோ' வுக்கு பதில் 'ஏதோ' என்று சொல்லி விட்டதால் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறீர்கள் ... தோல்வியை  ஒப்புக்கொள்கிறீர்களா? (மனுஷனுக்கு பழைய பாடல்கள் அத்துப்படி)
மதியத்தில் 'ஹிந்திபாடல்கள்'.. என்று அறிவித்தவுடன்     ஷம்மி கபூர், ராஜ் கபூர்.பாடல்கள்..
ஜாபான்..(ஜப்பான் அல்ல)  லே கை தில்…. குடியா .. ஜா..பானுக்கி..பாகல் முஜே கர்தியா..
பிறகு விளையாட்டு செய்திகள்..(மாத்தளை திடலில் கைப்பந்துப்போட்டி..)
அடுத்து வருவது,.. நித்தி கனகரத்தினம் ...பொப்பிசைப்பாடல்கள்...
சின்ன   மாமியே உன் சின்ன  மகளெங்கே . .பள்ளிக்கு தான் சென்றாள்  படிக்க சென்றாளோ.. .
(நம்ம ஊர் 'நித்தி' சின்ன மகளை நிஜமாகவே தேடுவார்….வேணாம் வம்பு சார்...)  ..
பாட்டி வடை நரி பாடல்... (கடைசியில்  இது   இலங்கைக்காகம் என சொல்லி வடையோடு காகம் பறந்துவிடும்) .   ,
ராஜேஸ்வரி சண்முகமோ சச்சிதானந்தமோ ..  , புவனசுந்தரி, என்ற விதவிதமான அறிவிப்பாளர்கள்.. . .   
பொங்கும் பூம்புனல்... மறுபடியும் பழைய பாடல்கள்...
இரவு 10 மணிக்கு 'இரவின் மடியில்'....
அன்னை இல்லம்... மடிமீது தலை வைத்து விடியும் வரை தூக்கமோ... 
இதயக்கமலம்... மலர்கள் நனைந்தன பனியாலே...
போலீஸ்காரன்  மகள்... பொன்னென்பேன்.. சிறு பூவென்பேன்...
கற்பகம் ... உன்னைக்காணாத  கண்ணும் கண்ணல்ல ...
மாறியது நெஞ்சம் ...மாற்றியது யாரோ  ( . பா)
ஜானகியின் 'தூக்கமுன்  கண்களை தழுவட்டுமே' ....
ஆயிற்று.... 30 வருடங்கள்...
சட்டினியும் சிலோன்  ரேடியோவும் இன்னும் மறக்க   முடியவில்லை...
ரேடியோவை விடுங்கள்... போய் விட்டது.. ஆனால் அந்த சட்டினி இன்னமும் திருச்சி போனால் அம்மாவிடம் கிடைக்கிறது.. அதே சுவை... அதைவிட மிகுந்த அன்புடன்.. 
.