Monday, February 21, 2022

ப்ரொபசர் வெல்லூர்

 திருச்சி மெயின் கார்ட் கேட்..

வீஈஈஈஈஈஈ என ஹாரன் ஒலி எழுப்பி அசுர வேகத்தில் நம்மை கடந்து போகும் திருச்சி-ஶ்ரீரங்கம்-திருச்சி (TST) டவுன் பஸ் காரனை சபித்தபடி, வலது பக்கம் திரும்பினால் தெப்பகுளம் போஸ்ட் ஆபீஸ். மைதா பசையால் கவர்களை ஒட்டி அவசரமாக தபால் பெட்டியில் போடும் மக்களை கடந்து, வாசலுக்கு வெளியே நடை பாதை வரை சேர் போட்டு சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்து வந்து குவியும் வாடிக்கையாளர்களுக்கு 60 பைசாவிற்கு பழ ஐஸ்கிரீம், 40 பைசாவிற்கு சிரப் வழங்கும் மைக்கேல் ஐஸ்கிரீமை பார்லரை கடந்து, இந்தியா சைக்கிள் மார்ட், திருச்சி எக்ஸ்ரே கடைகளை தாண்டி, மட்டன்+மீன்+சாம்பார்+சிகரெட்+வெத்திலை+ஊதுபத்தி எல்லாவற்றையும் கலந்தடிச்சு ஒருவித ஆசுபத்திரி வாடையை காற்றில் பரப்பும் அசைவ உணவகத்தை கடந்து, ஜெகன்னாதன் புப் டெப்போ போர்டு போட்ட CA நண்பன் Aloysius இன் வீட்டை அடுத்து, படாரென கல் தடுக்கி குதித்து குடுகுடுவென நாலு ஸ்டெப் ஓடி, வலது பக்கம் சந்துக்குள் நுழைந்தால்...
பிரிட்டோ காலனி... இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தலா பத்து பதினைந்து மூங்கில் தட்டி போட்ட வீடுகள். ‘Jesus lives here’ மற்றும் ‘ஏசு அழைக்கிறார்’ வாசகங்களுடன் வாசலில் க்ரோட்டன்ஸ் செடி, லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர், சுவேகா மொப்பெட்டுகள். நம்மை பார்த்தும் குரைக்காமல் ‘அடப்போப்பா நீ வேற!’ என அங்கலாய்த்து முகத்தை திருப்பிக்கொள்ளும் கருப்பு சடை நாய்கள். அங்கே வசிப்பவர்கள் எல்லோரும் செயின்ட் ஜோசப்ஸ் காலேஜ் லெக்சரர், புரொஃபசர்கள். கல்லூரிக்கு சொந்தமான இடம். அதில் ஒன்று தான் ப்ரொபசர் வெல்லூர் வீடு.
‘நீ காஸ்டிங்க்கு (Costing) ரத்னம் காஸ்டிங் அட்வைஸரா படிக்கிறே?’ என யாரோ ஒரு பையன் கேட்க பதிலுக்கு இன்னொருத்தன் ‘இல்ல! நான் புரொபசர் வெல்லூர் சார் கிட்ட டியூஷன் போறேன்’ என்ற மேற்படி சம்பாஷனைகளை நீங்கள் கேட்க நேர்ந்தால் அந்த பையன்கள் CA அல்லது ICWA படிக்கிறான்கள் என்பதும் வெல்லூர் சாரிடம் படிக்கும் பையன் சீக்கிரம் பாஸ் செய்து விடுவான் என்பதும் பொதுவாக நடக்கக்கூடிய சமாச்சாரங்கள்.
ப்ரொபசர் வெல்லூர் சாரிடம் டியூஷன் படிக்க ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். பாட்ச் பாட்சாக கூட்டத்துடன் மாணவர்களை எடுக்காமல் வாசலில் ஏழெட்டு பேரை மட்டும் உக்காத்தி வைப்பார். உள்ளே குஸ்கா வாசனை. வெகு அக்கறையுடன் ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியாக சொல்லிக் கொடுப்பார்.
நடு வயிற்றுக்கு மேல் வரை தொள தொளவென வெள்ளை பாண்ட். கருப்பு பெல்ட். அதற்கு மேலே இரும்புத்திரை சிவாஜி போல் முழங்கை வரை மடித்த வெள்ளை முழுக்கை சட்டை. பாண்ட் பாக்கெட்டில் அடிக்கடி கை விட்டு அங்கு மட்டும் கொஞ்சம் அழுக்கு. ஸ்டெப் கட் மற்றும் காக்கிச்சட்டை கமல் போல நாம் டைட் பாண்ட் போடும்போது அவர் பஃப் வைத்து சம்மர் க்ராப்பில் இந்த உடையில் படு ஸ்டைலாக அந்தக்கால பாப்பிசை பாடகர் போல இருப்பார்.
வெற்று சுவற்றை பார்த்தவன்னம் அவர் சேரில் உட்கார்ந்திருக்க அவர் முதுகை பார்த்தபடி பின்னால் மாணவர்கள். புதிதாக அவரிடம் டியூஷன் சேரும்போது ‘ஒரு தடவ மார்ஜினல் காஸ்டிங் சாப்டரை பாத்துட்டு வந்துடு’ என முன் கூட்டியே சொல்லி விடுவார். ‘பாத்துக்கலாம்.. சரி.. விலாவாரியாகத்தான் சொல்லிக் கொடுப்பாரே!’ என நாம் படிக்காமல் போனால் தொலைந்தோம். கையில் புத்தகம் கூட இல்லாமல், கணக்குகள் சரளமாக அவர் வாயிலிருந்து வர நாம் நோட்டில் எழுதிக்கொள்ள வேணும்.
‘சரி! நீயே கணக்கை போடு’ என மெல்ல புளியை கரைப்பார். நாம் தட்டுத்தடுமாறி குஸ்கா வாசனையை பிடித்துக்கொண்டே ஒருவழியாக முடித்தவுடன் நம் நோட்டை வாங்கி பார்ப்பார் என்று நினைத்தால் அதுவும் கிடையாது. ‘நீயே படி’ என்பார். எழுதியதை நாம் படிக்க, step-by-step ஆக விளக்கி நம்மையே திருத்தி எழுத வைப்பார், இன்னும் வெற்று சுவற்றை பார்த்தபடி.
அடுத்த நாலைந்து மாதங்கள் இதே கதை தான். பையன்கள் சி.ஏ. பரிட்சை பாஸ் செய்து அடுத்த பாட்ச் ஓடிக்கொண்டிருக்கும். பாஸ் செய்த பின்னும் அவருக்கு காசு கொடுக்காமல் இழுத்தடிக்கும் மாணவர்களைப்பற்றி கவலைப்பட மாட்டார். பிறகு நேரில் பார்த்தாலும் கேட்க மாட்டார்.
பின் குறிப்பு 1: தற்போது மைக்கேல் ஐஸ்க்ரீம் பார்லர் அங்கு உள்ளதா தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். திருச்சி எக்ஸ்ரே உள்ளது. அசைவ உணவகம் போயிந்தி. பிரியாணி வாசனை மட்டும் உந்தி. பத்மா காபி போய் தற்போது போத்தீஸ். பிரிட்டோ காலனி இன்னும் உள்ளது என நினைக்கிறேன் புது வீடுகளுடன்.
பின் குறிப்பு 2: கோகுலாஷ்டமி குட்டி கிருஷ்ணன் படத்தையும் பதிவையும் பதித்த பின் சற்று நேரம் முன் நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் எனக்கு தகவல் அனுப்பியிருந்தார் ‘ 90 வயது

ப்ரொபசர் வெல்லூர் இறந்து விட்டார் என’.

நடு வகிடு.. ரங்கு.. செம்பூர்

காலை 7 மணிக்கு விழித்து 20,30 நிமிடங்கள் அப்படியே படுத்து கிடப்பதிலே ஒரு சுகம். ஜன்னலுக்கு வெளியே மரங்கள், பறவைகள் சத்தம், இதமான காற்று. பஸ், கார் சத்தமே கிடையாது. அப்ப 27, 28 வயதுதான் இருக்கும். மனசுக்குள் எப்போதுமே ஒரு உற்சாகம். அலுவலகத்தில் தினமும் நடக்கும் சம்பவங்களை நினைத்து அசை போடும் நேரம் அது. இதெல்லாம் இயந்திர வாழ்க்கை பம்பாய் நகரில் என்றால் நம்ப முடிகிறதா? பம்பாயில் இயந்திர வாழ்க்கை என்பதெல்லாம் மற்ற மாநிலத்தவர்கள் நினைத்துக்கொள்வது தான்.

நாங்கள் 5,6 பிரம்மச்சாரிகள் சேர்ந்து செம்பூர் chedda நகரில் ஒரு தனி ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். எதிரே செம்பூர் முருகன் கோவில். பக்கத்தில் அங்கங்கே பால்கனியில் சிகரெட்டுடன் பாலக்காட்டு மாமாக்கள். எங்கள் வீட்டில் நண்பர்கள் பட்டாளம் எப்போதுமே கும்மாளம் தான். ஒருவன் 'மீண்டும் மீண்டும் வா' என சத்தமாக பாட்டு போட்டுக்கொண்டிருப்பான். ஒருவன் 'வரக்...வரக்... என்று ப்ரஷ் போட்டு ஜீன்ஸ் பாண்ட்டை துவைத்துக்கொண்டிருக்க, ஒருவன் அட்டகாசமாக சமையல் (சாம்பார், நிறைய தேங்காய் துருவி போடு வெண்டிக்காய் கறி, கட்டித்தயிர்) செய்து கொண்டிருப்பான். நானும் ரங்குவும் காபியுடன் ஆபீஸ் கதைகளை பேசிக்கொண்டிருப்போம்.
யார் இந்த ரங்கு? பாஷ்யம் ரங்கநாதன் என்கிற 'ரங்கு' என் ஆருயிர் நண்பன். அவனுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம். எனக்கும் ஶ்ரீரங்கத்துக்கும் ஒரு நெருக்கம் உண்டு. ஸ்ரீரங்கம் அடையவளஞ்சான் தெரு, கீழ சித்திர வீதி என்று என் தாத்தா, அம்மா, மாமாக்கள் அங்கே குடியிருந்தவர்கள். சுஜாதா, வாலி , பஞ்சாங்கம் புகழ்- குட்டி சாஸ்த்ரி இவர்கள் வீட்டுக்கதைகளை என் மாமாக்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். ரங்கு வீட்டில் எனக்கு தனி மரியாதை. ரங்குவின் அப்பா எனக்கு தனியாக கடிதம் எழுதுவார். 2 இன்லண்ட் லெட்டரில் எழுதும் சமாசாரத்தை ஒரே போஸ்ட் கார்டில் நுனுக்கி நுனுக்கி டைப் செய்து அனுப்புவதிலிருந்து அவரின் சிக்கனம் தெரியும். உதவி போஸ்ட் மாஸ்டர் ஜெனெரலாக இருந்து ஓய்வு பெற்றவர்.
பழங்கால G.ராமநாதன், SM சுப்பையா நாயுடு,KV மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா போன்றோர் இசையில் எனக்கு மிகுந்த நாட்டம். நானும் ரங்குவும் தீவிர இளையராஜா ரசிகர்கள். 'பட்டுப்பூவே எட்டிப்பாரு' .. 'ஒரு மைனா மைனா' (உழைப்பாளி) போன்ற பாடல்களை அடிக்கடி முனுமுனுப்பான். ஆளை பார்த்தவுடனே 'டேய் நீ ஸ்ரீரங்கம் தானே?' என்று கேட்கத்தக்கனையான கருடாழ்வார் நாசி. படிய வாரிய எண்ணெய் சொட்டும் சிகை. திக்கான மீசை. பெரிய கண்ணாடி, ப்ளீட் வைத்த baggi பான்ட். கொஞ்சம் கூச்சம், முகம் நிறைய சிரிப்பு. இதுதான் ரங்கு.
வாங்கும் சம்பளத்தில் பாதியை உடைகளுக்கும், காசெட்டுகளுக்கும், விதவிதமான காலணிகளுக்கும் செலவழிப்பவன் நான். தினத்திக்கும் நானே இஸ்திரி போட்டு, செர்ரி ப்ளாசம் ஷூ பாலிஷ் போட்டு ஹிந்தி நடிகர்கள் நீலம் கோட்டாரி மற்றும் கோவிந்தாவை ரசிப்பவன் நான். மிடுக்காக உடை உடுத்தும் என்னை ரங்கு மிகவும் ரசிப்பான். 'டேய் ரங்கு... நீ பாம்பேக்காரன் மாதிரி இருந்தாத்தான் உனக்கு ஏதாவது மாட்டும்... இல்லன்னா போயிட்டே இருப்பாளுங்க..' என்ற எனது அறிவுரையை பெருஞ்சிரிப்புடன் ரசிப்பான். (இப்படி சொன்ன திருச்சிக்காரனான எனக்கு திருச்சியிலேயே ஒன்னும் மாட்டவில்லை என்பது வேறு விஷயம். சொல்லித்தான் வைப்பமே!).
ஒரு ஞாயிறு மதியம் ரங்குவை கட்டாயப்படுத்தி நாற்காலியில் உட்கார வைத்து அவன் தலை அலங்காரத்தை மாற்றுவதற்குள் போதும்போதுமென்றாகி விட்டது. அவன் கதற கதற ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரை நீண்டிருந்த தலை முடியை கத்தரிக்கோலால் வெட்டி, இடது வகிடை மாற்றி நடு வகிடாக்கி , மீசையை ட்ரிம் செய்ய வைத்து 'இளம் நடிகர் பிரஷாந்த் போல இருக்க பாரு' என்று கண்ணாடியை முகத்துக்கு நேரே காட்டியதும் தன் நடுவகிடை பார்த்து தாங்கொனா மகிழ்ச்சியுடன் புளகாங்கிதமடைந்தான்.
அடுத்து ஒரு சுபயோக தினத்தில் கொலாபா கேம்பிரிட்ஜ் மற்றும் பாந்திரா லிங்கிங் ரோடு பகுதிகளில் ரங்குவை கூட்டிப்போய் பைசன் T -ஷர்ட் ,லீ ஜீன்ஸ் பாண்ட், கொவாடிஸ் என ஒரே ஷாப்பிங் spree தான். சிறிய சீப்பை பாண்ட் பின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மணிக்கொருதரம் எடுத்து மயிரை சீவ வேண்டுமென்ற எனது கட்டளையை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டான். அடுத்த சில நாட்களில் ரங்கு நெற்றியில் கேசம் புரள நடு வகிட்டுடன் ஒரு சிவந்த ஹிந்தி நடிகனைப்போல் மாறி விட்டான்.
அவ்வளவுதான்.. மற்ற room mates க்கு பொறுக்கவில்லை.. தக்கலை அக்ரஹாரத்து பையன் இஞ்சினீயர் பத்மநாபன் என்கிற Paddu, திருச்சி கம்பெனி செக்ரட்டரி

சந்துரு .. எல்லோரும் கிடுகிடுவென தாங்களையும் T-ஷர்ட்/ஜீன்சுக்குள் புகுத்திக்கொண்டார்கள். எல்லோருக்குமே எப்போதுமே ஏதோ கனவு மயம் தான். எல்லா பெண்களும் தங்களையே பார்ப்பதாக ஒரு நினைப்பை அவர்களுக்குள் வெற்றிகரமாக விதைத்தேன். தலைக்கு எண்ணெய் வைப்பது? ம்ஹூம்.. ப்டாது.. அது பெருங்குற்றம். பாண்ட்டில் சீப்பு இல்லையென்றால் அது தெய்வ குத்தம். நொடிக்கொருதரம் தலையை சிலுப்பி சீப்பால் வாரனும். 'டேய் நாமளா இது! என எல்லோரும் சிலாகித்தார்கள். காதல் வருகிறதோ இல்லையோ காதல் நமக்கு வரனும் என்கிற ஏக்கம் வரனும் என தத்துவம் பேசி செம்பூர் நகர வீதியில் கட்டிங் சாய் குடித்து வெட்டியாக உலாவினோம். நட்ராஜ் தியேட்டரில் 'maine pyar kiya' படத்தில் பாக்யஸ்ரீ ஒரு சீனில் சல்மான் கானை நினைத்துக்கொண்டு தானே தலையில் செல்லமாக அடித்துக்கொண்டு மெல்ல சிரித்ததை நண்பன் ரங்கு ரசிக்க,மறுநாள் அந்த சீனை பார்க்க நாங்கள் எல்லோருமே தியேட்டரில் ஆஜர். வாழ்கை இப்படியே
இனிமையாக
போனது..
நான் CA. அவன் ACS கம்பெனி செக்ரட்டரி. பங்குகள் சம்மந்தப்பட்ட ஒரு மெர்சண்ட் பாங்கிங் நிறுவனத்தில் இருவருக்கும் வேலை. நிறைய குஜராத்தி, கோவன், மற்றும் மங்கலூரிய இளம் பெண்கள் பாப் கட்டுடன் கீச்சு கீச்சென நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் இடம். மதியம் லஞ்ச்சில் அவர்கள் உரிமையுடன் நம் தட்டில் இருந்து சப்பாத்தி கர்ரியை எடுத்து சுவைத்து 'so pungent yaar!' என்று சொன்ன அன்று மாலை நம் நண்பர்களுக்கு treat தான். 'தேவையே இல்லாம இவளுங்க எதுக்குடா குறுக்கா நெடுக்கா போய் நம்மள படுத்தறாளுங்க?' என்ற ரங்குவின் கேள்விக்கு என்னுடைய பதில்: "அதுக்கு தாண்டா நாம இப்பிடியெல்லாம் ஸ்டைலா இருக்கணும்னு அடிச்சுக்கறேன்... இப்ப புருஞ்சுதா?'
சுனிதா ராவத் என்றொரு பெண். (அழகான பெயர்களுடன் சேர்ந்து சகிக்காத குடும்ப பெயர்கள் எதற்கு! ராவத், மித்தல், தொத்தல் என..) குட்டியூன்டாக வடிவானவளாக இருப்பாள். குட்டையாக, நல்ல பூசின மேனியுடன் ஊத்துக்குளி வெண்ணெயை நினைவுக்கு கொண்டு வருவதே வாடிக்கை அவளுக்கு. நொடிக்கொரு முறை தன் அதரங்களை ஈரப்படுத்தி சிலிர்ப்பூட்டுவாள் கிராதகி. நமக்கு தான் பாழும் மனசு! அவள் என்னிடம் வந்து பேசினால் தூரத்தில் தன் க்யூபிக்கிளில் இருந்து தலையை தூக்கி பார்ப்பவன் ரங்கு. டக்....டக் என்ற கூர்மையான ஹை ஹீல்ஸ் சப்தத்துடன் நளினமாக நடந்து நமக்கு மிக மிக அருகே வந்து விகல்பமின்றி நம் கண்களை நேரே பார்த்து 'where is underwriting file ? என்று அவள் கேட்கும்போது நமக்கு மூச்சு முட்டும். ரங்குவிற்கு மூச்சே நின்றுவிடும். அதற்கே அவனுக்கு மதியம் மாவா ஐஸ்கிரீம் வாங்கித்தருவேன்.
ஆபீசுக்கு போகும்போதும் வாசனை திரவியங்கள் பூசி, branded சட்டை, checkered பாண்ட், சனியன்று அரை நாள் என்பதால் T-ஷர்ட் ,காடுராய், டெனிம் பாண்ட், மொக்காசினோ ஷூ, ரிம்லெஸ் கண்ணாடி, மறக்காமல் நடு வகிடு என ரங்கு கலக்கினான். இதில் சிறப்பு என்னவென்றால் அவனது பெற்றோருக்கு ரங்குவை இப்படி நான் மாற்றியது ரொம்ப சந்தோஷம். ஸ்ரீரங்கம் போனால் தட்டில் சீடை காபியுடன் நல்ல வரவேற்பு.
அதுசரி .. இதெல்லாம் செய்து ஏதாவது மார்வாடி, மராத்திய, குஜராத்தி பெண்ணின் மனதில் ரங்கு இடம் பிடித்தானா என்று நீங்கள் கேட்கலாம். அதான் இல்லை.... ஆனால் பம்பாயிலேயே ஆச்சாரமான ஒரு அய்யர் பெண் இவன் மனதில் இடம் பிடித்தாள். அவளது அண்ணன்காரன் Sridharan Rajaraman உம் என் நண்பர் குழாம் தான். நம்ம ரங்குவுக்கு தான் பயமே போய்டுச்சே! தைரியமாக போய் பேசி மணம் முடித்தான். இப்ப இரண்டு பெண்கள். பாம்பேயில் மிகப்பெரிய MNC யில் உயர் பதவியில் இருக்கிறான்.
நான் பஹ்ரைன் வந்த பின் ரங்குவுடன் சில வருடங்கள் தொடர்பு இல்லையெனினும், பிறகு பம்பாய் சென்றபோது அவனை பிடித்து விட்டேன். அதே நடு வகிடு. என்னை பார்த்தவுடனேயே விழுந்து விழுந்து சிரித்தான், பல வருடங்களுக்கு முன்பு அவன் சிகையழகை நான் மாற்றி நடு வகிடு எடுக்க வைத்ததை நினைத்து. சென்ற வாரம் கூட வெகுநேரம் பம்பாய் நாட்களைப்பற்றி கதைத்துக்கொண்டிருந்தோம். அதே இளமை...அதே கடும் உழைப்பு.. Executive VP & கம்பெனி செக்ரடரி. நாரிமன் பாய்ன்ட் பகுதியில் கடல் காட்சியுடன் அலுவலகம். பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூத்த அதிகாரிகளுக்கு நிதி சார்ந்த வகுப்புகள் எடுக்கிறான். டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் ரங்குவின் கம்பெனி லா கட்டுரைகள் என பிரபலம்.
மிகவும் சந்தோஷமாக இருந்தது. நடு வகிடு எடுத்து தலை சீவினா வாழ்க்கையில் இவ்வளவு உயர்வோமா?

 1981. ஜிலுஜிலுவென காற்றுடன் மரங்களடர்ந்த திருச்சி பொன்மலை ரயில்வே காலனி. இரவு உணவு முடித்து நிறைய குடும்பங்கள் வீட்டுக்கு வெளியே ஈசி சேரில். நானும் கணபதியும் அவனது வீட்டு மூங்கில் தட்டி போட்ட திண்ணையில் உட்கார்ந்து கனமான அக்கவுண்ட்ஸ் புத்தகங்களுடன் பேசிக் கொண்டும் நடுநடுவே படித்துக் கொண்டிருப்போம். சுமார் 11 மணி வாக்கில் ‘அம்பீ!’ என அழைத்த படி அவனது அம்மா இரண்டு டம்ளர்களில் போர்ன்விட்டா ஆற்றிக்கொண்டு வந்து கொடுப்பார்கள். அம்பீ என்பது நம்ம கணபதி தான். இந்த தடவையாவது சிஏ பரீட்சைல பாஸ் முடிச்சிட்டீங்கன்னா நல்லா இருக்கும். எவ்ளோ படிச்சாலும் அந்த சீஏ பரிட்சைல மட்டும் ஏன் மார்க் போட மனசு வரமாட்டேங்குது அவங்களுக்கு என காலி டம்ளரை எடுத்துக்கொண்டு உள்ளே போவார்கள்.

அப்பாவிடம் கணபதிக்கு எப்போதுமே பயம் கலந்த மரியாதை. சுருக்கமாக ஓரிரு வார்த்தை மட்டும் அவரிடம் பேசுவான். அம்மாவிடம் தான் எல்லோரும் உரிமையாக பேசிக் கொண்டும் கேலி செய்து கொண்டும் இருப்பார்கள். அப்பா கண்டிப்பானவர் என்பதால் அம்மாவிடமிருந்து நிறைய சலுகைகள் உண்டு.
பெரியவன் அண்ணா ரமணி RECயில் BE முடித்து BHELல் வேலை, மன்னி குழந்தைகளுடனும் கடைசிஅக்கா வாணியும் இருக்கும் அந்த வீட்டில் மூத்த பெண்கள் 3 பேருக்கு திருமணமாகி பம்பாய், சென்னை என செட்டிலாகி விட, அப்பாவும் ரிடையர் ஆனார்.
‘அம்பீ! அந்த நாடார் கடைக்கி செத்த போய்ட்டு வரியா’ என அம்மா கேட்க, பெயர் தெரியாத தன் ரோஸ் கலர் சைக்கிள் ஸ்டாண்டை படீரென உதைத்து கிளம்புவான் அம்பி. அந்த சமயத்தில் நான் எதிரே இருந்தால் வாடா என என்னையும் இழுத்துக்கொண்டு விசுக் விசுக் என பெடலை அழுத்துவான். ஆர்மரி கேட் எதிரே டீ குடித்துவிட்டு சாவகாசமாக கொஞ்சம் பேசிவிட்டு பொன்மலை அடிவாரத்திலிருக்கும் நாடார் கடைக்கு போவோம்.
வீட்டு நிர்வாகம் எல்லாம் அம்மாவினுடையது. அம்பி.. அம்பி.. என ஒரு நாளைக்கு நூறு தடவை கூப்பிடுவது வழக்கம். வாணிக்கு விமரிசையாக திருமணம் முடித்து அவர்களும் சென்னை பக்கம் போய்விட, கணபதியும் சீஏ பாஸ் செய்து பம்பாய் பக்கம் வந்து விட்டான். கூடவே நானும். அடுத்த சில வருடங்களில் (1989)அவனுக்கு பஹ்ரைனில் வேலை கிடைத்து இந்தப்பக்கம் வந்து விட, வழக்கம் போல அடுத்த சில வருடங்களில் நானும்.
1991ல் கணபதியின் அப்பா இறந்துவிட அறுபதே வயதில் தனித்து விடப்பட்ட அம்மா. ராணிப்பேட்டையில் பெரிய பையன் ரமணியுடனும், மற்றும் பெங்களூர், சென்னை என மகள்களுடனும் வசிக்கத்தொடங்கினார். 2001இல் குழந்தைகளின் மேற்படிப்பு (IIT coaching), அம்மாவின் தனிமை போன்றவைகளை மனதில் கொண்டு பஹ்ரைனை விட்டு கிளம்பினான் கணபதி. பஹ்ரைனை மட்டுமல்ல, கொழிக்கும் சம்பளத்துடனான வேலை, நிஸ்ஸான் கார், கம்பெனி ஃப்ளாட், வேலையாட்கள், என்னைப்போன்ற நண்பர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு குறிக்கோளுடன் மயிலாப்பூரில் செட்டில் ஆனான் அம்பி. அம்மாவிற்கும் ஒரே சந்தோஷம். சென்னை, ராணிப்பேட்டை என மாறி மாறி இருக்க ஆரம்பித்தார்கள்.
பேரன் பேத்திகள் ஒவ்வொருவராக வளர்ந்து அவர்களுக்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பாட்டியின் ஆசீர்வாதத்தோடு நடந்தேறின. ஆயிற்று அடுத்த அடுத்த இருபது வருடங்கள். வாழ்க்கையில் பெரியதாக ஆசைகள் எதுவும் இல்லாமல் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள் நலனுக்காகவே தன்னை முழுவதும் அற்பணித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலிருக்கும் எந்தெந்த பேரன் பேத்தியிடம் என்ன விஷயங்கள் பேசினால் சுவாரசியமாக இருக்கும் போன்ற சூட்சுமங்களை தெரிந்து கொண்டு அவர்களுடன் மணிக்கணக்காக சம்பாஷனை செய்வார்.
அவ்வப்போது தனக்கு பிடித்த சில டிவி நிகழ்ச்சிகள் பார்க்கும் போது மட்டும் ஐபிஎல் மேட்ச் பார்க்கும் பேரனிடம் செல்லமாக சண்டை. ஐ.ஐ.டி விடுமுறையில் பாட்டி.. பாட்டி என பின்னால் சுற்றும் பேரன் விக்னேஷ் (கணபதியின் மூத்த பையன்) Vignesh Ganapathi Subramanian அமெரிக்காவில் டாக்டரேட் படித்து ஆப்பிள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து அவனது திருமணத்தையும் முன்னின்று நடந்தி மகிழ்ந்தார். கணபதியின் மனைவி துர்கா இவரை தன் அம்மாவைப்போல பார்த்துக்கொண்டார்.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக எனக்கு அவர்களது குடும்பத்துடன் பழக்கம் என்பதால் என்னிடம் தனி பாசம் உண்டு. உஷாவிடம் அவ்வப்போது குழந்தைகள் நலம் விசாரிப்பார். சென்னை செல்லும் போதெல்லாம் நான் அவருடன் சில நிமிடங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம். சென்ற மாதம் அவரது பிறந்த நாளன்று இரவு 9 மணிக்கு பஹ்ரைனிலிருந்து போன் செய்து அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
‘ஆச்சு.. அம்மா 90 டச் பண்ணிட்டாங்க. இப்பவும் ஆக்டிவா இருக்காங்க. இப்பிடியே இருக்கனும்!’ என கணபதி சொல்லும்போதே ‘அவர் ஆரோக்கியமாக 100 ஆண்டுகள் வாழ நானும் உஷாவும் வேண்டிக் கொண்டோம். எந்தவித உடல் பாதிப்பும் இல்லாமல் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டும், நன்றாக பேசிக் கொண்டும், எல்லா உணவு வகைகளையும் மிக குறைந்த அளவோடு உண்டும், கண்பார்வை மங்காமல், ஆரோக்கியமான கை கால்களுடன் இயங்கிக்கொண்டிருந்தவர் கடந்த ஒரு வாரமாக மட்டும் கொஞ்சம் அசதியாக இருப்பதால் கடைசி பெண் வாணி துணைக்கு இருக்க வேண்டியதாயிற்று.
அப்படியும் முந்தாநாள் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர் மூச்சு விட சற்று சிரமம் இருப்பதாக சொல்லி, கணபதியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவர் அப்படியே சாய்ந்து விட்டார்.
நாள் முழுவதும் உட்கார்ந்து ராமஜெயம் எழுதி எழுதி முடிக்கப்பட்டு அறையில் கிடக்கும் நோட்டு புத்தகங்களும், தினமும் போடும் தினசரியின் குறுக்கெழுத்து (crossword) பக்கங்களும் அம்மா இன்னும் நம்முடனே இருப்பதை காட்டுகின்றன.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பேரன் பேத்திகளின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் பாட்டியிடம் தங்களுக்கிருந்த அன்பின் ஆழத்தை காட்டும்..
‘She spoke like one of us! Our moms seemed outdated!’
‘The story teller, the diplomat, the best chef, the defender, the coolest, the patient and adorable Paati, we did not expect to lose you!’
‘She was so cute with her wiggly belly and arms. She was peaceful when she left just as how she lived!’
‘She is such a spirited person who had knowledge about the current trend more than our parents’
‘She has touched many of our lives and we will miss her’
கடந்த வருடம் விக்னேஷின் தம்பி ஹேரம்ப குமாருடன்

பாட்டியின் சம்பாஷணை:
‘நீ சி.ஏ பாஸ் பண்ணினதுக்கப்பறம் தான் நான் சாகனும்பா’
‘அப்பன்னா இப்போதைக்கி நீ சாக மாட்டே பாட்டி! கவலைப்படாத’
சீஏ பரிட்சை எவ்வளவு கஷ்டமானது என்பதை அப்போது நகைச்சுவையுடன் சொன்ன ஹேரம்பா கடந்த ஜனவரி மாதம் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆனான். பாட்டியும் தான் சொன்னபடியே...

ஈகிள்ஸ்டார் ஶ்ரீதர்

 பஹ்ரைன் மனமா சைடு கிருஷ்ணங்கோயில் பக்கம் சாயரச்ச ஏழெட்டு மணி வாக்குல நீங்க போனாக்கா ‘என்ன சார் !’ ன்னு ராகமா கேட்டுட்டு சாமி பிரசாதத்தோட வெளிய வந்திட்ருப்பார்.

பூஜையெல்லாம் பண்ணி வைக்கிற ரொம்ப பிரபலமான வாத்தியார் சுந்தர் வீட்டு ஐயப்ப பூஜைல இரண்டாவது வரிசை ஆர்மோனிய பெட்டிக்காரர் பக்கத்துல ‘பால் மணக்குது..’ன்னு உச்ச ஸ்தாயியில பஜனை பாடிட்ருப்பார்.
வருஷப்பிறப்பன்னிக்கி ஷ்யாம் வீட்ல சண்டி ஹோமம், பூர்ண ஆஹுதிக்கு முன்ன ருத்ரம், சமகம்னு முன் வரிசைல உக்காந்துட்டு சத்தமா மந்திரம் சொல்லிட்ருந்தாலும் தூரத்துல என்னிய பாத்தாவுட்டு கண்லயே நமஸ்காரம் சொல்லுவாரு.
‘என்ன பண்ணினாங்க தெரியுமா! டீமானிடைசேஷன் வரப்போறத பத்தி மோடி வெறும் நாலு பேருக்கு மாத்தரம் தான் சொல்லி வெச்சிருந்தார் தெரியும்ல! ’னு இவர் அஞ்சாவது ஆளா நம்ம கிட்ட சொல்வார்.
‘அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்! என்ன காமெடி தெர்யுமா? எலக்சனுக்கு முன்னாடி தனியா அவன உள்ள கூப்ட்டு, ‘தபார்! பாஞ்சு சீட்டு தான் தருவோம். கூட்டணி வேணும்னா சொல்லு. இத்தன கோடி வாங்கிக்கோ! இல்லன்னா உம்மேட்டரை வெளிய உட்ருவோம்னு மெரட்டிட்டாங்க’ ன்னு அரசியல் நியூசை புட்டு புட்டு வைப்பார்.
‘ட்ரம்ப் இந்த தடவை ஷ்யூரா வந்திருவான் சார். நம்மாளுங்க அவன் வரக் கூடாதுன்னு வெளியேதான் சொல்லுவான், ஆனா அவனுக்கு தான் குத்துவான்’ ன்னு அமெரிக்க அரசியலையும் பிரிச்சி மேய்வாப்ள.
‘இப்பசத்திக்கு தினார்-டாலர் pegging போய்ட்டு தான் இருக்கும் சார். அவவன் எக்கச்சக்கமா பணம் போட்டு இன்வெஸ்ட் பண்ணியிருப்பான் இல்லியா! தினாரை கீழ போக உடுவானா’ன்னு வளைகுடா பொருளாதாரத்தையும் அலசுவாரு.
‘சா

ர்! நியூஸ் அப்பிடி தான் குடுப்பான். ஆனா கார்த்தி சிதம்பரத்தோட டீல் போட்ருப்பானுங்க. சும்மா காமெடி சார்’ ஜூனியர்விகடன் ஆந்தையார விட சுடச்சுட தகவல் கொடுப்பாரு.
‘உங்களுக்கு ஈகிள்ஸ்டார் ஶ்ரீதரை தெரியுமா’ன்னு பஹ்ரைன்ல யார்ட்டயாவது கேட்டு, அவர் இல்ல தெரியாதுன்னா அந்த ஆளு நேத்துதான் இந்த ஊருக்கு புதுசா வந்தவரா இருக்கும். அதே ஆள நாளைக்கே கேட்டா நல்லா தெரியுமேம்பார்.
‘என்ன சார்! உக்காந்து பேசலாமா? புதுசா சில ப்ராடக்ட்ஸ் வந்திருக்கு. டாலர் டெபாசிட். 2.5% இன்ட்ரஸ்ட் தறோம். 100% கேபிடல் கேரண்டீடு சார். ருப்பீ இன்னம் டெப்ரிஷ்யேட் ஆகும். உங்களுக்கு மூனு வருசத்துல நல்ல ரிட்டர்ன் கெடைக்கும். நம்ம வாச்சா போட்ருக்கான்’ன்னு தன்னோட மார்க்கெட்டிங் உத்தியால க்ளையண்ட் புடிச்சிடுவாரு.
பஹ்ரைன்ல பாங்க், இன்சூரன்ஸ் கம்பெனில நல்ல உயர் பதவில இருக்கற ஹை நெட்வொர்த் இன்டிவிஜுவல்ஸ் அல்லாரும் இவரோட க்ளையண்ட்ங்க.
காலை ஒன்பது மணியிலர்ந்து ராத்திரி 10 மணி வரைக்கும் ஆபிஸ் வேலையா ஓடி உழைக்கிறவரு. தெனமும் கிருஷ்ணன் கோயில் சாமிய சேவிச்சிட்டு ராத்திரி ஒன்பது மணிக்கு மேல வீட்டுக்கு வந்துட்டும் அரை மணி நேரம் பூஜை, அப்பறம் சாப்பாடு. அது முடிஞ்சி தூக்கமா? இல்ல.. அதுக்கப்பறமேட்டு தந்தி டீவி, ரங்கராஜ் பாண்டே, நேர்பட பேசு, சூப்பர் சிங்கர், ரஜினி படம் எல்லாம் பாக்கனுமே!
வருசத்துக்கு ரெண்டு அல்லது மூனு தபா அமெரிக்கா பறந்துடுவாரு. கொறஞ்சது நாலஞ்சு தடவ மெட்ராசு போயிடுவாரு. ஆள்வார்பேட்டை ஆண்டவரு. ஆறேழு மாசம் இங்கயே இருந்து NRI ஸ்டேட்டசை விடாம பாத்துப்பாரு.
கிரிக்கெட் மேட்ச், ப்ளேயருங்க ரெக்கார்டு, வேர்ல்ட் கப்பு நியூஸ் எல்லமே வெரல் நுனில.
பாஸ்கி, கிரேசி மோகன், மாது பாலாஜி எல்லாரோடயும் சின்ன வயசுலர்ந்து ரோட்ல கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சதுல இருந்து இப்பவும் சேப்பாக்கம் ஸ்டேடியத்துல பாஸ்கி தோள்ல கை போட்டு மேட்ச் பார்த்துட்ருப்பாரு.
ஒரு வாரமா டிவி பாக்காதவங்க அல்லது பேப்பர் படிக்காதவங்க இவரோட அரை மண்ணேரம் பேசனாக்க போதும். துருக்கி எர்டோகன் ஆட்சியிலிருந்து குஷ்பு பாஜக சேர்ந்ததின் அரசியல் பிண்ணனி வரை பிரிச்சி மேஞ்சடுவாரு.
நண்பர்கள்.. நண்பர்கள்.. நண்பர்கள்.. னு எப்பவுமே அரட்டை தான்.
அவங்க மனைவி ஜெயந்தி எப்பவும் சாந்தமும் அமைதியே உருவானவங்க. அவங்களுக்கு மதுரை. தமிழ்நாட்டு நியூஸ அவங்களும் எப்பவும் அப்டுடேட்டா வச்சிருப்பாய்ங்க. ஆனா கணவரப்போல ஆர்ப்பாட்டமில்லாம கூலா இருப்பாங்க. இங்க ஏதோ ஒரு பார்ட்டில நாங்க எல்லோரும் சேர்ந்து உட்காந்து சாப்டுட்டு இருக்கறப்ப, ஏதோ ஒரு வஸ்துவை கொண்டுவந்து வைக்க, ஜெயந்தி அதை எடுத்து வாய்ல போட்டுக்கிட்டாங்க. அப்பறம் யாரோ வந்து ‘ஐயய்யோ! அது சிக்கனா இருக்கப்போகுது. செக் பண்ணீங்களான்னு விசாரிக்க, ஃபுல் காண்டாகி சாமி வந்த மாதிரி ஆடி வாஷ்ரூம் பக்கம் ஓடுனாங்களான்னு நீங்க நெனைக்கலாம். ஆனால் அவங்க ‘என்னன்னு தெரியாம சாப்பிட்டாச்சு. அது உள்ளாறயும் போயாச்சு. இப்ப தெரிஞ்சி குதிச்சி என்ன பிரயோஜனம்!’னு சொல்லி கூலாக ஒரு டம்ளர் தண்ணிய குடிச்சிட்டு நடந்தாங்க. அவ்ளோ நிதானம்!
ஒரே பையன் விக்னேஷ். அப்பாவ விட பத்தடி கூட பாய்ற அளவுக்கு கலகலப்பானவன். அமெரிக்கால படிக்கிறான்.
96ல இவரு பேச்சிலரா பஹ்ரைன் வந்தாரு. மாமனாருக்கு சீர் செலவே வைக்கல. மாதாமாதம் எக்கச்சக்கமா பிசினஸ் புடிச்சி ஆபிசில் அன்பளிப்பு அல்லது பரிசா கொடுத்த ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின்,பீரோன்னு வீடு முழுக்க சாமான்கள் வச்சிருப்பாரு.
மகாப்பெரியவா பக்தர். ஆன்மிகத்தில ஈடுபாடு ஜாஸ்தி, இறைநம்பிக்கை தான் இந்த நாட்ட நல்ல முறைல வழிநடத்தும்னு நம்பறவர். எனது நெருங்கிய இனிய நண்பர்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Sridhar Kalyanaraman

கேப்டன் நீரஜ் ராஜகோபால்

 பஹ்ரைன் கல்ஃப் ஏர் விமானத்தில் இந்தியாவோ அல்லது ஐரோப்பா பகுதி பிரயாணம் செய்ய ஏறும்போது முதலில் நான் தேடுவது காக்பிட்டில் அன்றைய விமான ஓட்டி என் நண்பர்


கேப்டன்.நீராஜ் இருக்கிறாரா என.

மாதமொரு முறை சந்திக்கும்போது கூட அந்த மாதம் அவர் உலகின் எந்த பகுதி பறப்பார் என டூட்டி அட்டவனை பார்த்து சொல்வார். ச்சே! நாம் பெங்களூரோ துபாயோ பறக்கும்போது அவர் நம் பைலட்டாக வரக்கூடாதா என விரும்புவேன். நண்பர் என்பதால் அந்த காக்பிட் உள்ளே நம்மை கூட்டிச்சென்று காண்பிப்பார் என ஒரு குழந்தைத்தனமான ஆசை எனக்கு எப்போதும் உண்டு.
அரைக்கை வெள்ளை சட்டையுடன் கழுத்தில் டை, ஸ்டைலாக பைலட் தொப்பி, குறுந்தாடி, பைலட் பிரேம்நாத் போல தொப்பை இல்லாத ஆஜானுபாகு உடல் வாகு என அழகாக இருப்பார் நீரஜ். மற்ற நாட்களில் வீட்டில் அவரை பார்க்கும்போது ஜீன்ஸ் மற்றும் ஜிப்பாவில் சாந்தமா இருக்கும் இவரா அவ்வளவு பெரிய ராட்சத விமானத்தை ரன்வேயிலிருந்து சீராக மேலே எடுப்பதும், லாகவமாக ஓட்டி விமானத்தை கீழே இறக்குபவரா என வியப்பேன்.
விடியற்காலை கிளம்பி நாலைந்து மணி நேரம் துருக்கி நோக்கி பறந்து அன்று மாலை பஹ்ரைன் திரும்பி எங்கள் மாதாந்திர நிகழ்ச்சியில் புத்துணர்வுடன் கலந்து கொள்ளும் இவரை பார்க்க வியப்பு மேலிடும். ஏழெட்டு மணி நேரம் லண்டன் பறந்து அன்று நள்ளிரவோ மறுநாள் விடிகாலையோ நாஷ்டா துண்ண வீடு வந்து சேர்வார். 24 மணி நேரத்தில் எப்போது தூக்கம், எப்போது சாப்பாடு, எப்போது தன் மனைவி குழந்தைகளுடன்(2) செலவிடுவது எப்போது குடும்பத்துடன் ஹோட்டலில் சாப்பிடலாம் என துல்லியமாக திட்டம் செய்து மாறி மாறி வரும் காலச்சக்கரத்தை இலகுவாக மேற்கொள்ளக்கூடியவர். அப்படியும் வேலைப்பளு காரணமாக சில சமயம் அதிக மணி நேரங்கள் பறக்க வேண்டி வருமாம்.
15 ஆண்டுகள் மற்றும் 15000 மணி நேரத்திற்கும் மேல் வணிக விமானங்கள் ஓட்டிய அனுபவம் பெற்றவர். சில மாதங்கள் முன் டேபிள்டாப் ஓடுபாதையில் (காலிகட்) இருந்து சரிந்து விபத்துக்குள்ளான அந்த விமானத்தை இவரே சுமார் 20 முறை அதே ரன்வேயில் இயக்கியிருக்கிறாராம். ‘’அவசர நிலை ஏற்பட்டால் ஒரு கேப்டனுக்கு முதலில் தோன்றுவது மக்களை எப்படி காப்பாற்றலாம் என்றுதான். அவர் எடுத்த முடிவு சரியா, தவறா என்று பின்னர் விவாதங்கள் நடந்தாலும் அந்த நேரத்தில் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்'' என்கிறார் கேப்டன் நீரஜ்.
‘மணிக்கணக்கா பறக்கறீங்களே! அப்பல்லாம் உங்க மனநலை எப்பிடி இருக்கும் நீரஜ்!’ என வெள்ளந்தியாக கேட்கும் என்னிடம் ‘பழகிப்போச்சு ஶ்ரீதர்! நீங்க கார் ஓட்ற மாதிரியும் டிராயிங் வரையிற மாதிரி தான் நாங்களும் அனிச்சையாக விமானத்தை ஓட்டுவோம். ஆனா ரொம்ப கூடுதல் கவனத்தோட’ என சர்வ சாதாரணமாக சொல்லி பூரியை பிய்த்து சன்னாவில் முக்கி வாயில் தள்ளுகிறார்.
நெடுநெடுவென ஆறடி உயரம்.. எங்கள் நண்பர்களின் மாதாந்திர கெர்யோக்கி நிகழ்ச்சியில் மைக் பிடித்து மேடையேறினால் அசத்தலாக பாடுவார். SPB, ரஃபி சார் மற்றும் கிஷோர்தா பாடல்கள் அல்லது மனைவி பவித்ராவுடன் நல்ல கன்னட டூயட் பாட்டு பாடுவார். பவித்ராவும் கன்னடம், ஹிந்தி, தமிழ் என
அருமையாக
பாடக்கூடியவர். அம்மாவிடமே ஒட்டிக்கொள்ளும் இரண்டு வயது மகள் அழுதால் சட்டென குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டே மற்றொரு கையில் மைக்குடன் பாடுவார் பவித்ரா. நீரஜ் ஸ்மியூலில் தனிப்பாடல்கள் பாடி மற்றவர்களுக்கும் அழைப்பு விடுவார். பஹ்ரைன் க்ரௌவுன் ப்ளாசா ஹோட்டலிலும் மாதாந்திர கெர்யோக்கி நிகழ்ச்சியில் பாடக்கூடியவர். தம் பிடித்து உச்ச ஸ்தாயியிலும், மாறும் வித்தியாசமான ஸ்கேல்களையும் அசால்டாடாக பாடக்கூடியவர் நீரஜ். இவரது அப்பா சினிமா பிண்ணனிப்பாடகர். சென்ற வருடம் பஹ்ரைன் வந்திருந்தபோது எங்கள் நண்பர்கள் மத்தியில் பாடினார். யப்பா! என்ன குரல்வளம்! என்னா எனர்ஜி! கிஷோர் குமார் பாடல்களை அசாத்தியமாக பாடிய இவர் ஒரு பேங்கர். ‘டெல்லி கிஷோர் குமார்’ என டெல்லியில் பிரபலமாம்.
சென்னை பறக்கும்போதெல்லாம் விமான நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி ரோட்டில் ஏதோ ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் நள்றிரவு இறக்கி விடப்பட்டு ஐந்தாறு மணி நேரங்கள் தூங்கி மறுபடியும் விமான நிலையம் செல்ல வண்டி வந்து விடுமாம். அரக்க பறக்க, சென்னையிலிருக்கும் அப்பா அம்மாவிற்கு போன் போட்டு பேசக்கூட நேரமில்லாமல் ஓடுவாராம் நீரஜ்.
அதுசரி அப்பா அம்மா என்றேனே! இருவரும் நமக்கு தெரிந்த பிரபலங்கள் தான். அப்பா திரு.KS. ராஜகோபால் (Raju Satnagari) இளையராஜா அவர்களின் இசையில் பாடிய பிண்ணனிப்பாடகர். அம்மா பிரபல செய்தி அறிவிப்பாளர் திருமதி. சந்தியா ராஜகோபால் அவர்கள்.
நேரில் பார்க்கும்போதெல்லாம் முகநூலில் எனது ஓவியத்தையும் பதிவுகளையும் ரசித்து பாராட்டும் கேப்டன் நீரஜ்! இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
ப்ரோ..! நீரஜ் ராஜகோபால்

பஞ்சநதீஸ்வரன் வெங்கடேசன் பஞ்சாபகேசன் ஐயர்..

சட்டென CA படிப்பை முடித்த பட்டய கணக்காளன். பஞ்சு எனத்தான் சுருக்கமாக அவனை விளிப்போம். காரணம் சொல்லத்தேவையில்லை.

என் நெருங்கிய நண்பர்களில் ஒருவன்..
பஹ்ரைனில் ஒரு பெரிய குழுமத்தின் அக தணிக்கையாளர் (Internal Auditor) பதவியில் இருப்பவன். இவனது முகத்தையும் அதில் தெரியும் குறும்பு புன்னகையையும் பார்த்த மாத்திரத்தில் நீங்கள் சொல்லிவிடலாம் இவனுக்கு பூர்வீகம் தஞ்சையோ திருச்சியோ என. திருச்சி ஆண்டார் தெரு பையன். ஈஆர் மேநிலைப்பள்ளி மாணவன். சரியான அரட்டை பேர்வழி. நண்பர்கள் மத்தியில் கலகலவென சிரித்து லூட்டியடிப்பவன்.
பஹ்ரைனில் சாம்பியன் நகைச்சுவை பேச்சாளர்களில் ஒருவன் பஞ்சு. ICAB (Indian Chartered Accountants Bahrain) Toastmasters Clubஇன் அங்கத்தினர்களில் ஒருவன். சங்கத்தின் தலைவராகவும் இருந்தவன். இவனது நகைச்சுவை பேச்சைக் கேட்கவே அதிக எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொள்வர். அனைந்து டோஸ்ட்மாஸ்டர் சங்கங்களின் வருடாந்திர பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்காமல் இறங்க மாட்டான் பஞ்சு.
பஹ்ரைன் விமானநிலையத்தில் கூடுதல் சாமான்கள் (extra baggage) மற்றும் லபான் (தயிர்) கொண்டு செல்வதில் உள்ள கெடுபிடிகளை எவ்வாறு கையாண்டான் என்பதனைப்பற்றிய இவனது நகைச்சுவைப்பேச்சு முதல் பரிசை தட்டிச்சென்றதுடன் இன்றும் இவனை ‘Laban boy Panchu’ எனவே அழைக்கிறோம்.
பிள்ளை பிராயத்தில் திருச்சி பட்டர்வொர்த் ரோட்டில் சம்மர் க்ராப் செய்துகொள்ள அப்பாவினால் சலூனுக்கு விரட்டப்பட்ட அனுபவத்தை இவன் விலாவரியாக பேசப்பேச விலா

எலும்பு நோக சிரித்தோம். ‘பஞ்சநதீஸ்வரன் வெங்கடேசன் பஞ்சாபகேசன் ஐயர்’ என்கிற இவனது பெரிய்யய்யய் பெயரை படிக்க முடியாமல் தடுமாறிய உள்ளூர் அரபி மக்கள் மட்டுமல்ல நம் வட இந்தியர்களைப்பற்றியும் மற்றொரு போட்டியில் இவன் பேச உருண்டு புரண்டு சிரித்தவர்கள் பலர். பாஸ்போர்ட்டில் இவன் பெயரை ப்ரிண்ட் செய்ய முடியாமல் திணறிய தூதரகம், ஆஸ்பத்திரியில் இவன் பெயரை உச்சரிக்க முடியாமல் தடுமாறிய பெண் என இவனால் அவஸ்தை பட்டவர்கள் பலர்.
பஹ்ரைன் பாலைவனப்பகுதியில் குளிர்காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைத்து நிறைய குடும்பங்களுக்கு இரவு வாடகைக்கு விடுவார்கள். குழந்தைகளுடன் நிறைய குடும்பங்கள் அங்கு தங்கி ஆடல் பாடல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்தி மகழ்வார்கள். இது பொதுவாக எல்லா அரபு நாடுகளிலும் உண்டு. இது போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் பஞ்சு எங்களுடன் கலந்து கொண்டாலே கிரிக்கெட் ஆட்டம்,பாட்டு என செம்ம ரகளை தான். மனைவி நித்யாவும் பையனும் இவனைப்போலவே செம்ம அரட்டை தான்.
இனிய பிறந்தநாள் காணும் பஞ்சநதீஸ்வரன் வெங்கடேசன் பஞ்சாபகேசன் ஐயர் என்கிற பஞ்சு! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

மஹாலய பித்ரு ஸ்ரார்த்தம்

 ‘ஶ்ரீதரா! நாளைக்கி தேதி 6, மஹாலயா அமாவாசை.. மறந்துடாத!’ என கணபதி சென்னையிலிருந்து குறுஞ்செய்தி அனுப்ப, பெங்களூரில் பித்ருக்களுக்கு எங்கே தர்ப்பணம் செய்வது என விஜாரிக்க ஆரம்பித்தேன்.

சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் புரட்டாசி மாதம் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம். அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களும் மகாளய பட்ச காலம். கருட புராணம் மற்றும் விஷ்ணு புராணத்தில் மகாளய பட்சத்தின் மகாத்மியங்கள் விளக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் நம் மூதாதையர் நம்மை ஆசிர்வதிக்கவே பிதுர் லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வருவர் என்று நம்பப்படுகிறது. அச்சமயம் அவர்களுக்கு திதி தர்ப்பணம் அளித்து வணங்கி மரியாதை செலுத்தினால் அவர்களது ஆசீர்வாதம் கிட்டுவதோடு தோஷங்கள், தடைகள், நோய்கள் நீங்கி நன்மைகள் நடக்குமாம்.
சி.வி.ராமன் நகரில் எங்கள் கட்டிடத்திற்கு எதிரே சிவன் கோவில்.. பிரம்மாண்டமான சிவன் சிலை உண்டு. அங்கே குருக்கள் ஒருவரிடம் கேட்டேன். சுத்தமான சுந்தரத்தெலுங்கில் மாட்லாடின அவர், பக்கத்தில் HAL மார்க்கெட் ரகவேந்திரா மடம் மற்றும் ஹலசூர் ஏரி அருகே மஹா கணபதி ஆலயத்திலும் செய்கிறார்கள் என தகவல் அளிக்க, காலை 8 மணிக்கு ஹலசூர் கிளம்பினேன். துணைக்கு மனைவி உஷாராணி. ஒரே மழை வேறு.
பெங்களூர் பற்றி கொஞ்சம். பெங்களூர் ரோடுகள் முழுக்க பள்ளங்கள். தவிர, ரோட்டில் வண்டி ஓட்டும்போது நொடிக்கொரு தரம் பாம்.. பாம்.. கீ.. கீ… என ஹார்ன் அடிக்கனும் என காலையிலேயே சங்கல்பம் எடுத்துக்கொள்வார்கள் போலும். பெங்களூர் வாசிகள் சதா சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எந்த சாகர் ஹோட்டலில் நுழைந்தாலும் பொடி தூவிய மசால் தோசை, உ.வடை, சௌசௌ பாத் & காரா பாத் (உப்புமா கேசரி), காபி என வட்ட மேசையை சுற்றி நின்றுகொண்டே மொஸ்க்குகிறார்கள். திண்டி இல்லாத நேரத்தில் பாம்.. பாம் என ஹார்ன் அடித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பறந்தால் அவன் பெங்களூர்க்காரன்.
மாறி மாறி காங்கிரசும் பாஜகவும் ஆட்சி செய்தும் பெங்களூரில் பாலங்கள் பற்றாக்குறை, சீரான சாலைகள் இல்லை, சரியான உள்கட்டமைக்கப்பட்ட நகரமாக இல்லாமல் பழைய ஏரிகளை ஆக்கிரமித்து குடியிருப்பு கட்டிடங்கள். மார்வாடி, பஞ்சாபி, பிகாரி என எங்கு பார்த்தாலும் லெக்கீஸ் மற்றும் 3/4 பேண்ட் அணிந்த வட இந்தியர்கள். கூடவே சங்கிலியுடன் நாய் குட்டிகள். பாம்பே லஸ்ஸி, குல்ஃபி, தெருவுக்கு பத்து பேக்கரிகள், ஹாட் சிப்ஸ் கடைகள், கம்பியில் சுற்றும் செக்கச்செவேல் என சிக்கன் கிரில்லர்கள். பானி பூரி விற்றால் அடுத்த சில வருடங்களில் ஹோரமாவு பகுதியில் நிலம் வாங்கி விடலாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நம் இஷ்டத்திற்கு எந்த மொழி பேசினாலும் அதே மொழியில் பதிலளிக்கிறார்கள் பெங்களூர்வாசிகள். phone மாடி, type மாடி, check மாடி, enquire மாடி என சுலபமாக நாம் கன்னடம் பேசலாம், மாடியை சேர்த்துக்கொண்டு.
ஹலசூர் ஏரி அருகே கார் நிறுத்தத்தில் காரை போட்டு விட்டு சாலையை கடந்து லேக் வ்யூ மஹாகணபதி கோயில் வந்தடைந்தோம். நல்ல கூட்டம். அரிசி மாவு, எள், புஷ்பம், பலம், மஞ்சள் குங்குமம் என 180 ரூபாய்க்கு ஒரு கூடை வாங்கி, கோவிலருகே மேடையில் உட்கார்ந்து கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரிசி மாவில் நீர் விட்டு பிசைந்து எள் தெளித்து மஞ்சள் குங்குமம் தூவிய பிண்டங்களை வாழையிலையில் வைத்து வரிசையில் சேர்ந்துகொண்டோம். ‘மொத்தம் எத்தினி உருண்டைங்கோ என யாரோ கன்னட தமிழில் கேட்க, மற்றவர் மூனு பெருசு, மூனு சின்னது என விளக்க ‘ஆமாவா?’ என ஏக காலத்தில் மூன்று பேர் கத்தி அரிசி மாவை பிசைய ஆரம்பித்தார்கள். பிஸ்லேரி பாட்டிலில் தண்ணீர் பிடித்து ஒருவருக்கொருவர் தண்ணீர் பாட்டிலை பகிர்ந்து கொண்டு பிண்டங்கள் செய்ய, யாரோ ஒருவர் படாரென தண்ணீரை மாவில் கொட்டி தோசைக்கு மாவு கரைத்த மாதிரி… அசடு வழிந்தார்.
மொத்தம் 4 அந்தணர்கள் பெரிய மேடைகளில் அமர்ந்து மந்திரங்கள் சொல்ல, வரிசையில் வந்தவர்கள் ஒவ்வொருவராக எதிரே அவர் முன் உட்கார்ந்து சுமார் பத்து நிமிடங்களில் பித்ருக்களுக்கு மரியாதை செலுத்தி தம் கடமை முடித்து வெளியேறினார்கள். அடுத்து எங்களது முறை. எங்களுக்கு முன்னே இருந்த ஒருவர் மந்திரத்தை கவனிக்காமல் வரிசையில் உள்ள மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டும், தன் கடிகாரத்தை பார்த்துக்கொண்டும், வாத்தியார் ‘இங்க கவனிங்க.. கோத்ரம் சொல்லுங்கோ.. அப்பா இருக்காரா?’ என கேட்க, மேற்படி ஆசாமி ‘ம்..? என்னது?’ என விட்டேத்தியாக கேட்க, சூரீர் என வந்ததே கோபம் வாத்தியாருக்கு. ‘ நீங்கள்ளாம் எதுக்கு பித்ரு கார்யம் பண்ண வரனும்? பவித்ரத்த அந்த விரல்ல போடச்சொன்னா சுண்டு விரல்ல மாட்டி, பணம் கட்டுன ரசீதையும் பிண்டத்துக்குள்ள வச்சி உருட்டி, தாத்தா பேரே தெரீல..எங்கர்ந்து கொள்ளு பாட்டன் பேரு தெரீயப்போவுது’ என்றவுடன் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவரசமாக தாத்தா, பாட்டி பேரெல்லாம் சொல்லி பார்த்துக்கொண்டேன்.
‘கஜானனம் பூத கணாதி ஸேவிதம்’ என கணபதியை வணங்கிய பின் ஆசமனம் செய்து பவித்ரம் தரித்து ‘சுக்லாம்பரதம் விஷ்ணும்….’ என கடகடவென மந்திரங்கள் சொல்லி, ‘ஏ ஷாம் ந மாதா.. ந பிதா.. ந ப்ராதா.. ந சபாந்தவஹா’ என முன்னோர்களை நினைத்து கூடவே மந்திரம் சொல்லச்சொல்லி, பிண்டங்களில் ஜலம் தெளித்து, எள் இரைத்து முடித்து வைத்தார்.
கோவிலுக்கு வெளியே வந்து எதிரே ஏரியில் பிண்டங்களை கரைத்தோம். முனிசிபாலடி சிப்பந்திகள் நின்றுகொண்டு பிண்டங்களை மட்டும் நீரில் போடச்சொல்லி, மற்ற வாழையிலை, புஷ்பங்களை தனியாக ஒரு தொட்டியில் போடச்சொன்னர்கள்.
திருப்திகரமாக திதி தர்ப்பணம் முடிந்து எதிரே ஷாந்தி சாகரில் தோசை காபி வெட்டி விட்டு கன்னட ‘ராகி முத்தே’ (நம்மூர் களி) செய்யும் குக்கர் வங்க இந்திரா நகர் பக்கம் வண்டியை செலுத்தினோம்.
வருடந்தோறும் முன்னோர்களை மறவாது இக்கடமை ஆற்ற, வழிகாட்டலுடன் என்னை அறிவுறுத்தும் பால்ய நண்பன் கணபதிக்கு கோடானு கோடி நன்றி..